மாருதி கார்களில் இவ்ளோ பெரிய பிரச்னையா! ஓட்ட வேண்டாம் என எச்சரிக்கை! விஷயம் இப்பதான் வெளிய தெரிஞ்சிருக்கு!
இந்திய சந்தையில் நம்பர்-1 கார் நிறுவனம் என்ற மகுடத்தை மாருதி சுஸுகி (Maruti Suzuki) தனது தலையில் சுமந்து வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் அளவிற்கு வேறு எந்த நிறுவனத்தாலும், இந்தியாவில் கார்களை விற்பனை செய்ய முடிவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
சிறப்பான மைலேஜ், ஓரளவிற்கு விலை குறைவு, நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் போன்றவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் வெற்றி நடைக்கு மிகவும் முக்கியமான காரணங்கள் ஆகும். ஆனால் என்னதான் இருந்தாலும், பாதுகாப்பு விஷயத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் பின்தங்குவதாக வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக நீண்ட காலமாக பேச்சு இருந்து வருகிறது. இந்த சூழலில் பாதுகாப்பு விஷயத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், மாருதி சுஸுகி நிறுவனமே தனது கார்களை பயன்படுத்த வேண்டாம் என வாடிக்கையாளர்களை தற்போது கேட்டு கொண்டுள்ளது.

ரீகால் அப்படினா என்ன?
உங்களுக்கு கார் ரீகால் (Car Recall) பற்றி தெரியும் என நம்புகிறோம். தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய விளக்கம். கார்களை விற்பனை செய்த பிறகு, அதில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டால், உற்பத்தி நிறுவனங்கள் ரீகால் அறிவிப்பை வெளியிடும். பின்னர் பிரச்னையை சரி செய்த பிறகு, கார்கள் மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்படும். இந்த சூழலில் மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது ரீகால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இவ்ளோ கார்களில் பிரச்னையா!
மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது 17,362 கார்களுக்கு ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த கார்களில் எல்லாம், ஏர்பேக் கண்ட்ரோலர் யூனிட்டில் (Airbag Controller Unit) பிரச்னை இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே அந்த பிரச்னையை சரி செய்வதற்காக ரீகால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கார்கள் அனைத்தும், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதியில் இருந்து, 2023ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.

எந்தெந்த கார்களில் பாதிப்பு?
ஆல்டோ கே10 (Alto K10), எஸ்-பிரெஸ்ஸோ (S-Presso), ஈக்கோ (Eeco), பிரெஸ்ஸா (Brezza), பலேனோ (Baleno) மற்றும் க்ராண்ட் விட்டாரா (Grand Vitara) ஆகிய கார்கள் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன. ஒருவேளை விபத்து நிகழ நேரிட்டால், இந்த பிரச்னை காரணமாக ஏர்பேக்குகள் விரிவடையாமல் போகலாம் என கூறப்படுகிறது. எனவே பிரச்னை சரி செய்யப்படும் வரை, சந்தேகம் உள்ள கார்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டாம் என மாருதி சுஸுகி நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.
இலவசமா மாத்தி தர்றாங்களாம்!
இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''பிரச்னை இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கார்களை பரிசோதிக்கவே இந்த ரீகால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை பிரச்னை இருப்பது உறுதியானால், ஏர்பேக் கண்ட்ரோலர் யூனிட் இலவசமாக மாற்றி தரப்படும்'' என கூறப்பட்டுள்ளது. இந்த ரீகால் அறிவிப்பு உங்கள் காருக்கும் பொருந்தும் என்றால், பிரச்னை சரி செய்யப்படும் வரை, காரை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நன்மை பயக்கும். அதுவரை போக்குவரத்திற்கு வேறு ஏதேனும் வழிகளை கண்டறியலாம்.
2023 ஆட்டோ எக்ஸ்போ!
மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்ற செய்திகளை பொறுத்தவரையில், தற்போது நடைபெற்று வரும் 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) திருவிழாவில், ஏராளமான கார்களை காட்சிப்படுத்தியுள்ளது. இதில், இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் (eVX Electric SUV Concept), 5 டோர் ஜிம்னி (Five-door Jimny), ஃப்ரான்க்ஸ் (Fronx), பிரெஸ்ஸா சிஎன்ஜி (Brezza CNG) மற்றும் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வேகன் ஆர் (Flex-Fuel Wagon R) போன்றவை குறிப்பிடத்தக்க மாடல்கள் ஆகும்.
முன்பதிவு குவிகிறது!
இதில், மாருதி சுஸுகி ஜிம்னி மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஆகிய 2 கார்களுக்கும், முன்பதிவுகளை (Booking) ஏற்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு விட்டன. வாடிக்கையாளர்கள் பலர் இந்த கார்களை போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த 2 கார்களும் கூடிய விரைவிலேயே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








