மத்த நிறுவனங்களை ஒரு வழியாக்க மஹிந்திரா முடிவு பண்ணிருச்சு! புதிய காரின் டீசரை பார்த்து மிரண்டு நிற்கும் டாடா!
இந்தியாவில் மின்சார வாகனம் என்றால் அது டாடா மோட்டார்ஸ் உடையதுதான் என்பது போன்ற சூழல் தற்போது நிலவிக் கொண்டிருக்கின்றது. காரணம், இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இப்போதைய நிலவரப்படி டியாகோ இவி, டிகோர் இவி மற்றும் நெக்ஸான் இவி என மூன்று விதமான எலெக்ட்ரிக் கார் மாடல்களை டாடா நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இதில் நெக்ஸான் இவி மட்டும் 'நெக்ஸான் இவி மேக்ஸ்' மற்றும் 'நெக்ஸான் இவி பிரைம்' என இரு விதமான மாடல்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த அனைத்து எலெக்ட்ரிக் கார் மாடல்களும் பிற நிறுவனங்களின் மின்சார கார்களைக் காட்டிலும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், நாட்டில் டாடாவின் எலெக்ட்ரிக் தயாரிப்புகளுக்கு சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு ஆப்பு வைக்க வேண்டும் என்கிற நோக்கில் சில முன்னணி நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி உள்ளன.

அந்தவகையில், குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வரும் விதமாக சிட்ரோன் நிறுவனம் தயாரித்திருக்கும் அதன் இசி3 (Citroen eC3) எலெக்ட்ரிக் கார் மாடலை அண்மையில் வெளியீடு செய்தது. இதேபோல் மஹிந்திரா நிறுவனம் அதன் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரை இந்திய மின் வாகன சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த எலெக்ட்ரிக் காரைத் தொடர்ந்து இன்னும் சில எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் இந்திய சந்தையில் அடுத்தடுத்தாக களமிறக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்நிறுவனம் ஓர் டீசரை வெளியிட்டு உள்ளது. இந்த டீசர் வாயிலாக நிறுவனம் அடுத்த சில தினங்களிலேயே அதன் மற்றுமொரு புதிய எலெக்ட்ரிக் வாகன மாடலை இந்தியாவில் வெளியீடு செய்ய இருப்பது உறுதியாகி உள்ளது. வருகின்ற பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் மஹிந்திரா இவி ஃபேஷன் ஃபெஸ்டிவல் (Mahindra EV Fashion Festival) எனும் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியிலேயே மஹிந்திரா அதன் புதுமுக எலெக்ட்ரிக் கார்களை வெளியீடு செய்ய இருக்கின்றது. எந்த கார் மாடல்களை வெளியீடு செய்ய இருக்கின்றோம் என்கிற தகவலை மஹிந்திரா நிறுவனம் வெளியிடவில்லை. அதேவேளையில் நிறுவனம் பிஇ மற்றும் எக்ஸ்யூவி.இ ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களையே அறிமுகம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இரு எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் தனது இங்க்ளோ பிளாட்பாரத்தை தழுவியே நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.
இது ஓர் உலக தர பிளாட்பாரம் ஆகும். ஃபோக்ஸ்வேகன் அதன் எம்இபி பிளாட்பாரத்தையும் இதுமாதிரியான ஒன்றாகவே உருவாக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மஹிந்திரா நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் கார்கள் மஹிந்திரா அட்வான்ஸ்டு டிசைன் யூரோப் (Mahindra Advanced Design Europe) டிசைன் ஸ்டுடியோவில் வைத்தே வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இது இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பகுதியில் அமைந்திருக்கின்றது. இந்த வாகனங்களை கடந்த ஆகஸ்டு மாதம் உலகளவில் வெளியீடு செய்தது.

இதைத்தொடர்ந்து தற்போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. எக்ஸ்யூவி.இ8, எக்ஸ்யூவி.இ9, பிஇ.05, பிஇ.07 மற்றும் பிஇ.09 ஆகிய எலெக்ட்ரிக் கார்களையே காட்சிப்படுத்தியது. இவற்றையே இந்தியாவில் நிறுவனம் காட்சிப்படுத்த பிளான் போட்டு இருக்கின்றது. இவை அட்வான்ஸ்டு ஸ்டைல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட வாகனமாக மஹிந்திரா உருவாக்கி இருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக அண்மையில் வெளியீடு செய்யப்பட்ட எக்ஸ்யூவி 400 இருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் காரில் 39.4 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 456 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இந்த காரில் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் வெறும் 8.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டி விடும் திறன் கொண்டது.
அதிநவீன தொழில்நுட்ப வசதிகளாக டிஜிட்டல் எம்ஐடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மஹிந்திரா அட்ரினாக்ஸ் மென்பொருள் வசதி, சன்ரூஃப், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி, டூயல் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், ஆறு ஏர் பேக்குகள், டிஸ்க் பிரேக்குகள், ஐசோஃபிக்ஸ் ஆங்கர்கள் உள்ளிட்டவை எக்ஸ்யூவி 400 இவியில் வழங்கப்பட்டிருக்கும். இதுதவிர இன்னும் பல ஏராளமான தொழில்நுட்ப வசதிகளும் இந்த எலெக்ட்ரிக் காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








