மாருதியே வரவேற்கிறதா சொல்லீட்டாங்க! பாரத் என்சிஏபி திட்டத்திற்கு கார் நிறுவனங்கள் ஆதரவு!
இந்தியாவில் வரும் அக்டோபர் 1ம் தேதியில் இருந்து, பாரத் என்சிஏபி (Bharat New Car Assessment Programme - Bharat NCAP) மோதல் சோதனை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இந்திய சந்தையில் தற்போது தீவிரமாக இயங்கி வரும் முன்னணி நிறுவனங்கள் பலவும், இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளன.
மாருதி சுஸுகி (Maruti Suzuki), டொயோட்டா (Toyota), டாடா (Tata), ஸ்கோடா (Skoda), மஹிந்திரா (Mahindra) மற்றும் கியா (Kia) போன்ற நிறுவனங்கள்தான், பாரத் என்சிஏபி திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களை, பாரத் என்சிஏபி மோதல் சோதனைக்கு உட்படுத்தவுள்ளது.

இது தொடர்பாக மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு பிரிவின் தலைவர் வேலுசாமி கூறுகையில், ''இது இந்திய அரசாங்கம் எடுத்துள்ள தைரியமான நடவடிக்கைகளில் ஒன்று. பாரத் என்சிஏபி திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்'' என்றார். மஹிந்திரா நிறுவனம் இதை வரவேற்பதில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ஏனெனில் இந்திய சந்தையில் மிகவும் பாதுகாப்பான கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக மஹிந்திரா உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 (XUV300), எக்ஸ்யூவி700 (XUV700) மற்றும் ஸ்கார்பியோ-என் (Scorpio-N) உள்ளிட்ட கார்கள், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன.

மறுபக்கம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பற்றவை என வாடிக்கையாளர்கள் பலராலும் கருதப்படுகின்றன. குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் பலவும் மிகவும் குறைவான பாதுகாப்பு ரேட்டிங்கைதான் பெற்றிருப்பதுதான் இதற்கு மிகவும் முக்கியமான காரணமாக இருக்கிறது.
நிலைமை அப்படி இருக்கும்போது, மாருதி சுஸுகி நிறுவனமும் கூட பாரத் என்சிஏபி மோதல் சோதனை திட்டத்தை வரவேற்றுள்ளது. அதேபோல் மாருதி சுஸுகி நிறுவனத்துடன் தற்போது இணைந்து செயல்பட்டு வரும் டொயோட்டா நிறுவனமும், பாரத் என்சிஏபி மோதல் சோதனை திட்டத்தை வரவேற்பதாக அறிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாரத் என்சிஏபி மோதல் சோதனைகளை நாங்களும் வரவேற்கிறோம். வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான கார்களை தேர்வு செய்வதற்கு இந்த திட்டம் நிச்சயமாக உதவி செய்யும். அத்துடன் இந்த திட்டம் மூலமாக, சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்புகளும் கூட இருக்கின்றன.
மறுபக்கம் பாதுகாப்பான கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் இது விற்பனையில் நல்ல பலனை கொடுக்கலாம். அதாவது சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங்கை பெறும் கார்களை வாடிக்கையாளர்கள் அதிகமாக வாங்குவார்கள் என்பதால், தற்போது இருப்பதை காட்டிலும் விற்பனை பல மடங்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








