மாருதி கார்களின் விலை தாறுமாற ஏறப்போகுது! இன்னும் 1 மாசம் தான் டைம்!
புதிதாக மாருதி கார் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறீர்களா உங்களுக்கு இன்னும் ஒரு மாதம் தான் அவகாசம் இருக்கிறது. அதற்குள் கார் வாங்கினால் தான் விலை குறைவாக இருக்கும். 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு முதல் மாருதி கார்களின் விலை தாறுமாறாக ஏறப்போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பயணிகள் கார்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் கார்கள் எல்லாம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருக்கிறது. இதனால் இந்நிறுவனத்தின் கார்களை மக்கள் பலர் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நம்பர் ஒன் நிறுவனமாக இந்த மாருதி நிறுவனம் தான் இருக்கிறது.

மாருதி நிறுவனம் இன்று புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மாருதி நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் வரும் ஜனவரி 1ம் தேதி அதாவது 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் விலை அதிகமாக உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் தயாரிப்பு செலவுகள் காரணமாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்படுவதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாருதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக மாருதி நிறுவனத்திற்கு கார் தயாரிக்கும் செலவு அதிகரித்துள்ளதால் அதை ஈடுகட்ட நிறுவனம் கார்களின் விலையை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மாருதி நிறுவனம் இந்த விலை உயர்வை தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்திருந்ததாகவும் ஆனால் அதையும் மீறி விலை உயர்வு என்பது கட்டாயமாக செய்ய வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும் மாருதி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மாருதி நிறுவனம் தற்போது எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை உயர்வு என்ற விபரத்தை இதுவரை வெளியிடவில்லை. மாருதி நிறுவனம் தற்போது குறைந்த விலை காராக சிறிய ஆல்டோ காரை என்ட்ரி லெவல் காராக ரூபாய் 3.54 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது.
அதிகபட்ச விலை உள்ள காராக டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கிராரை ரீ பேட்ஜ் செய்து மாருதி நிறுவனம் இன்விக்டோ என்ற எம்பிவி காராக ரூபாய் 24.80 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது. தற்போது என்டரி லெவல் காரின் விலையை ரூ4 லட்சத்திற்கு மேல் கொண்டு செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி நிறுவனத்திடம் உள்ள பலேனோ, ஸ்விஃப்ட், வேகன்ஆர் ஆகிய கார்கள் அதிகமாக விற்பனையாகும் கார்களாக உள்ளன. ஒவ்வொரு மாதமும் வரும் டாப் 10 கார் விற்பனை பட்டியலில் இந்த மூன்று கார்களும் நிச்சயம் இடம்பெறும். இந்த ஆண்டு துவக்கத்தில் மாருதி நிறுவனம் எஸ்யூவி செக்மெண்டில் பெரிய அளவில் பங்கு கொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது எஸ்யூவிலும் ஏகப்பட்ட கார்களை நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
மாருதி நிறுவனத்திடம் தற்போது எஸ்யூவி செக்மெண்டில் பிரெஸ்ஸா, ஃபிரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, ஜிம்னி ஆகிய கார்கள் இருக்கிறது மார்க்கெட்டில் எஸ்யூவி விற்பனையில் 22 சதவீத பங்கை மாருதி நிறுவனம் தான் வைத்துள்ளது. இது 2024 ஆம் நிதி ஆண்டு இறுதியில் 25 சதவீதமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மாருதி நிறுவனம் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. மக்கள் பலர் மாருதி நிறுவனம் ஒரு காரை அறிமுகப்படுத்தினாலே அந்த காரை நம்பி வாங்கலாம் என்ற மனநிலையில் இருக்கின்றனர். நீண்ட ஆண்டுகளாக மாருதி நிறுவனம் மார்கெட்டில் அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருக்கிறது.
கடந்தாண்டு மாருதி நிறுவனம் கிராண்ட் வீட்டாரா என்ற எஸ்யூவி ரக காரை அறிமுகப்படுத்தியது. காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் அதிக போட்டி நிலவும் நிலையில் அந்த செக்மென்டில் இந்த கார் அறிமுகமானது. அறிமுகமான ஒரே ஆண்டிலேயே ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்து மாருதி நிறுவனம் சாதனை படைத்தது. இந்த செக்மெண்டில் ஏற்கனவே ஹூண்டாய் கிரெக்டா, கியா செல்டோஸ் உள்ளிட்ட பல சிறப்பான கார்களும் விற்பனையாகி வருகின்றன.
அதனால் நீங்கள் தற்போது மாருதி நிறுவனத்தின் காரை வாங்கும் எண்ணத்தில் இருந்தால் தற்போதை காரை புக் செய்து வாங்கி விடுவது நல்லது. 2024 ஆம் ஆண்டு பிறந்து விட்டால் காரின் விலை தாறுமாறாக ஏற வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியது இருக்கும். மாருதி நிறுவனத்தின் எந்த காரை நீங்கள் வாங்கப் போகிறீர்கள் என இப்பொழுதே முடிவு செய்து கொள்ளுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனத்தின் விலை ஏற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயம்தான். மாருதி போன்ற நிறுவனம் விலை ஏற்றத்தை அறிவித்தால் ஒட்டுமொத்த கார் சந்தையிலுமே அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். மாருதியை தொடர்ந்து அடுத்து பல நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலையை அதிகரிக்கும் முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









