கார் ஓட்டும் போது பலருக்கும் இந்த கெட்ட பழக்கம் இருக்குது! புத்தாண்டோட இதை எல்லாம் மாத்திடுங்க!
கார் ஓட்டும் பலருக்கு ஆபத்தை விளைவிக்கும் சில கெட்ட பழக்கங்கள் இருக்கிறது. இது என்னென்ன பழக்கங்கள் இதை எப்படி மாற்றுவது என விரிவாகக் காணலாம் வாருங்கள்.
புத்தாண்டு பிறந்துவிட்டது ஒவ்வொருவரும் புத்தாண்டில் ஒவ்வொரு உறுதிமொழியை எடுத்துக்கொள்வார்கள். சில தங்களிடம் உள்ள கெட்ட பழக்கங்களைக் கைவிட வேண்டும். நல்ல பழக்கங்களைச் செய்யப் பழகிக்கொள்ள வேண்டும். இப்படியா ஒவ்வொரு உறுதியை எடுத்துக்கொள்வார்கள். இப்படியாக வாகன ஓட்டிகளுக்குச் சாலையில் வாகனம் ஓட்டும் போது சில கெட்ட பழக்கங்கள் இருக்கிறது. இந்த புத்தாண்டில் இந்த பழக்கங்களை எல்லாம் நீங்கள் விட வேண்டும் என உறுதி எடுத்துக்கொள்ளும் விதமாக இந்த பதிவை வழங்கியுள்ளோம்.

சன்ரூஃப் எட்டி பார்ப்பதற்கு அல்ல
இன்று வெளியாகும் பல கார்களில் சன்ரூஃப்கள் இருக்கிறது. இந்த சன்ரூஃப்களை பலர் வெளியே எட்டிப் பார்ப்பதற்காகப் பயன்படுத்துகின்றனர். ஆனால் உண்மையில் சன்ரூஃப் வெளியே எட்டிப் பார்ப்பதற்காக வழங்கப்படவில்லை. இது பகல் நேரத்தில் காருக்குள் வெளிச்சம் கிடைக்கவும், இரவு நேரங்களில் வானத்தை ரசிக்கவுமே சன் ரூஃப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் வழியாக கார் பயணத்தில் இருக்கும் போது எட்டிப் பார்ப்பது காரை விபத்தில் சிக்க வைக்க நேரிடும். இதனால் இந்த பழக்கத்தைக் கைவிடுங்கள்.
ராங் சைடு டிரைவிங்
தவறான பாதையில் பயணிப்பது இந்தியாவில் அதிகமாக நடக்கும் ஒரு விஷயமாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு நடந்த விபத்துக்கள் குறித்து சமீபத்தில் மத்திய போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி மொத்தம் 2823 பேர் ராங் சைடில் பயணித்ததால் மரணமடைந்துள்ளனர். நீங்கள் ராங் சைடில் பயணிப்பது உங்களது வாகனத்துடன் எதிரே வரும் மற்ற வாகன ஓட்டிகளின் வாகனத்தையும் விபத்திற்குள்ளாகும் ஒரு செயலாகும். இதை இனி செய்யக்கூடாது என முடிவெடுங்கள்.
சீட்பெல்ட் முக்கியம்
காரில் பயணிக்கும் பலருக்கு சீட்பெல்ட் அணிய வேண்டும் என்ற அக்கறை இல்லை. பயணம் எப்பொழுதுமே ஆபத்து நிறைந்தது தான். அதனால் பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டியது அவசியம். இதனால் எப்பொழுதும் சீட் பெல்டை அணிந்து கொள்ளுங்கள். என்னதான் மக்கள் சீட் பெல்ட் அணிந்து செல்வதை போலீசார் அறிவுறுத்தினாலும், சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தாலும் இந்த பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. பலரும் இன்றும் சீட்பெல்ட் அணியாமல் செல்கின்றனர்.
சாலை விபத்தில் கடந்த 2021ம் ஆண்டு கார் ஓட்டி பலியானவர்களில் 83 சதவீதம் பேர் சீட்பெல்ட் அணியாமல் இருந்துள்ளனர். இவர் சீட் பெல்ட் அணிந்திருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் இந்த புத்தாண்டு முதல் நீங்கள் காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணிந்தே செல்லுங்கள், பின் சீட்டில் அமர்ந்திருந்தாலும் சீட் பெல்ட் அணிந்து செல்லுங்கள்.
மித வேகம் மிக நன்று
அதிக வேகத்தில் பயணிப்பது எப்பொழுதும் ஆபத்தானது தான். சீக்கிரம் செல்ல வேண்டும் என்பதற்காகப் பலர் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமான வேகத்தில் பயணிக்கிறார்கள். இதனால் விபத்து அதிகம் ஏற்படுத்துகிறது. கடந்த 2021ம் ஆண்டு 23 சதவீதமான விபத்துக்கள் அதிக வேகம் காரணமாக நிகழ்ந்துள்ளது. இந்த விபத்துக்களில் மொத்தம் 40,450 பேர் மரணமடைந்துள்ளனர்.
லைட்களை தவறாகப் பயன்படுத்தாதீர்கள்
கார்களில் செல்லும் போது பலர் தேவையில்லாமல் ஹசார்டு லைட்டை பயன்படுத்துகின்றனர். பொதுவாக ஹசார்டு லைட் என்பது சாலையில் சென்று கொண்டிருக்கும் போது வாகனம் பழுதானால் வாகனத்தை நீங்கள் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் ஓரமாக நிறுத்த இந்த லைட்டை பயன்படுத்தலாம் ஆனால் பலர் இதைச் சாலையில் நேராகச் செல்ல வேண்டும் என்பதற்காகக் கூட பயன்படுத்துகின்றனர். இது முற்றிலும் தவறான ஒரு விஷயமாகும்.


Click it and Unblock the Notifications