இப்படி ஒரு காரை இதுவரை எந்தவொரு இந்திய நிறுவனம் தயாரிச்சது இல்ல.. வெளிநாட்டு தயாரிப்புகளே மண்டியிடனும்!
மஹிந்திரா நிறுவனம் அதன் பிஇ ரேல் இ கான்செப்ட் (Mahindra BE Rall E Concept) எலெக்ட்ரிக் கார் மாடலை உலக அளவில் வெளியீடு செய்திருக்கின்றது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சமீபத்தில் மின்சார வாகனங்களுக்கான கண்காட்சி நடைபெற்றது.
ஹைதராபாத் இ மோட்டார் ஷோ எனும் பெயரிலேயே இந்த வாகன கண்காட்சி நடைபெற்றது. புதுமுக மின்சார வாகனங்களைக் காட்சிப்படுத்துவதற்கு என பிரத்யேக நிகழ்த்தப்பட்ட ஷோவே இது ஆகும். பிப்ரவரி 8 ஆம் தொடங்கிய இ-வாகன ஷோ பிப்ரவரி 10 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த வாகன கண்காட்சி வாயிலாகவே மஹிந்திரா அதன் பிஇ ரேல் இ கான்செப்ட் மாடலை வெளியீடு செய்தது.

இந்த காரை நிறுவனம் உலகளவில் காட்சிப்படுத்துவது முதல் முறையல்ல. இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த வாகனம் காட்சிப்படுத்தப்பட்டுவிட்டது. ஒட்டுமொத்தமாக ஐந்து கான்செப்ட் மாடல்களை அது அப்போது காட்சிப்படுத்தியது. இவற்றின் உற்பத்தி பணிகள் வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளன. இவற்றின் இந்திய வருகையை உறுதிப்படுத்தும் விதமாக மஹிந்திரா நிறுவனம் தற்போது ஹைதராபாத் இ மோட்டார் ஷோவை பயன்படுத்தி குறிப்பிட்ட சில கார் மாடல்களை காட்சிப்படுத்தியது.
ஆமாங்க, மஹிந்திரா நிறுவனம் இந்த வாகன கண்காட்சியில் இன்னும் சில கார் மாடல்களையும் காட்சிப்படுத்தியது. அவை அனைத்தை காட்டிலும் பிஇ ரேல்-இ மிகவும் அட்டகாசமான தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது. இது ஓர் ஆஃப்-ரோடு ரக வாகனம் ஆகும். இதனை பிஇ.05 எலெக்ட்ரிக் காரை தழுவியே மஹிந்திரா உருவாக்கி இருக்கின்றது. இதன் தோற்றத்தை பார்த்தால் விற்பனைக்காக இந்த கார் கொண்டு வரப்படுமா என்பதே கேள்விக் குறியாக இருக்கின்றது.

அந்தளவிற்கு மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்துடன் அது காட்சியளிக்கின்றது. மெல்லிய இழை போன்ற பகல் நேரத்தில ஒளிரும் மின் விளக்கு, வட்ட வடிவ ஹெட்லைட் மற்றும் அதிக கட்டுமஸ்தான பேனல்களைக் கொண்ட முன் பக்க பம்பர் என காரின் முரட்டுத் தனமான தோற்றத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதுதவிர அதிக கரடு-முரடான டயர்களையும் இந்த காரில் சேர்த்திருக்கின்றது.
இத்துடன், எந்த மாதிரியான பாதையையும் சமாளிக்கும் திறன் கொண்ட, அதாவது எளிதில் நெளிந்துவிடாத, அதிக உறுதியான வீல்கள் பிஇ ரேல்-இ எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அம்சங்களே காரின் முகப்பு மற்றும் பக்கவாட்டு பகுதியை பலமடங்கு முரட்டுத் தனமானதாகக் காட்சியளிக்கச் செய்கின்றன. இதுபோன்று இன்னும் பல அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன. குறிப்பாக,மேற்கூரையில் பொருட்களை தாங்கும் கேரியர் என பற்பல அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் மிக அதிகம். எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளிக்க வேண்டும் என்பதற்காக மிக அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் இந்த காரில் நவீன கால அம்சங்கள் பல வழங்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு மிக சிறந்த உதாரணமாக ஃப்ளஷ் டைப் டூர் ஹேண்டில்கள் உள்ளன. நவீன கால கார்களில் மட்டுமே இந்த ரக ஹேண்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன.
முகப்பு மற்றும் பக்கவாட்டு பகுதியைபோல் பின்பக்கம் இல்லை. மிகவும் க்ளீனான அமைப்பை பின் பகுதி தாங்கி நிற்கின்றது. இந்த காரில் என்ன மாதிரியான பேட்டரி பேக் மற்றும் மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்த தகவலை மஹிந்திரா நிறுவனம் வெகு விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மஹிந்திரா நிறுவனம் இந்த காரை இங்க்ளோ பிளாட்பாரத்தை தழுவியே உருவாக்கி இருக்கின்றது.
இந்த பிளாட்பாரத்தை நிறுவனம் ஃபோக்ஸ்வேகன் குழுமத்துடன் இணைந்தே உருவாக்கி இருக்கின்றது. இங்க்ளோ என்பது உலக நாடுகளுக்கான மேட் இன் இந்தியா கார் என்பதே பொருள் ஆகும். இந்த தளத்தில உருவாக்கப்படும் வாகனங்கள் ஸ்கேட் போர்டைபோல் இருக்கும். ஸ்கேட் போர்டுகளில் எப்படி சக்கரங்கள் நான்கு மூலைகளில் இணைக்கப்பட்டிருக்குமோ, அதுபோலவே இவையும் இருக்கும். மேலும், பேட்டரிகள் அனைத்தும் தரை தளத்தில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும். இந்த யுக்தியைப் பயன்படுத்தியே பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








