மாருதி இந்த 2 காரையும் இந்தியா கொண்டு வரபோகுதா! டாடா, மஹிந்திராக்கு சங்கு ஊத ஒன்னே போதும்.. இதுல ரெண்டுவேறையா!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் இரண்டு புதிய பிரீமியம் தர எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒன்று மின்சார காராகவும், மற்றொன்று ஐசிஇ எஞ்ஜின் கொண்டதாகவும் இருக்கும் என கூறப்படுகின்றது.
இவை என்ன கார் மாடல்கள்? அவற்றின் சிறப்புகள் என்ன? எந்த மாடல் மின்சார மோட்டார் தேர்விலும், எந்த மாடல் ஐசிஇ ஆப்ஷனிலும் விற்பனைக்கு வர இருக்கின்றன என்பது போன்ற இரு கார்கள் குறித்த மிக முக்கியமான மற்றும் சுவாரஷ்ய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

7 சீட்டர் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (7-Seater Maruti Suzuki Grand Vitara): மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மிக முக்கியமான கார் மாடல்களில் ஒன்றாக கிராண்ட் விட்டாரா இருக்கின்றது. இது ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி ரக காராகும்.
இப்போதைய நிலவரப்படி வெறும் 5 பேர் மட்டுமே பயணிக்கும் இருக்கை வசதி உடன் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதனையே மாருதி சுஸுகி நிறுவனம் 7 சீட்டர் வெர்ஷனில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனத்தின் டாப் செல்லிங் எஸ்யூவி கார் மாடலாக கிராண்ட் விட்டாரா காட்சியளிக்கின்றது.

இந்த வரவேற்பை மேலும் இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே மாருதி சுஸுகி இதில் 7 சீட்டர் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. 2024 ஆம் ஆண்டு அல்லது 2025 ஆம் ஆண்டிற்குள் இந்த கார் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் கூறுகின்றன.
7 சீட்டருடன் சேர்த்து 6 சீட்டர் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. அதிக சொகுசான ரைடு அனுபவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி இந்த ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது. மேலும், அதிக மைலேஜ் தரும் எஞ்ஜின் ஆப்ஷனும் 7 சீட்டர் மற்றும் 6 சீட்டர் தேர்வில் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது.

மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX): நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2023-இன் வாயிலாகவே சுஸுகி நிறுவனம் இந்த காரை வெளியீடு செய்தது. இது ஓர் எலெக்ட்ரிக் காராகும். ஆனால், இப்போது இந்த காரை அது கான்செப்ட் மாடலாக மட்டுமே தயார் செய்திருக்கின்றது. அதேவேளையில், விரைவில் இந்த காரை சுஸுகி உற்பத்திக்கு அனுப்பி வைக்கும் என கூறப்படுகின்றது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் கூறுவதன்படி, இந்த மின்சார காரின் உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு அல்லது அதற்கு அடுத்த ஆண்டு தொடங்கிவிடும் என்பது தெரிகின்றது. ஆகையால், இதுவே நிறுவனத்தின் முதல் மின்சார காராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலக நாடுகள் பலவற்றில் இதனை சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில், இந்திய சந்தையிலும் இந்த இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளன. மாருதி சுஸுகியின் தயாரிப்புகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைக்கும் சந்தையாக இந்தியா இருக்கின்றது. ஆகையால், கட்டாயம் இதன் உற்பத்தி இந்தியாவில் தொடங்கும் என்றே நம்பப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி இருக்கின்றது. ஆனால், மின்சார கார் பிரிவில் டாடா மோட்டார்ஸே முன்னணியில் உள்ளது. நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் காராக நெக்ஸான் இவி எஸ்யூவி இருக்கின்றது. இதற்கே மாருதி சுஸுகியின் இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் வருகை மிகப் பெரிய போட்டியாக அமைய இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









