இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
மாருதி நிறுவனம் இந்த ஜனவரி மாதத்தில் தற்போது வரை 4.05 லட்சம் கார்களுக்கான புக்கிங்கை காத்திருப்பில் வைத்திருக்கிறது. புதிய கார்கள் அறிமுகத்திற்குப் பிறகு புக்கிங் அதிகரித்துள்ள நிலையில் இந்த நிலையை மாருதி நிறுவனம் எட்டியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
பொதுவாக இந்தியாவில் வாகனங்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களைத் தயாரித்து விற்பனைக்கு அனுப்புவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிதாக ஒரு வாகனத்தை அறிமுகப்படுத்தினால் அந்த வாகனத்திற்கான புக்கிங்கை தங்கள் ஷோரூம்களில் பெற்று வருகின்றனர். இப்படி வாகனங்கள் புக் செய்யப்பட்டது முதல் வாகனத்தை டெலிவரி வாங்கும் வரையிலான காலம் வாடிக்கையாளர்களுக்கான காத்திருப்பு காலமாகும்.

இப்படியாக புக்கிங் செய்யப்பட்டு டெலிவரி செய்யப்படாத வாகனங்களின் எண்ணிக்கை என்பது ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு திறன் மற்றும் அதன் தயாரிப்புகளுக்கு மக்களிடம் உள்ள வரவேற்பைப் பொறுத்து மாறுபடும். இந்தியாவிலேயே நீண்ட காத்திருப்பு காலம் கொண்ட கார்கள் என்றால் மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் இருக்கும். ஆனால் அதிக எண்ணிக்கையிலான காத்திருப்பு வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனம் என்றால் மாருதி தான்.
மாருதி நிறுவனம் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மொத்தம் 3.63 லட்சம் கார்களை புக்கிங் செய்து டெலிவரி செய்யாமல் வைத்திருந்தது. இந்த காருக்கான தயாரிப்புகள் ஆலையில் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி நிறுவனம் தனது 2 புதிய கார்களை அறிமுகப்படுத்தியது. அதாவது மாருதி ஜிம்னி மற்றும் மாருதி ஃபிராங்க்ஸ் ஆகிய கார்களை அறிமுகம் செய்து அதற்கான புக்கிங்கை நடத்தி வருகிறது.
ஜிம்னி காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதற்கான புக்கிங் குவிந்து கொண்டே இருக்கிறது. தற்போது வரை சுமார் 11 ஆயிரம் பேர் ஜிம்னி காரை வாங்குவதற்காக புக்கிங் செய்துள்ளனர். ஃபிராங்க்ஸ் காரை பொருத்தவரை 4000 பேர் புக்கிங் செய்துள்ளனர்.
ஜிம்னி காரை பொருத்தவரை தினமும் சராசரியாக 1000 கார்களுக்கு இந்தியா முழுவதிலுமிருந்து புக்கிங் வந்து குவிகிறது. ஃபிராங்க்ஸ் காரை பொருத்தவரை தினமும் சராசரியாக 300 கார்கள் வரை புக்கிங் வந்து குவிகிறது. இதை அந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர்
ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
தற்போது புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட கார்களுக்கான புக்கிங் சேர்ந்து இந்த ஜனவரி மாதம் வரை மொத்தம் 4.05 லட்சம் கார்களுக்கான புக்கிங் மாருதி நிறுவனத்திடம் குவிந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மாருதி நிறுவனம் செமி கண்டெக்டர் தட்டுப்பாட்டைச் சந்தித்தது. இதனால் அந்நிறுவனத்தின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
சுமார் 46,000 கார்கள் வரை உற்பத்தி குறைந்தது. இதனால் காத்திருப்பு பட்டியலின் நீளம் அதிகமானது. இது போக புதிய கார்கள் சேர்த்து ஜனவரி மாதம் காத்திருப்போர் பட்டியல் 4 லட்சத்தைக் கடந்துவிட்டது. 2022ம் ஆண்டு மாருதி நிறுவனம் மொத்தம் 15.76 லட்சம் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மொத்தம் 13.64 லட்சம் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஒரே ஆண்டில் 16 சதவீதம் இந்நிறுவனம் வளர்ச்சியடைந்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications