மாருதி கார்களிலா பாதுகாப்பு இல்ல? ஷோரூமுக்கு வரும்முன் 50+ கிராஷ் டெஸ்ட்கள் நடக்குது!!
மாருதி ஃப்ரான்க்ஸ் (Maruti Fronx) காரின் கிராஷ் டெஸ்ட் வீடியோவை மாருதி சுஸுகி நிறுவனம் அதன் யுடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. அதன் மூலம் ஃப்ரான்க்ஸ் காரை பற்றி தெரியவந்துள்ள விபரங்களையும், மாருதியின் இந்த கிராஷ் டெஸ்ட் சோதனையை பற்றிய விபரங்களையும் இனி பார்க்கலாம்.
மாருதி சுஸுகி, இந்தியாவின் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனம். மாதத்தோறும் இலட்சம் எண்ணிக்கையில் கார்களை அசால்ட்டாக விற்பனை செய்யும் மாருதி சுஸுகி நிறுவனம் புதியதாக வீடியோ ஒன்றை அதன் அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. அதில், ஃப்ரான்க்ஸ் காரின் கிராஷ் டெஸ்ட் தொடர்பான காட்சித் தொகுப்புகள் அடங்கியுள்ளன.

இது மாருதி ஃப்ரான்க்ஸ் காரின் உள் மோதல் சோதனை ஆகும். அதாவது, இந்த கிராஷ் டெஸ்ட்டை மாருதி சுஸுகியே தனது தொழிற்சாலைக்குள் நடத்துகிறது. ஃப்ரான்க்ஸ் காருக்கு மட்டுமின்றி, இந்த சோதனைகள் அனைத்து மாருதி கார்களுக்கும் வழங்கப்படுகின்றன என மாருதி சுஸுகி வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காகவே, தொழிற்சாலைக்குள் கட்டிங்-எட்ஜ் கிராஷ் டெஸ்ட் பிரிவு உள்ளது. இந்திய சாலைகளின் தரத்தை கருத்தில் கொண்டு இந்த கிராஷ் டெஸ்ட்கள் நடத்தப்படுவதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. க்ளோபல் என்சிஏபி, பாரத் என்சிஏபி-களில் பயன்படுத்துவதை போன்று டம்மிகள் மாருதி சுஸுகியின் கிராஷ் டெஸ்ட்களிலும் உபயோகப்படுத்தப் படுகின்றன.

இந்த கிராஷ் டெஸ்ட்களில், இந்திய வழிமுறைகளுக்கு ஏற்ப மாருதி கார்கள் முன்பக்கமாகவும், சைடு பகுதியிலும் மோதி சோதனை செய்யப்படுகின்றன. அதேநேரம், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, விபத்தின் போது மோதல் விசையை ஏற்றுக் கொள்ளும் வகையில் சேதமடையக் கூடிய பகுதிகள் சிலவற்றையும் உருவாக்குவதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
மாருதி கார் ஒன்று விற்பனைக்கு வருவதற்கு முன் 50க்கும் அதிகமான கிராஷ் டெஸ்ட்களில் ஈடுப்படுத்தப்படுவதாக தெரிவிக்கும் மாருதி சுஸுகி நிறுவனம், இதன் மூலமாக கார்களின் ஏர்பேக்குகள், இருக்கைகளுக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் மோதலின்போது காரின் உட்பக்க பாகங்களுக்கு ஏற்படும் தாக்கங்களை அளவிடுவதாகவும் கூறியுள்ளது.

இருப்பினும், க்ளோபல் என்சிஏபி போன்ற வெளி அமைப்பு ஒன்று நடத்தும் சோதனைகளையும், அதன் மூலம் வழங்கப்படும் மதிப்பெண்களையுமே வாடிக்கையாளர்கள் முக்கியமானதாக பார்க்கின்றனர். இதன் காரணமாகவே, மத்திய அரசாங்கம் இந்தியாவிற்கென தனியாக பாரத் என்சிஏபி-ஐ துவங்கியுள்ளது. பாரத் என்சிஏபி-இல் சோதனைகள் இந்த டிசம்பர் மாதத்தில் இருந்து துவங்கியுள்ளன.
சமீபத்தில்தான், பாரத் என்சிஏபி-இல் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட முதல் கார்களாக டாடா மோட்டார்ஸின் ஹெரியர் & சஃபாரி கார்களின் மதிப்பெண்கள் வெளிவந்தன. மாருதி சுஸுகி நிறுவனமும் பாரத் என்சிஏபி-க்கு தனது கார்களை ஏற்கனவே அனுப்பி வைத்திருக்கும். ஆதலால், விரைவில் மாருதி கார்களின் பாரத் என்சிஏபி மதிப்பெண்களையும் அறியலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி கார்கள் பெரியளவில் பாதுகாப்பானவை கிடையாது என்கிற கருத்து பரவலாகவே நம் மக்களிடத்தில் உள்ளது. அந்த பேச்சை குறைக்கும் நோக்கத்தில் ஃப்ரான்க்ஸ் காரின் இந்த கிராஷ் டெஸ்ட் வீடியோவை மாருதி சுஸுகி வெளியிட்டிருக்கலாம். அல்லது, பாரத் என்சிஏபி-க்கு அடுத்ததாக அனுப்பப்படவுள்ள மாருதி கார் இதுவென மறைமுகமாக தெரிவிக்கும் விதமாக இந்த வீடியோ வெளியிடப்பட்டு இருக்கலாம்.


Click it and Unblock the Notifications









