ஊர் முழுக்க நம்ம பவர் ஸ்டார் பவன் கல்யாணோட டிரக்க பத்திதான் பேசுது.. ராணுவ வாகனத்தையே தூக்கி சாப்பிட்ரும் போல!
திரை நடிகராக இருந்து அரசியலில் குதித்த பிரபலங்களில் 'பவர் ஸ்டார்' பவன் கல்யாணும் ஒருவர் ஆவார். இவர் வெகு விரைவில் ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு இப்போதே தயாராகிவிட்டார். அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் லோக்சபா தேர்தலுடன், சட்டமன்றத்திற்கான தேர்தலும் நடைபெற இருக்கின்றது.
இதை நோக்கிய தன்னுடைய பயணத்தையே இப்போதே பவன் கல்யாண் தொடங்கிவிட்டார். அண்மையில் ராகுல் காந்தி 'இந்திய ஒற்றுமை யாத்திரை' மேற்கொண்டிருந்தார். தமிழகத்தின் தென்கோடியான குமரி தொடங்கி காஷ்மீரின் ஸ்ரீநகர் வரை இந்த யாத்திரையை அவர் மேற்கொண்டார். இந்திய அரசியலில் மாற்றம் கொண்டு வரும் விதமாக இந்த யாத்திரையை ராகுல் மேற்கொண்டார்.

இதுமாதிரியான யாத்திரையையே ஆந்திர அரசியல் உலகில் மாற்றம் கொண்டு வரும் விதமாக பவர் ஸ்டார் தொடங்கி இருக்கின்றார். தன்னுடைய யாத்திரைக்காக அவர் பிரத்யேகமாக ஓர் வாகனத்தை தயார் செய்திருக்கின்றார். அந்த வாகனம் மிலிட்டரியில் பயன்படுத்தப்படும் வாகனங்களையே தோற்கடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
மிகவும் கம்பீரமான தோற்றம் மற்றும் பச்சை நிறம் ஆகியவை அந்த வாகனத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் உள்ளது. இந்த வாகனத்திலேயே தன்னுடைய ஜன சேனா கட்சிக்கு வாக்குகளை சேகரிக்க பவர் ஸ்டார் பவன் கல்யாண் புறப்பட்டு இருக்கின்றார். இந்த வாகனம் கடந்த ஆண்டே தேர்தலை முன்னிட்டு தயார் செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையில் இப்போது ஆந்திராவில் களப்பணியில் ஈடுபடுத்த தொடங்கி இருக்கின்றது. ராணுவ வாகனத்தையே மிஞ்சும் அளவிற்கு தயார் செய்யப்பட்டு இருக்கும் இந்த டிரக்கிற்கு 'வராஹி' எனும் பெயரை பவன் கல்யாண் சூட்டி இருக்கின்றார். ஏழு இந்து கடவுள்களில் ஒருவரின் பெயரே வராஹி ஆகும்.
இந்த பெயரையே தன்னுடைய வாகனத்திற்கு பவன் வைத்திருக்கின்றார். மேலும், தன்னுடைய யாத்திரைக்கு 'வராஹி விஜய யாத்திரை' என அவர் பெயர் சூட்டி இருக்கின்றார். பவன் கல்யாணின் இந்த யாத்திரை 10 நாட்களுக்கு நடைபெறும் என கூறப்படுகின்றது. மக்களின் குறைகளை கேட்டறிதல், பொதுக் கூட்டங்களில் பேசுதல் என அனைத்தையும் இந்த வாகனத்தில் இருந்தே அவர் மேற்கொள்ள இருக்கின்றார்.

பிரதிபடு, பிதாபுரம், காக்கிநாடா கிராமப்புற பகுதி, மம்முதிவரம், ராஜோலு, பி.கன்னவரம் மற்றும் நரசாபுரம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் தன்னுடைய வராஹி விஜய யாத்திரையை பவன் கல்யாண் மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த யாத்திரையின்போது முழுக்க முழுக்க அவர் வராஹியை மட்டுமே பயன்படுத்த இருக்கின்றனர்.
இதன் காரணத்தினாலேயே அதிக பாதுகாப்பான வாகனமாக வராஹி தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் இரும்புக் கோட்டையைப் போல் அது தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. பவன் கல்யாண் பொதுக் கூட்டத்தில் பேசும்போதும், மக்களைச் சந்தித்தவாறு செல்லும்போதும் பாதுகாப்பிற்காக வீரர்கள் பக்கவாட்டில் நிற்க ஏதுவாக இரும்பு ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகள் இதில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

வலதுபுறத்தில் மூவரும், இடது புறத்தில் மூவரும் நிற்க முடியும். பவன் கல்யாணின் வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பச்சை நிறம் பலரிடையே சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. பொதுவாக இந்த நிறத்தில் ராணுவ வாகனங்கள் மட்டுமே இருக்கும். மேலும், இந்த நிறம் பிரத்யேகமாக ராணுவ வாகனங்களுக்கு என்றே ஒதுக்கப்பட்டு இருக்கின்றது.
இத்தகைய நிறத்தை தன்னுடைய கேம்பைன் வாகனத்தில் நடிகர் பயன்படுத்தியதனாலேயே சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக வாகனத்தை பதிவு செய்த ஆவணம் அமைந்திருக்கின்றது. அந்த வாகனம் மரகத பச்சை நிறத்தையேக் கொண்டிருப்பதாக ஆவணம் தெரிவிக்கின்றது. ராணுவ வாகனங்களுக்கு ஆலிவ் பச்சை நிறமே ஒதுக்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், இந்த வாகனம் வேனிட்டி வாகனங்களைப் போல தனியார் பயன்பாட்டிற்கான கேம்பர் வாகனமாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. வேனிட்டி என்பது நடிகர்கள் பயன்படுத்தப்படும் கேரவன் ரக வாகனங்கள் ஆகும். கேம்பர் என்பது தங்கும் வசதி கொண்ட வாகனமாகும். மினி வீட்டைப் போல் சகல வசதிகளும் இதில் இடம் பெற்றிருக்கும்.
படுக்கை அறை, கழிவறை என அனைத்தையும் இதில் எதிர்பார்க்கலாம். இத்தகைய வாகனமாகவே பவன் கல்யாணின் வராஹியும் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால், பவன் கல்யாண் பயன்படுத்த இருப்பதனால் இன்னும் ஸ்பெஷலாகவே வராஹி வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. அதி-நவீன கூலிங் வசதிக் கொண்ட ஏசி, மின் விசிறிகள் மற்றும் லேட்டஸ்ட் டெக்னாலஜி உள்ளிட்டவற்றைக் கொண்ட வாகனமாக வராஹி தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
மற்றுமொரு சுவாரஷ்யமான விஷயம் என்னவென்றால் இந்த வாகனம் பவன் கல்யாணின் பெயரில் பதிவு செய்யப்படவில்லை. மாறாக 'தி ஹேண்ட்ஸ் டிரேடிங் பிரைவேட் லிமிடெட்' எனும் நிறுவனத்தின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த நிறுவனம் ஓர் டீ ஸ்டாலின் உரிமையாளருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவரே இந்த வாகனத்தை பவன் கல்யாணுக்கு தானமாக கொடுத்ததாக கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பவன் கல்யாண் நேற்றைய (ஜூன்14) தினமே தன்னுடைய யாத்திரையை வராஹியில் தொடங்கிவிட்டார். இந்த முறை அதிக இடங்களில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி வெற்றி வாகை சூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை கூடுதலாக்கும் பொருட்டே கம்பீரமான வாகனத்தில் தன்னுடைய பயணத்தை பவன் கல்யாண் தொடங்கி இருக்கின்றனர். இந்த வாகனம் அவரின் பயணத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









