மாருதி மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு! குழந்தைகளுக்கான பாதுகாப்பில் ஆல்டோ கே10 படுமோசம்!
இந்தியாவில் டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) போன்ற நிறுவனங்கள் மிகவும் பாதுகாப்பான கார்களை விற்பனை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் பல்வேறு கார்கள், குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் (Crash Test) 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) வாங்கி அசத்தியுள்ளன.
அவ்வளவு ஏன்? வெளிநாடுகளை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) மற்றும் ஸ்கோடா (Skoda) நிறுவனங்களின் கார்கள் கூட சமீப காலமாக குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன. ஆனால் இந்தியாவின் நம்பர்-1 கார் நிறுவனம் என புகழப்படும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) தொடர்ந்து சொதப்பி கொண்டுள்ளது.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) கார், குளோபல் என்சிஏபி அமைப்பால் சமீபத்தில் மோதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகி, வாடிக்கையாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. ஆம், மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பு வழக்கம் போல ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
பெரியவர்களுக்கான பாதுகாப்பில், 34க்கு வெறும் 21.67 புள்ளிகளை மட்டுமே மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் ஸ்கோர் செய்துள்ளது. எனவே இந்த பிரிவில் குளோபல் என்சிஏபி அமைப்பு, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காருக்கு வெறும் 2 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை மட்டுமே வழங்கியுள்ளது.
குழந்தைகளுக்கான பாதுகாப்பிலோ, இந்த கார் இன்னும் மோசம். ஏனெனில் இந்த பிரிவில் 49க்கு 3.52 புள்ளிகளை மட்டும்தான் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் ஸ்கோர் செய்துள்ளது. எனவே இந்த பிரிவில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காருக்கு, குளோபல் என்சிஏபி அமைப்பு ஒரு ஸ்டார் ரேட்டிங்கை கூட வழங்கவில்லை. எனவே குழந்தைகளுக்கான பாதுகாப்பில் இந்த காரின் ரேட்டிங் பூஜ்ஜியம்.
எனவே மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காருக்கு எதிராக மிக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மாருதி சுஸுகி ஆல்டோ கே10 இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்றாகும். இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த சிறிய கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 3.99 லட்ச ரூபாய் மட்டுமே. அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 5.95 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
என்னதான் ஓரளவிற்கு விலை குறைவான காராக இருந்தாலும் கூட, பாதுகாப்பில் இந்த அளவிற்கு மோசமாக இருப்பது, குறிப்பாக குழந்தைகளுக்கான பாதுகாப்பில் மிகவும் மோசமாக இருப்பது வாடிக்கையாளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் சோதனை முடிவுகள், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
டாடா, மஹிந்திரா போன்ற உள்ளூர் நிறுவனங்களிடம் இருந்து மாருதி சுஸுகி பாடம் கற்க வேண்டும். விலை, மைலேஜ் (Mileage) ஆகியவை திருப்திகரமாக இருப்பதாலும், நாடு முழுக்க சர்வீஸ் சென்டர்கள் (Service Centers) இருப்பதாலும்தான் மாருதி கார்களை மக்கள் அதிகமாக வாங்குகின்றனர். இவற்றுடன் பாதுகாப்பும் சிறப்பாக இருந்தால், மாருதி சுஸுகி கார்களின் விற்பனை இன்னும் உயரும் என்பதுடன், சாலை விபத்துக்களில் பலரின் உயிர் காப்பாற்றப்படும்.


Click it and Unblock the Notifications