ராசியே இல்லாத வருஷம்.. 2023ல் இத்தன கார்கள் சந்தையை விட்டு வெளியேறி இருக்கா! அந்த காரு வெளிய போனதுதான் சோகமே!
இந்த 2023 ஆம் ஆண்டை ஒட்டுமொத்த இந்திய வாகன உலகமே ஆஹா, ஓஹோனு புகழ்ந்துக் கொண்டிருக்கின்றன. காரணம், இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு நடப்பு 2023 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. மிக முக்கியமாக பண்டிகைக் காலமான அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வாகன விற்பனை புதிய வரலாற்று சாதனையையேப் படைத்து இருக்கின்றன.
இதனால்தான் வாகன உற்பத்தியாளர்கள் பலர் நடப்பாண்டை தலையில் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. அதேவேளையில், குறிப்பிட்ட சில கார் மாடல்கள் இந்த ஆண்டை ராசியே இல்லாத ஆண்டாகக் கூறிக் கொண்டிருக்கின்றன. பல ஆண்டுகளாக நல்ல விற்பனையைப் பெற்று வந்த கார் மாடல்களுக்கு இறுதி அத்தியாயம் இந்த ஆண்டிலேயே எழுதப்பட்டது.

இதனால்தான் குறிப்பிட்ட அந்த கார் மாடல்கள் 2023ஆம் ஆண்டை இகழ்ந்துக் கொண்டிருக்கின்றன. அப்படி என்னென்ன கார் மாடல்கள் நடப்பு 2023 ஆண்டில் சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்டன, அதாவது, விற்பனையில் இருந்து அகற்றப்பட்டன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
மாருதி சுஸுகி ஆல்டோ 800 (Maruti Alto 800): பல தசாப்தங்களாக இந்தியாவில் விற்பனையில் இருந்த இந்த கார் ஏப்ரல் 2023இல் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டது. இது ஓர் 800 சிசி எஞ்சின் கொண்ட கார் மாடல் ஆகும். மைலேஜை அதிகம் விரும்பும் கார் பிரியர்களுக்கு பிடித்தமான கார் மாடல் இதுவாகும்.

இதன் பராமரிப்பு செலவும் மிக மிக குறைவே ஆகும். புதிய பாதுகாப்பு விதி மற்றும் மாசு உமிழ்வு விதி உள்ளிட்ட காரணங்களால் இந்த கார் விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வெளியேற்றத்தால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்பும் விதமாகவே ஆல்டோ கே10 உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஹோண்டா சிட்டி டீசல், நான்காம் தலைமுறை சிட்டி மற்றும் அமேஸ் டீசல் (Honda City diesel/4th gen City & Amaze diesel): ஹோண்டா நிறுவனமும் புதிய மாசு உமிழ்வு விதியைக் காரணம் காட்டி சில கார் மாடல்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றி இருக்கின்றது. அந்தவகையில், அது விற்பனையில் மூன்று கார் மாடல்களை நடப்பாண்டில் அகற்றியது.

அதேவேளையில், நான்காம் தலைமுறை சிட்டியானது, ஐந்தாம் தலைமுறை சிட்டி வருகையின் காரணமாக வெளியேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹோண்டா ஐ-டிடெக் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட அமேஸ் காரை 2013 ஆம் ஆண்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. இந்த பத்தாண்டு வெற்றிகரமான பயணத்தைத் தடை செய்யும் விதமாகவே புதிய மாசு உமிழ்வு விதி இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஹூண்டாய் ஐ20 டீசல் மற்றும் வெர்னா டீசல் (Hyundai i20 diesel - Verna diesel): இந்த கார் மாடல்களின் வெளியேற்றத்திற்கும் டீசல் கார்கள் மீது எடுக்கப்பட்டு வரும் கடுமையான மாசு உமிழ்வு நடவடிக்கையே காரணமாக இருக்கின்றது. இதனால்தான் நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையிலும் இந்த கார்கள் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டன.

இந்தியாவில் நல்ல வரவேற்பை இந்த கார்கள் பெற்று வந்த நிலையில் இவற்றை அதிரடியாக விற்பனையில் வெளியேற்றி நடவடிக்கை எடுத்தது ஹூண்டாய். 2023 பிப்ரவரி மாதத்திலேயே இந்த கார் விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இந்த காரின் வெளியேற்றத்தால் தற்போது ஹேட்ச்பேக் பிரிவில் டீசல் எஞ்சின் கார் மாடல்களின் மிக மிக அதிகளவில் குறைந்துக் காணப்படுகின்றது.
சொல்லப்போனால் இந்த பிரிவில் தற்போது ஒரே ஒரு கார் மாடல் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. அது டாடா அல்ட்ராஸ் மட்டுமே ஆகும். ஹூண்டாய் நிறுவனம் ஐ20 டீசலைப் போலவே மற்றுமொரு கார் மாடலாக வெர்னாவை இந்தியாவில் இருந்து வெளியேற்றியது. இதன் வெளியேற்றும் புதிய தலைமுறையின் வருகைக்காக செய்யப்பட்டது ஆகும்.

தற்போது விற்பனையில் இருக்கும் புதிய தலைமுறை வெர்னாவில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் ஆகிய இரு மோட்டார் ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இந்த செடான் கார் மாடலில் டீசல் தேர்வு முற்றிலுமாக அகற்றப்பட்டு இருக்கின்றது.
டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா பெட்ரோல் (Toyota Innova Crysta Petrol): டீசல் கார்கள் அகற்றப்பட்டதற்கு பின்னால் புதிய மாசு உமிழ்வு காரணமாக இருக்கின்றது ஓகே, இந்த பெட்ரோல் கார் வெளியேற்றத்திற்கு பின்னால் என்ன காரணம் இருக்கின்றது என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பலாம்.
இதன் வெளியேற்றத்திற்காக இன்னொரு டொயோட்டாவின் தயாரிப்பே காரணமாக இருக்கின்றது. ஆமாங்க, புதிய இன்னோவா ஹைகிராஸின் வருகைக்கு வழி விடும் விதமாகவே இந்த கார் விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இன்னோவா ஹைகிராஸை ஹைபிரிட் மற்றும் ஹைபிரிட் அல்லாத வெர்ஷன் என இரு விதமான ஆப்ஷன்களில் இந்தியர்களால் வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதேவேளையில், டொயோட்டா நிறுவனம் இன்னோவா கிரிஸ்டாவை டீசல் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. விரைவில் இந்த கார் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது வெளியேற்றப்படும் எனில் அதற்கு பின்னால் மாசு உமிழ்வு விதியே காரணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் (Skoda Octavia/Superb): சமீபத்தில் இந்தியாவில் காற்று மாசுபாட்டிற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்கும் விதமாக புதிய பிஎஸ்6 ஸ்டேஜ் 2 விதி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த விதியின் காரணமாக ஸ்கோடா நிறுவனம் அதன் ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் கார் மாடல்களை வெளியேற்றியது.
பெரிய அளவில் இந்த கார்களுக்கு வரவேற்பு இல்லை. ஆகையால், இதை புதிய விதிக்கு ஏற்ப மாற்றி விற்பனைக்குக் கொண்டு வந்தாலும் அது எந்த அளவிற்கு வேலை செய்யும் என்பது உறுதியாக தெரியாத காரணத்தினால், அவற்றை அப்டேட்டிற்கு உட்படுத்தாமல் ஸ்கோடா வெளியேற்றியது. இருப்பினும் இந்த கார் எப்போது வேண்டுமானாலும் விற்பனைக்குக் களமிறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சிபியூ வாயிலாக 2024ஆம் ஆண்டில் விற்பனைக்கு வர இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரெனால்ட் க்விட் 800 (Renault Kwid 800): இந்தியாவில் பட்ஜெட் விலையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்த கார் மாடலாக க்விட் இருந்தது. இந்த காரையே ரெனால்ட் சமீபத்தில் விற்பனையில் இருந்து வெளியேற்றியது. இதன் வெளியேற்றத்திற்கு பின்னாலும் புதிய மாசு உமிழ்வு விதியே காரணமாக இருக்கின்றது. ஏப்ரல் மாதத்திலேயே இந்த கார் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டது.
நிஸான் கிக்ஸ் (Nissan Kicks): இந்தியாவின் புகழ்பெற்ற கார் மாடல்களான கிரெட்டா மற்றும் செல்டோஸ் ஆகியவற்றிற்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைத்து வந்த கார் மாடலே கிக்ஸ் ஆகும். ஆனால், இந்த போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் இதற்கு வரவேற்பு சற்று குறைவே ஆகும். இதன் விளைவாகவே அந்த கார் விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஹோண்டா டபிள்யூஆர்-வி மற்றும் ஜாஸ் (Honda WR-V & Jazz): ஹோண்டா நிறுவனம் டபிள்யூஆர்-வி கார் மாடலை கடந்த ஏப்ரல் மாதத்திலேயே விற்பனையில் இருந்து வெளியேற்றியது. இதைத் தொடர்ந்தே அதே மாதத்தில் ஜாஸ் காரையும் ஹோண்டா வெளியேற்றியது. இவை இரண்டும் விரைவில் அப்டேட் செய்யப்பட்ட மாடலாக விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் ஹோண்டா தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே சில டீசல் கார் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவி வந்த போதிலும் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டு இருக்கின்றன. கடுமையான மாசு உமிழ்வு விதி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதே அதற்கு பின்னால் இருக்கும் மிக முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









