வண்டிய நிப்பாட்டுற இடமா இது! மணிக்கு 95 கிமீ வேகத்தில் வந்து மோதிய ஸ்கார்பியோ என்!
பார்க் செய்யப்பட்டிருந்த கார் மீது மஹிந்திரா ஸ்கார்பியோ என் மணிக்கு 95கிமீ வேகத்தில் வந்து மோதிய சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. விபத்தைச் சந்தித்து இருக்கும் இந்த இரு கார்களும் அதிக சேஃப்டி அம்சங்கள் கொண்ட 5ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார்களாகும். இந்த சம்பவத்தின்போது அரங்கேறிய சில கசப்பான மற்றும் சுவாரஷ்ய நிகழ்வுகள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடலாக மஹிந்திரா ஸ்கார்பியோ இருக்கின்றது. இந்த கார் மாடலின் லேட்டஸ்ட் கார் மாடலே ஸ்கார்பியோ என் ஆகும். இந்த மாடலுடன் சேர்த்து ஸ்கார்பியோ கிளாசிக் எனும் மாடலையும் மஹிந்திரா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஸ்கார்பியோவின் பழைமை மனம் மாறாத ஓர் மாடலே இதுவாகும்.

ஆனால், கிளாசிக் என் அப்படி இருக்காது. நவீன கால அம்சங்கள் மற்றும் டிசைனைக் கொண்டதாக இருக்கின்றது. இதன் காரணத்தினாலும், அதிக பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலும் ஸ்கார்பியோ என் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே மிகவும் அதிர்ச்சிகரமான விபத்து சம்பவத்தை ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் காருடன் ஸ்கார்பியோ என் சந்தித்து இருக்கின்றது.
மணிக்கு சுமார் 95 கிமீ வேகத்தில் வந்து இந்த கார் ஃபோக்ஸ்வேகன் காருடன் மோதி விபத்தைச் சந்தித்து இருக்கின்றது. இந்த அளவு வேகமாக வந்து மோதிய போதும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் ஏர்பேக்குகள் விரிவடையவில்லை என கூறப்படுகின்றது. இந்த தகவல் மஹிந்திரா கார் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
சிறிய மோதலைச் சந்தித்தாலே ஓபன் ஆகிவிடும் வகையில் இந்த ஏர் பேக்குகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், இங்கு மணிக்கு 95 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வந்து மோதியும் இந்த ஏர்பேக்குகள் திறக்கவில்லை. இதனால் ஏதேனும் மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை.
இருப்பினும், இப்போது டீம் பிஎச்பி தளம் வாயிலாகக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி, மிக மோசமான விபத்திற்கு ஆளாகிய மஹிந்திரா ஸ்கார்பியோ என், அருகில் இருந்த சர்வீஸ் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அக்காரை ஆய்வு செய்த ஊழியர்கள் அதில் முன் பக்க சேஸிஸ் மிக மோசமான பாதிப்பை அடைந்திருப்பதாகவும் கூறி இருக்கின்றனர்.
இதை சரி செய்ய பல நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த விபத்திற்கு ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் காரே மிக முக்கியம் என்று கூறப்படுகின்றது. இந்த காரும் டாடா டியாகோ காரும் நெடுஞ்சாலையின் நடு ரோட்டில் நின்றுக் கொண்டு பேசிக் கொண்டிருந்தததாகக் கூறப்படுகின்றது.
இதனைச் சற்றும் கவனிக்காத நிலையிலேயே ஸ்கார்பியோ கார் டிரைவர் ஃபோக்ஸ்வேகன் விர்சுஸின் மீது மோதி இருக்கின்றார். அந்த இரண்டு கார்களும் மேம்பாலத்தின் மீது ஏன் நின்றுக் கொண்டு பேசிக் கொண்டிருந்தன என்பது துள்ளியமாக தெரியவில்லை. இரண்டு கார்களுக்கும் இடையில் ஏதேனும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் இதனாலேயே அவர்கள் நடு ரோட்டில் கார்களை நிறுத்திய வண்ணம் பேசியிருப்பார்கள் என்றும் யூகிக்க முடிகின்றது.
ஆனால், இதுவும் வெறும் யூகிப்பு மட்டுமே. ஏனெனில் இரு கார்களும் நடு மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் துள்ளியமாக தெரியவில்லை. இதேபோல், அந்த இரு கார்களும் திருப்பத்திற்கு அருகில் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இதனாலேயே அந்த கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது ஸ்கார்பியோ காரின் டிரைவரின் கண்களில் படவில்லை.
இதனைத் தொடர்ந்து விர்சுஸ் கார் மீது ஸ்கார்பியோ என் மோதி இருக்கின்றது. இதனால்தான் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தக் கூடாது என் கூறப்படுகின்றது. குறிப்பாக, நடு ரோட்டில் இருக்கும் வாகனத்தை நிறுத்துவது மட்டுமல்ல மெதுவாக பயணிப்பதும் ஆபத்தானதே ஆகும். இதை நிரூபிக்கும் விதமாகவே இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
இதில் மற்றுமொரு ஆச்சரியம் என்னவென்றால் விபத்தைச் சந்தித்து இருக்கும் இரு கார்களும் அதிக பாதுகாப்பானவை ஆகும். ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கை அவை பெற்றிருக்கின்றன. இருப்பினும், மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் ஏர்பேக் ஓப்பன் ஆகாமல் போனதால் அதன் பாதுகாப்பு திறன் விஷயத்தில் தற்போது பலருக்கு சந்தேகமே எழும்பி இருக்கின்றது. இதைத் தொடர்ந்து அந்த காரிலும் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாதுகாப்பான கார்களாக இருந்தாலும் சில நேரங்களில் அவற்றிலும் சிக்கல்கள் ஏற்படும் என்பதற்காக சான்றாகவே இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. குறிப்பாக, அதீத வேகம் மற்றும் தேவையற்ற நிறுத்தங்கள் ஆரோக்கியமானதாக இருக்காது என்பதற்கு சான்றாகவும் இந்த விபத்து நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








