நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லயே... மஹிந்திராவின் ஸ்பான்சரை பெற்றுள்ள 4 ஐபிஎல் அணிகள் - இவைதான்!!
மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் 2023 ஐபிஎல் போட்டிக்காக 4 அணிகளுடன் அதிகாரப்பூர்வ எஸ்யூவி பார்ட்னராக இணைந்துள்ளது. அந்த 4 அணிகள் என்னென்ன என்பதையும், இதுகுறித்து மஹிந்திரா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையையும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகளவில் மிக பெரிய மற்றும் பணக்கார கிரிக்கெட் கூட்டமைப்பு நமது இந்தியாவை சேர்ந்த பிசிசிஐ ஆகும். இதனாலேயே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-இல் பல முக்கிய பதவிகளில் கடந்த காலங்களில் இருந்து பல இந்தியர்கள் இருந்துள்ளனர். இப்போதும் அத்தகைய பதவிகளை வகித்து வருகின்றனர். இத்தகைய கிரிக்கெட் கூட்டமைப்பின் கீழ் நடத்தப்படுவதாலோ என்னவோ ஐபிஎல் போட்டிகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

2008இல் முதன்முதலாக துவங்கப்பட்ட ஐபிஎல் போட்டியின் 15வது சீசன் வருகிற மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக அகமதாபாத்தில் உள்ள பிரதமர் மோடி பெயரிலான புதிய கிரிக்கெட் மைதானத்தில் துவங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸும், சென்னை சூப்பர் கிங்ஸும் மோத உள்ளன. ஐபிஎல் போட்டியின் ஒவ்வொரு சீசனும் பல ஆயிரம் கோடிகளில் நடத்தப்படும் வணிகம் என்று தான் சொல்ல வேண்டும்.
அதாவது போட்டிக்கு இடையில் தோன்றும் விளம்பரங்களில் இருந்து மைதானத்தில் வீரர்கள் உடுத்தியிருக்கும் ஆடையில் பொறிக்கப்பட்டு இருக்கும் கார்ப்பிரேட் நிறுவனங்களின் லோகோ வரையில் எல்லாமே வணிகம் தான். ஐபிஎல் போட்டியின் கடந்த சில சீசன்களாக அதிகாரப்பூர்வ முதன்மை பார்ட்னராக டாடா குழுமம் இருந்து வருகிறது. இதனாலேயே, கடந்த சில ஐபிஎல் போட்டிகளின் போது மைதானத்தில் புதிய டாடா கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை பார்த்திருப்பீர்கள்.

டாடா குழுமம் மட்டுமின்றி, வேறு சில கார்ப்பிரேட் நிறுவனங்களும் சேர்ந்துதான் ஐபிஎல் போட்டியை நடத்தும். ஆனால் இதில் டாடா குழுமத்தின் பங்கு அதிகமாக இருப்பதால் 'டாடா ஐபிஎல்' என அழைக்கப்படுகிறது. அதேபோல் ஒரு சில நிறுவனங்கள் குறிப்பிட்ட ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அணிக்களுக்கான அதிகாரப்பூர்வ பார்ட்னராக இணையும். இந்த வகையில், மஹிந்திரா & மஹிந்திரா குழுமமும் 2023 ஐபிஎல்-க்காக 4 அணிகளின் அதிகாரப்பூர்வ எஸ்யூவி பார்ட்னராக இணைந்துள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அந்த 4 ஐபிஎல் அணிகளாக மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த 4 அணிகள் கலந்து கொள்ளும் போட்டிகளின் போது மைதானத்தில் தனது காரை மஹிந்திராவால் நிறுத்த முடியாது என்றாலும், போட்டி முடிந்த பின் இந்த 4 அணி வீரர்களில் சிறப்பாக செயல்பட்டவருக்கு மஹிந்திராவால் பரிசுகளை வழங்க முடியும்.

அத்துடன், இந்த 2023 ஐபிஎல் தொடரில் மேற்கூறப்பட்ட 4 அணிகள் மூலமாக எவ்வாறு வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்தி கொள்வது என்பதை பற்றியும் மஹிந்திரா ஆலோசித்து செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மஹிந்திரா தனது டீலர்ஷிப் மையங்களில் மேற்கூறப்பட்ட 4 அணிகளின் நட்சத்திர வீரர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்க முயலும் என்பது உறுதி.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
எந்தவொரு கார்ப்பிரேட் நிறுவனத்திற்கும் அதன் வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய பிணைப்பை கொண்டு இருத்தல் அவசியமாகும். அதிலிலும், மஹிந்திரா போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு கட்டாயம் ஆகும். அதற்காகவே இவ்வாறான ஆஃப்-பீட் செயல்பாடுகளில் மஹிந்திரா குழுமம் ஈடுப்பட உள்ளது. இத்தகைய செயல்கள் பிராண்டின் மதிப்பையும் அதிகப்படுத்தும்.


Click it and Unblock the Notifications








