கருப்பு கலர் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?.. சூப்பரான பிளாக் எடிசன் கார்களை மாருதி சுஸுகி அறிமுகம் செஞ்சிருக்கு
கருப்பு நிறத்தை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. உலகளவில் கருப்பு நிற தயாரிப்புகளுக்கு மிகப் பெரிய டிமாண்ட் நிலவுக் கொண்டிருக்கின்றது. ஏன் கருப்புக்கு என மிக பெரிய ஃபேன் பட்டாளமே உண்டு என கூறலாம். அந்தளவிற்கு கருப்பு நிறத்திற்கு சூப்பரான சந்தை உள்ளது. இத்தகைய சந்தையை கவரும் விதமாகவே பிரபல மாருதி சுஸுகி நிறுவனம் அதன் நெக்ஸா தயாரிப்புகளை கருப்பு நிற பதிப்பாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
பிளாக் எடிசன் அறிமுகம்:
'பிளாக் எடிசன்' எனும் பெயரில் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் நெக்ஸா மற்றும் அரெனா என இரு பிரிவுகளாக தனது தயாரிப்புகளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில், அரெனா ஷோரூம் வாயிலாக பட்ஜெட் மற்றும் மலிவு விலை கார் மாடல்களையும், நெக்ஸா வாயிலாக சற்று விலை உயர்ந்த பிரீமியம் தர கார் மாடல்களையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது.

இந்த நிலையில், பிரீமியம் கார் மாடல்களான நெக்ஸா ஷோரூம் வாயிலாக விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் பிளாக் எடிசன் பதிப்பை மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. முன் அறிவிப்பு ஏதுமின்றி மிகவும் சைலண்டான வகையில் கருப்பு பதிப்பு எடிசனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. கிராண்ட் விட்டார, எக்ஸ்எல்6, பலினோ, இக்னிஸ் மற்றும் சியாஸ் ஆகிய அனைத்து நெக்ஸா கார் மாடல்களும் பிளாக் எடிசனில் விற்பனைக்குக் கிடைக்கும்.
குறிப்பிட்ட வேரியண்டுகளில் மட்டுமே கிடைக்கும்
ஆனால், குறிப்பிட்ட வேரியண்டுகளில் மட்டுமே இந்த பிளாக் எடிசனை வாங்கிக் கொள்ள முடியும். உதாரணமாக இக்னிஸ் கார் மாடலின் ஜெட்டா பெட்ரோல், ஆல்ஃபா பெட்ரோல், ஜெட்டா ஏஜிஎஸ் பெட்ரோல் மற்றும் ஆல்ஃபா ஏதிஎஸ் பெட்ரோல் ஆகிய தேர்வுகளில் மட்டுமே பிளாக் எடிசனை வாங்க முடியும். இதேபோல், ஒவ்வொரு மாடலிலும் குறிப்பிட்ட தேர்வுகளில் மட்டுமே கருப்பு எடிசன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

வேற ஏதாச்சும் ஸ்பெஷல் இருக்கா?
இந்த சிறப்பு பிளாக் எடிசனில் நிற அலங்காரத்தை தவிர வேறு எந்த சிறப்புகளும் சேர்க்கப்படவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. கருப்பு வண்ணத்தை அதிகம் விரும்புபவர்களைக் கவரும் பொருட்ட பிளாக் எடிசன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஏற்கனவே விற்பனைக்கு வழங்கப்பட்டு வந்த நிற தேர்வுகளுடன் இந்த புதிய பிளாக் எடிசனும் விற்பனைக்குக் கிடைக்கும். மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனை சதவீதம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் கணிசமாக குறைந்து இருக்கின்றது.
மாருதி கார்கள் விற்பனை சரிவு
இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே கருப்பு பதிப்பு பிரத்யேகமாக இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இது நிறுவனத்தின் விகிதத்தை வரும் காலங்களில் உயர்த்திக் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் விற்பனை 9.9 சதவீதம் குறைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் வாகனங்கள் ஒட்டுமொத்தமாக 1,53,149 யூனிட்டுகள் விற்பனையாகின.

இந்த மாதிரியான சூழலில் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒட்டுமொத்தமாகவே நிறுவனத்தின் கார்கள் 1,39,347 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. இது மாருதி சுஸுகிக்கு சோகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கடந்த காலங்களில் நல்ல வரவேற்பைப் பெற்ற கார் மாடல்களே டிசம்பர் மாத விற்பனையில் பின் தங்கிய நிலை தென்படுகின்றது. அதிர்ஷ்டவசமாக நிறுவனத்தின் புதிய வருகையான கிராண்ட் விட்டாராவிற்கு நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்துள்ளது.
இதுபோன்ற ஒரு சில புதுமுக வாகனங்களினாலும், அதிகம் மைலேஜ் தரும் வேகன்ஆர் போன்ற கார் மாடல்களாலும்தான் நிறுவனத்தின் ஓரளவுக்கு விற்பனை எண்ணிக்கையை எட்ட முடிந்திருக்கின்றது. தற்போது சந்தையில் போட்டி பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதுதவிர இன்னும் பல்வேறு சிக்கல்களும் இந்திய சந்தையில் நிலவுகின்றன. இதன் விளைவாகவே நிறுவனத்தால் பெரியளவில் விற்பனையை பெற முடியவில்லை. இதன் விளைவாக 2022 டிசம்பரில் விற்பனைச் சரிவை அது சந்தித்துள்ளது.
புதிய கார்களைக் கொண்டு வர திட்டம்
இந்த விற்பனை சரிவைச் சமாளிக்கும் விதமாக நிறுவனம் சில புதிய கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக டொயோட்டாவின் இன்னோவா ஹைகிராஸை தழுவிய புதிய எம்பிவி மற்றும் கிராண்ட் விட்டாராவின் சிஎன்ஜி வெர்ஷன் உள்ளிட்டவற்றை அது விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இது தவிர, தற்போது விற்பனையில் இருக்கும் பலினோவின் க்ரோஸோவர் ரக மாடலையும் இந்தியாவில் மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








