என்னங்க பெரிய ஸ்கார்பியோ... மஹிந்திரா பொலேரோ காரை தான் பலரும் விரும்புறாங்க... 1 வருடத்தில் இவ்ளோ விற்பனையா!!
மஹிந்திரா பொலேரோ எஸ்யூவி (Mahindra Bolero SUV) கார்கள் ஒரு வருடத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி அசத்தியுள்ளன. இதுகுறித்தும், இந்த மஹிந்திரா எஸ்யூவி கார் குறித்தும் முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் என்று எடுத்து பார்த்தோமேயானால், அதில் நிச்சயம் மஹிந்திராவும் ஒன்றாக இருக்கும். அப்படிப்பட்ட இந்த இந்திய ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு விற்பனையில் தற்போதைக்கு நம்பிக்கைக்குரிய மாடலாக இருப்பது பொலேரோ எஸ்யூவி ஆகும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த சில வருடங்களாகவே மஹிந்திரா பிராண்டில் அதிகம் விற்பனையாகும் காராக பொலேரோ விளங்குகிறது.

இதன் விளைவாகவே, விற்பனையில் சோபிக்காத டியூவி300 காரின் விற்பனையை நிறுத்திவிட்டு, அதேபோன்றதான காரை பொலேரோ நியோ என்ற பெயரில் கடந்த 2021 ஜூலை மாதத்தில் மஹிந்திரா அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் முதல்முறையாக பொலேரோ எஸ்யூவி வாகனம் 2000இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகையில் பார்த்தோமேயானால், கடந்த 23 வருடங்களில் 14 இலட்சத்திற்கும் அதிகமான பொலேரோ கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.
இதில் கடைசி 1 லட்ச பொலேரோ கார்களின் விற்பனையை கடந்த மார்ச் 31ஆம் தேதியோடு முடிந்த 2022-23 நிதியாண்டில் மஹிந்திரா நிறுவனம் பெற்றுள்ளது. பொலேரோ வாகனங்களின் விற்பனையில் இந்த முன்னேற்றத்திற்கு பொலேரோ நியோ மாடலின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், பொலேரோ நியோ கார்களை இளம் தலைமுறையினரே அதிக எண்ணிக்கையில் வாங்குவதாகவும் மஹிந்திரா தெரிவித்துள்ளது.

முரட்டுத்தனமான தோற்றத்துடன் பெட்டகம் போன்று வடிவமைக்கப்படும் மஹிந்திரா பொலேரோ கார்கள் பாடி-ஆன்-ஃப்ரேமில் உருவாக்கப்படுகின்றன. ஏகப்பட்ட தொழிற்நுட்பங்களுடன் வழங்கப்படும் பொலேரோ கார்களின் கேபினில் ஏகப்பட்ட அன்றாட பயன்பாட்டு வசதிகள் இடம்பெறுகின்றன. எம் ஹாவ்க் 100 என்ஜினை பெறும் பொலேரோ கார்கள் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லக்கூடியவைகளாக விளங்குகின்றன.
இதனால் நகர்புற பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கும் ஏற்ற வாகனமாக பொலேரோ விளங்குகிறது. பொலிரோ நியோ அல்லாமல், கடந்த 23 வருடங்களாக விற்பனையில் இருக்கும் கிளாசிக் தோற்றத்திலான பொலேரோ வாகனத்தின் விற்பனையும் 2021-22 நிதியாண்டை காட்டிலும் கடந்த 2022-23 நிதியாண்டில் 28% அதிகரித்துள்ளது. 7 பயணிகள் அமரக்கூடிய வகையில், எந்தவொரு பாதையிலும் இயங்கக்கூடிய எஸ்யூவி வாகனத்தை யாருக்கு தாங்க பிடிக்காமல் இருக்கும்.

இதனாலேயே இந்தியாவின் முக்கியமான எஸ்யூவி கார்களுள் ஒன்றாக பொலேரோ விளங்குகிறது. இந்த காரின் விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு இருப்பது குறித்து மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் தலைவர் வீஜய் நக்ரா கருத்து தெரிவிக்கையில், "14 இலட்சத்திற்கும் அதிகமான மொத்த விற்பனை உடன் பொலேரோ வெறும் எஸ்யூவி என்பதை விட மேல் உயர்ந்துள்ளது. குறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இது வீட்டின் ஓர் அங்கமாக மாறியுள்ளது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மஹிந்திரா என்றவுடனே நம்மில் பலரது நினைவிற்கு முதலாவதாக வருவது ஸ்கார்பியோவாக தான் இருக்கும். ஆனால் ஸ்கார்பியோ கார்களை காட்டிலும் பொலேரோ கார்கள் மஹிந்திரா நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன. அதற்கு மிக சிறந்த வெளிப்பாடே, கடந்த 2022-23 நிதியாண்டில் 1 லட்ச பொலேரோ கார்கள் விற்பனை ஆகும். வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.


Click it and Unblock the Notifications









