பெட்ரோலில் ஓடி கொண்டிருந்த காரை எலெக்ட்ரிக் காராக மாற்றிய இளைஞர்கள்.. ஆச்சரியம் மூனே நாள்ல மாத்திட்டாங்க..
இந்தியர்களின் மிகவும் பிரியமான ஹேட்ச்பேக் ரக கார் மாடல் என்று மாருதி சுஸுகியின் 800 காரை கூறலாம். அந்த அளவிற்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்பை நாட்டில் பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக அது இருக்கின்றது. ஆனால், அது தற்போது விற்பனையில் இல்லை.
1983-லேயே இந்த காரை முதன் முதலில் மாருதி சுஸுகி இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியது. அப்போதில் இருந்து இந்தியாவை விட்டு விற்பனையில் இருந்து வெளியேறிய 2014 ஆம் ஆண்டு வரை அது இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் குட்டி ஹேட்ச்பேக் கார் மாடலாக இருந்து வந்தது.

இந்த அளவிற்கு தரமான ஓர் கார் மாடலே 800 ஆகும். இந்த காரையே கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மின்சாரத்தால் ஓடும் காராக மாற்றி (கன்வெர்ட் செய்து) இருக்கின்றனர். இதற்கு முன்னதாகவும் இதுபோன்று மாருதி எலெக்ட்ரிக் காராக மாற்றப்பட்ட செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள்.
ஆனால், அவற்றில் இருந்து இந்த கார் சற்று மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. இந்த 800க்கு பின் வீல் இயக்கம் வசதியை இளைஞர்கள் கொடுத்திருக்கின்றனர். ஆகையால், இந்தியாவிலேயே பின் வீல் இயக்கம் வசதியைப் பெற்ற முதல் 800 கார் என்கிற புகழுக்கு உரிய வாகனமாக அது மாறி இருக்கின்றது.

இப்போது வரை பெட்ரோல், டீசல் கார்கள் எலெக்ட்ரிக் கார் மாடல்களாக மாற்றப்படுவது சட்டப்பூர்வமாக்கப்படவில்லை. அதேவேளையில், விரைவில் இதற்கு அனுமதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து, நாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்கள் பலர் தங்களின் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை மின்சார வாகனமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையிலேயே கேரளாவைச் சேர்ந்த விப்ட்ரானிக்ஸ் யுட்யூப் சேனலைச் சேர்ந்த இளைஞர்கள் மாருதி 800 காரை எலெக்ட்ரிக் காராக மாற்றி இருக்கின்றனர். இவர்கள் வை எலெக்ட்ரிக் காராக மாற்றுவதற்கான கிட்-ஐ வெளிப்புற சந்தையில் ஆர்டர் செய்து பெற்றிருக்கின்றனர். ஆனால், இதற்காக அவர்கள் எவ்வளவு செலவு செய்தார்கள் என்கிற விபரத்தை அறிவிக்கவில்லை.

அதே நேரத்தில் அவர்கள் வெறும் மூன்றே நாட்களில் அந்த கிட்-ஐக் கொண்டு பெட்ரோலில் ஓடிக் கொண்டிருந்த 800 காரை மின்சார காராக மாற்றியிருக்கின்றனர். "என்னது மூனே நாள்ல ஓர் பெட்ரோல் காரை எலெக்ட்ரிக் காரா மாத்திட்டாங்களா" இப்படியாகவே பலர் யுட்யூபர்களைப் பார்த்து வியக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
இந்தியாவில் 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்களையும், 10 ஆண்டுகள் பழைய டீசல் வாகனங்களையும் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான சூழலில் பழைய வாகனங்களை மின்சார வாகனமாக மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்படும் எனில் எத்தனை ஆண்டுகள் பழைய வாகனமாக இருந்தாலும் அதை எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதேவேளையில், அந்த பழைய வாகனம் அதிக உறுதித் தன்மைக் கொண்டதாக இருத்தல் வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மின்சார எலெக்ட்ரிக் காராக மாருதி 800-ஐ மாற்றுவதற்காக அந்த காரில் பல்வேறு மாற்றங்களை இளைஞர்கள் செய்திருக்கின்றனர். குறிப்பாக, பேட்டரி பேக் மற்றும் மின்சார மோட்டாரை காரில் பொருத்துவதற்கே ஏற்ப மாற்றங்களையே அவர்கள் செய்திருக்கின்றனர்.
காருக்கான பேட்டரி பேக், பான்னெட்டிலேயே பொருத்தப்பட்டு இருக்கின்றது. இதற்காக அந்த இடத்தில் இருந்த எஞ்ஜின் மற்றும் பிற கூறுகள் அனைத்தும் அங்கிருந்து அகற்றப்பட்டு இருக்கின்றன. பட்ஜெட் பிரச்னை காரணமாக சற்று சிறிய அளவு பேட்டரி பேக்கையே அவர்கள் வாங்கி பயன்படுத்தி இருக்கின்றனர்.
பின்னாளில் இந்த பேக்கை அவர்கள் பெரிதுப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இப்போதே முழுமையாக பான்னெட் காலி செய்யப்பட்டு இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக மின்சார மோட்டார்கள் நேரடியாக ஆக்ஸில்களில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. பின் வீல் ஆக்ஸில்களிலேயே அது பொருத்தப்பட்டு இருக்கின்றது. இதனால், எடை சமநிலை உருவாகி இருக்கின்றது.
சிறிய பேட்டரி பேக் என்று மட்டுமே கூறப்பட்டு உள்ளது. ஆனால், அது எவ்வளவு ரேஞ்ஜ் தரும்?, எவ்வளவு நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என்கிற விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை. இருப்பினும், எங்களின் யூகிப்பின்படி ஓர் முழு சார்ஜில் 200 கிமீ முதல் 250 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி பேக்கை அவர்கள் மாருதி 800 காரில் பயன்படுத்தி இருக்கலாம்.
மேலும், இதற்காக ரூ. 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை அவர்கள் செலவு செய்திருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்த விபரங்களையும் அவர்கள் வெளியிடவில்லை. அதேநேரத்தில், ஓர் பெட்ரோல் காரை மூன்றே நாட்களில் மின்சார காராக மாற்றிக் கொள்ள முடியுமா என்றே இந்த நிகழ்வு நம்மை ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன ஆர்வலர்கள் பலர் சோதனையின் அடிப்படையில் தங்களின் பெட்ரோல் வாகனங்களை மின்சாரத்தால் ஓடும் வாகனங்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். பலர் மணிக்கு 25 கிலோ மீட்டருக்கும் குறைவான வேகத்தில் இயங்கும் வாகனங்களையே வடிவமைத்திருக்கின்றனர். இதுபோன்ற வாகனங்களை இயக்க லைசென்ஸ் அல்லது பதிவு என எந்த ஆவணமும் தேவைப்படாது. இந்த மாதிரியான ஓர் காராகவே இப்போதைய 800 இருக்கும் என யூகிக்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









