டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் கார்களை அதிகளவில் விற்பனைக்குக் களமிறக்கி வந்த நிலையில், மாருதி சுஸுகி நிறுவனம் டாடா நிறுவனத்திற்கு டஃப் கொடுக்கும் விதமாக எலெக்ட்ரிக் கார்களை அதிகளவில் களமிறக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதன் மின் வாகன உற்பத்தி திட்டம் பற்றிய தகவலை சமீபத்தில் வெளியிட்டது. நிறுவனம் ஒட்டுமொத்தமாக 6 எலெக்ட்ரிக் கார்களை 2030 ஆம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய திட்டம் போட்டு இருக்கின்றது. அதில் ஒன்று மாருதி சுஸுகியின் பிரபல கார் மாடலில் ஒன்றான வேகன்ஆர் என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. சமீபத்தில் நிறுவனம் ஓர் டீசர் படத்தை வெளியிட்டது.

அதில், ஆறு கார்களின் நிழற்படங்கள் இடம் பெற்றிருந்தன. அதாவது, கார்களின் உருவத்தை வெளிக்காட்டாத அதன் ஸ்டைலை மட்டுமே பிரதிபலிக்கக் கூடிய படத்தை அது வெளியிட்டது. இதன் வாயிலாகவே நிறுவனம் வேகன்ஆர் அடிப்படையிலான எலெக்ட்ரிக் காரை உருவாக்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்தியாவில் தற்போது மிக குறைவான விலைக் கொண்ட எலெக்ட்ரிக் காராக டியாகோ இவி இருக்கிறது. இப்போதைய நிலவரப்படி இதற்கு போட்டி இல்லாத நிலையே தென்படுகின்றது.
இந்த பற்றாக்குறையை போக்கும் விதமாக மாருதி சுஸுகி வேகன்ஆரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை தயார் செய்துக் கொண்டிருக்கின்றது. ஆமாங்க, இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் டாடா டியாகோ இவிக்கு செம்ம போட்டியாக இருக்கும். ஆனால், இதன் வருகை எப்போது அமையும் என்கிற தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. அதேவேளையில், வேகன்ஆர் எலெக்ட்ரிக்கை இந்திய சாலையில் வைத்து பல மாதங்களாக அது சோதனைக்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றது.

ஆகையால், எப்போது வேண்டுமானாலும் இதன் வருகை அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாருதி சுஸுகி அதன் முதல் எலெக்ட்ரிக் காரை வரும் 2024 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கார் வேகன்ஆர் எலெக்ட்ரிக்காக கூட இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஆனால், இதை மாருதி சுஸுகி உறுதிப்படுத்தவில்லை. ஆமாங்க, இதுவரை எந்த எலெக்ட்ரிக் காரை முதலில் விற்பனைக்குக் கொண்டு வரப் போகிறோம் என்கிற தகவலை அது வெளியிடவில்லை.
ஆகையால், இந்த விஷயத்தில் மாருதி சுஸுகி கார் பிரியர்களுக்கு மிகப் பெரிய குழப்பம் நிலவிக் கொண்டிருக்கின்றது. கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக, ஒரு பக்கம் அந்நிறுவனம் புதுமுக இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரையே முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மின்சார காரை 2023 ஆட்டோ எக்ஸ்போவிலேயே நிறுவனம் முதல் முறையாக காட்சிப்படுத்தியது. இதனை நிறுவனம் அதிகம் பிரீமியம் வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் காராக வடிவைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இது ஓர் முழு சார்ஜில் 550 கிமீ ரேஞ்ஜை வழங்குமாம். மேலும், பார்க்கவும் மிகவும் கவர்ச்சிகரமான வாகனமாக அது வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இதனை இப்போது விற்பனையில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் டாடா நெக்ஸான் இவி-க்கு போட்டியாக களமிறக்க மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலாக நெக்ஸான் இவி இருக்கின்றது. இது இரு விதமான மாடல்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
நெக்ஸான் இவி பிரைம் மற்றும் நெக்ஸான் இவி பிளஸ் அவை ஆகும். இதில், நெக்ஸான் இவி பிரைம் ஓர் முழு சார்ஜில் 437 கிமீ ரேஞ்ஜையும், நெக்ஸான் இவி பிளஸ் ஓர் ஃபுல் சார்ஜில் 312 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும். இத்தகைய ரேஞ்ஜ் திறன் கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு போட்டியாகவே மாருதி சுஸுகி அதன் இவிஎக்ஸ் காரை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.
இதுமட்டுமின்றி, ஜிம்னி அடிப்படையிலான எலெக்ட்ரிக் கார், ஸ்விஃப்ட் இவி வெர்ஷன், பலேனோ இவி வெர்ஷன் மற்றும் ஃப்ரான்க்ஸ் இவி வெர்ஷன் ஆகியவற்றையும் நாட்டில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இவற்றில் எதை வேண்டுமானாலும் மாருதி சுஸுகி நிறுவனம் முதலில் விற்பனைக்குக் கொண்டு வரலாம். இந்த கார் மாடல்கள் அனைத்திற்குமே இந்தியாவில் நல்ல வரவேற்பு உண்டு. அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








