தலையில் இடியை இறக்கீட்டாங்க! மாருதி நிறுவனத்தின் திடீர் முடிவால் அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!
இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையை தொடர்ந்து பல வருடங்களாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) தக்க வைத்து கொண்டுள்ளது. ஹூண்டாய் (Hyundai) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) போன்ற மற்ற முன்னணி நிறுவனங்கள் எதுவும் நெருங்க கூட முடியாத உயரத்தில் மாருதி சுஸுகி உள்ளது.
கார்களை ஓரளவிற்கு குறைவான விலையில் (Price) விற்பனை செய்வது, மாருதி சுஸுகி நிறுவனத்தின் தற்போதைய இடத்திற்கு மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் இனி நீங்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை வாங்க வேண்டுமென்றால், அதிக விலை கொடுக்க வேண்டியதிருக்கும்.

இந்தியாவில் தற்போது பல்வேறு நிறுவனங்களும் வாகனங்களின் விலை உயர்வு (Price Hike) குறித்த அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு, வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தி வருகின்றன. இந்த வரிசையில், வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலையும் அதிரடியாக உயரவுள்ளது.
குறிப்பிட்ட ஒரு சில கார்கள் என்றில்லாமல், மாருதி சுஸுகி நிறுவனத்தின் அனைத்து கார்களின் விலையும் வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து உயர்த்தப்படவுள்ளது. ஆனால் தங்கள் கார்களின் விலை எவ்வளவு உயரவுள்ளது? என்ற அறிவிப்பை மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

1 அல்லது 2 சதவீதம் விலை உயர்த்தப்பட்டால் கூட, வாடிக்கையாளர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. மாருதி சுஸுகி போன்ற வாகன நிறுவனங்கள், விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதற்கு, பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2வது கட்டம் (BS6 Phase 2) மற்றும் ஆர்டிஇ (RDE - Real Driving Emissions) விதிமுறைகள் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த புதிய விதிமுறைகள் வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளன. இந்த விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில், வாகனங்களை மேம்படுத்த வேண்டியுள்ளதால், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே பல்வேறு முன்னணி வாகன நிறுவனங்கள் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.
மாருதி சுஸுகி தவிர ஹோண்டா கார்ஸ் (Honda Cars) நிறுவனமும் விலையை உயர்த்தவுள்ளது. இதுதவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வர்த்தக வாகனங்களின் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரு சக்கர வாகன நிறுவனங்களும் கூட இந்த விலை உயர்வு அறிவிப்புகளுக்கு விதிவிலக்கு அல்ல.
ஏனெனில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம், விலையை உயர்த்துவதாக ஏற்கனவே அறிவித்து விட்டது. எனவே இனி புதிய கார், டூவீலர் மற்றும் வர்த்தக வாகனங்களை வாங்குவதாக இருந்தால், நீங்கள் அதிக தொகையை செலவிட வேண்டியதிருக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
அரசு புதிய விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வரும்போதெல்லாம், வாகனங்களின் விலை உயர்வது என்பது வாடிக்கையான ஒரு விஷயம்தான். கடந்த காலங்களிலும் கூட புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் சமயங்களில், வாகனங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன. ஆனால் இந்த விலை உயர்வு, வாகனங்களின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








