இந்திய தொழிலதிபர்களில் இவர் வேற ரகம்!! சீன அரசுடன் கூட்டணி சேர்வது எல்லாம் பெரிய விஷயம்! எம்ஜி இனி நம்ம கையில்
மும்பையை சேர்ந்த ஜே.எஸ்.டபிள்யூ குழுமமும், சீனாவை சேர்ந்த எஸ்.ஏ.ஐ.சி மோட்டார் நிறுவனமும் இணைந்து இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தை மொத்தமாக வாங்க உள்ளதாக ஓர் பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது. இதன் மூலமாக சீன நிறுவனத்திடம் இருந்து கைமாற்றப்பட்டு, எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இனி ஓர் இந்திய குழுமத்தின் கீழ் செயல்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவின் மல்டிநேஷ்னல் நிறுவனங்கள் அடங்கிய குழுமம் ஜே.எஸ்.டபிள்யூ (JSW) ஆகும். 1982இல் மும்பையில் இந்த குழுமத்தை சஜ்ஜன் ஜிண்டால் நிறுவினார். பல்வேறு உள்நாட்டு & வெளிநாட்டு நிறுவனங்களை தனது குழுமத்தில் கொண்டிருக்கும் சஜ்ஜன் ஜிண்டாலின் அடுத்த டார்க்கெட் எம்ஜி மோட்டார் என்ற கார் தயாரிப்பு நிறுவனத்தின் மீது விழுந்தது.

எம்ஜி மோட்டார், சீனாவை சேர்ந்த எஸ்.ஏ.ஐ.சி மோட்டார் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஓர் பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமாகும். சீனாவில் செயல்படும் ஒரு நிறுவனத்தால், இந்தியாவில் அதன் கீழ் இயங்கும் கார் நிறுவனத்தை கவனித்து கொள்வது சிரமமானதாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஓர் இந்திய நிறுவனத்திடமே வழங்கும் முனைப்பில் எஸ்.ஏ.ஐ.சி மோட்டார் இருந்தது.
இதற்காக, ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்திடம் இதுகுறித்து எஸ்.ஏ.ஐ.சி தொடர்புக் கொண்டது. இதற்கு ஜே.எஸ்.டபிள்யூ குழுமம் உடனடியாக ஒப்புக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட 8 மாத பேச்சுவார்த்தைக்கு பிறகு சஜ்ஜன் ஜிண்டாலும், எஸ்.ஏ.ஐ.சி நிறுவனமும் இணைந்துள்ளன. இதன்படி, இந்தியவில் எம்ஜி மோட்டாரின் செயல்பாடுகளை இனி இந்த இரு நிறுவனங்களும் கூட்டாக இணைந்து கவனித்துக் கொள்ளவுள்ளன.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த அக்டோபர் மாத இறுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் எலக்ட்ரிக் கார்களில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ள எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் 32% முதல் 35% பங்கை சஜ்ஜன் ஜிண்டாலின் ஜே.எஸ்.டபிள்யூ குழுமம் வாங்க உள்ளதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன. 51% பங்கை தொடர்ந்து எஸ்.ஏ.ஐ.சி நிறுவனம் தக்க வைத்துக்கொள்ள உள்ளதாம்.

மீதியில், 8% பங்கு இந்திய நிதி நிறுவனங்களிடமும், எம்ஜி இந்தியாவின் ஊழியர்கள் & டீலர்களிடம் 6-7% பங்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக, சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான குழு பலமுறை சீனா சென்று நேரில் எஸ்.ஏ.ஐ.சி மோட்டார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
அதேபோல், எஸ்.ஏ.ஐ.சி நிறுவன அதிகாரிகளும் இந்தியாவிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பலக்கட்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாக, எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவன ஒப்பந்தம் சுமார் 1 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் கையெழுத்தாகிறது. தென்கொரிய நிறுவனமான கியாவை போல், எம்ஜி மோட்டாரையும் இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக கொண்டுவர எஸ்.ஏ.ஐ.சி மோட்டார் நிறுவனம் விரும்பியது.
அதற்காக சில பல நடவடிக்கைகளிலும் இறங்கியது. இருப்பினும், அத்தகைய நிலையை எம்ஜி மோட்டார் எட்டியதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதற்கிடையில், எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தை வாங்கும் விருப்பத்தில் சஜ்ஜன் ஜிண்டால் கொடுத்த ஆஃபர் இலாபகரமானதாக இருந்ததால், இந்த கூட்டணிக்கு எஸ்.ஏ.ஐ.சி நிறுவனம் ஒப்புக்கொண்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்னதான் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டாலும், எம்ஜி மோட்டார் இந்தியாவின் பெரும்பான்மையான பங்கு சீன எஸ்.ஏ.ஐ.சி மோட்டார் நிறுவனத்திடமே இருக்கவுள்ளது. இருப்பினும், இந்தியாவில் எம்ஜி மோட்டாரின் செயல்பாடுகளில் நேரடியாக சஜ்ஜன் ஜிண்டாலின் குழுமம் தலையிடும். இவை எல்லாம் ஓர் கணிப்பே. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் தான் இதற்கு குறித்த முழுமையான & தெளிவான விபரங்கள் கிடைக்கும்.
Source: Economic Times


Click it and Unblock the Notifications








