இந்தியாவிற்கு வந்தது 40 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட்! பைக் வாங்கறவங்க எல்லாம் இனி கார் வாங்க போறாங்க!
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) என்பது வெறும் கார் மட்டுமல்ல. இந்திய மக்கள் பலருக்கும் இது ஒரு எமோஷன். இந்திய சந்தையில் கடந்த 2005ம் ஆண்டுதான், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும் கூட, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் தற்போதும் விற்பனையில் சக்கை போடு போடுகிறது. தொடர்ச்சியான அப்டேட்கள்தான் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை சிறப்பாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் ஆகும். இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இருப்பது 3வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகும்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 4வது தலைமுறை மாடல், வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஜப்பான் மொபிலிட்டி ஷோ (Japan Mobility Show) வாகன திருவிழாவில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 4வது தலைமுறை மாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
முன்பு டோக்கியோ மோட்டார் ஷோ (Tokyo Motor Show) என அழைக்கப்பட்டு வந்த வாகன திருவிழாதான் தற்போது ஜப்பான் மொபிலிட்டி ஷோ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் இந்த புதிய மாடல் எப்போது விற்பனைக்கு வரும்? என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் வெகுவாக அதிகரித்தது.

அவர்களுக்கு எல்லாம் தற்போது மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், மாருதி சுஸுகி நிறுவனம் 4வது தலைமுறை ஸ்விஃப்ட் காரை இந்திய சாலைகளில் சோதனை செய்ய தொடங்கி விட்டதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
எனவே வரும் 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 4வது தலைமுறை மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். 4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதற்கு மைலேஜ்தான் (Mileage) மிக முக்கியமான காரணம் ஆகும்.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 4வது தலைமுறை மாடலில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் (Strong Hybrid) அம்சத்துடன் கூடிய புத்தம் புதிய இஸட்-சீரிஸ் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு சுமார் 40 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்திய வாடிக்கையாளர்கள் பொதுவாகவே மைலேஜிற்கு அதிக முக்கியத்துவம் வழங்குவார்கள். இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனம் நம்பர்-1 இடத்தில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். நிலைமை இப்படி இருக்கும்போது பைக்குகளை போல் ஒரு லிட்டருக்கு 40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் கார் என்றால், வாடிக்கையாளர்கள் விட்டு விடுவார்களா என்ன?
எனவேதான் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் புதிய மாடலை வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். மைலேஜ் தவிர, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே அம்சத்துடன் கூடிய 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளும், புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சோதனை ஓட்டம் தொடங்கியிருப்பது என்பது, 4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி நெருங்கி கொண்டுள்ளது என்பதையே காட்டுகிறது. எனவே இது நாம் சந்தோஷப்பட வேண்டிய ஒரு செய்தி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








