மாருதி காரில் இப்படி ஒரு பாதுகாப்பு வசதியா! ஊர் வாயை அடச்சுட்டாங்க! இனி ஒருத்தரும் கிண்டல் பண்ண முடியாது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). மாருதி சுஸுகி நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருவதற்கு, ஸ்விஃப்ட் காரும் ஒரு முக்கியமான காரணம் என்றால் மிகையல்ல.
இந்த சூழலில் 2023ம் ஆண்டிற்காக மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரை தற்போது அப்டேட் செய்துள்ளது. இஎஸ்பி என சுருக்கமாக அழைக்கப்படும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராமை (ESP - Electronic Stability Program) ஸ்விஃப்ட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கியிருப்பதுதான் இதில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்துள்ள மிகவும் முக்கியமான அப்டேட் ஆகும். மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரானது, LXi, VXi, ZXi மற்றும் ZXi Plus என மொத்தம் 4 வேரியண்ட்களில் கிடைத்து கொண்டுள்ளது.

பாதுகாப்பு வசதி!
இதில், ZXi Plus வேரியண்ட்டில் மட்டும்தான் முதலில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம் வசதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் இந்த வசதி கிடைக்கும். எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம் என்பது தற்போது கார்களில் வேகமாக பிரபலமடைந்து வரும் பாதுகாப்பு வசதி (Safety Feature) ஆகும். இனிமேல் அனைத்து வேரியண்ட்களிலும் இந்த வசதி கிடைக்கும் என்பதால், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட அனைத்து இக்கட்டான டிரைவிங் சூழல்களிலும், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம் வசதி காரின் டிரைவருக்கு உதவி செய்யும். பாதுகாப்பு விஷயத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் தொடர்ச்சியாக கிண்டல் அடிக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்விஃப்ட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம் வசதி ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் டாடா டியாகோ (Tata Tiago) போன்ற போட்டி மாடல்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வேற அப்டேட்கள் இருக்கா?
எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம் வசதியை ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கியுள்ளதை தவிர, ஸ்விஃப்ட் காரில் வேறு எந்தவொரு முக்கியமான மாற்றத்தையும் மாருதி சுஸுகி நிறுவனம் செய்யவில்லை. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 89 பிஹெச்பி பவரையும், 4,400 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
டீசல் இன்ஜின் இல்லாதப்பவே இவ்ளோ சேல்ஸ்'ஆ?
இதுதவிர சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை. மாருதி சுஸுகி நிறுவனத்தின் எந்தவொரு காரிலும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படுவது இல்லை. டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லாதபோதும் கூட மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை தொடர்ந்து சிறப்பான நிலையிலேயே இருந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இனி ஹைப்ரிட், சிஎன்ஜிதான்!
மாருதி சுஸுகி நிறுவனத்தை பொறுத்தவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே டீசல் இன்ஜின்களை கைவிட்டு விட்டது. தற்போதைய நிலையில் ஹைப்ரிட் (Hybrid) மற்றும் சிஎன்ஜி ஆகிய தொழில்நுட்பங்களில்தான் மாருதி சுஸுகி நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) என்ற ஹைப்ரிட் கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது இதற்கு ஒரு உதாரணம்.
இந்த காரும் வருதா!
இதுதவிர இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) ஹைப்ரிட் காரை தனது பிராண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் மாருதி சுஸுகி நிறுவனம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. டொயோட்டா-சுஸுகி நிறுவனங்களுக்கு இடையே கூட்டணி இருப்பதால், இந்த 2 நிறுவனங்களும் கார்களை பரிமாறி கொள்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
ஹைப்ரிட் கார்கள் தவிர, தனது பல்வேறு கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் புதிய சிஎன்ஜி (Maruti Suzuki Brezza CNG) வெர்ஷனும் வெகு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) திருவிழாவில், மாருதி சுஸுகி நிறுவனம் பிரெஸ்ஸா சிஎன்ஜி காரை காட்சிக்கு வைத்திருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








