மலிவு விலை ஃப்யூவலில் ஓடும் வேகன்ஆர்... இந்தியா வாகன கண்காட்சியில் அறிமுகம்!
மாருதி சுஸுகி அதன் ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் வேகன்ஆர் காரை இந்தியா 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இந்த கார் குறித்த மேலும் முக்கியமான விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மாருதி சுஸுகி நிறுவனம் அதன் மலிவு விலை ஃப்யூவலில் இயங்கும் வேகன்ஆர் கார் மாடலை மீண்டும் இந்தியாவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. தற்போது இந்தியா 2023 ஆட்டோ எக்ஸ்போ தலைநகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியிலேயே ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கக் கூடிய வேகன்ஆர் கார் மாடலை மாருதி சுஸுகி காட்சிப்படுத்தி இருக்கின்றது.

இது அறிமுகமாவது முதல் முறையல்ல
இந்த காரை நிறுவனம் இந்தியாவில் காட்சிப்படுத்துவது முதல் முறை அல்ல. இதனால்தான் மாருதி இந்த காரை மீண்டும் இந்தியாவில் காட்சிப்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டு இருக்கின்றோம். முன்னதாக சியாம் என அழைக்கப்படும் இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் நிகழ்த்திய ஓர் நிகழ்ச்சியிலேயே இந்த கார் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. 2022 டிசம்பரிலேயே இந்த நிகழ்ச்சி அரங்கேறியது என்பது குறிப்பிடத்தகுந்தது.
கூட்டணி போட்டு உருவாக்கி இருக்காங்க
மாருதி சுஸுகி நிறுவனம், சுஸுகி ஜப்பான் உடன் இணைந்தே இந்த கார் உருவாக்கி இருக்கின்றது. சுஸுகி ஜப்பான் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வேகன்ஆர் காரின் உற்பத்தியில் கை கொடுத்திருந்தாலும், முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு வாகனமாகவே இதன் உருவாக்கம் அமைந்துள்ளது. இத்தகைய சூப்பரான வாகனத்தையே ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக மாருதி சுஸுகி மீண்டும் நாட்டில் காட்சிப்படுத்தி இருக்கின்றது.

எத்தனாலில் இயங்கும்
இந்த வேகன்ஆர் கார் மாடலின் சிறப்பே அதிக எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளிலும் இயங்கும் என்பதுதான். இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால், 80 சதவீதம் பெட்ரோல் - 20 எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருள் அல்லது 15 சதவீதம் பெட்ரோல் - 85 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளிலும் இந்த கார் இயங்கும். இந்த திறனே இந்த காரின்மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு எகிறச் செய்திருக்கின்றது. எத்தனால் கரும்பு சக்கைப் போன்ற விவசாய கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுவதால் அதன் விலை பல மடங்கு குறைவாக இருக்கும்.
நாட்டில் எத்தனாலின் தேவையை அதிகப்படுத்துவதனால் அது இந்திய விவசாய துறையையும் வளர செய்யும். மேலும், பெட்ரோல் பயன்பாடும் நாட்டில் பல மடங்கு குறையத் தொடங்கும். எத்தனாலின் தேவை அதிகரிப்பதால் இன்னும் பல மடங்கு நன்மைகள் ஏற்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. எனவேதான் அரசும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்களை கட்டாயப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையிலேயே மாருதி சுஸுகி வேகன்ஆர் 20 சதவீதம் (இ20) தொடங்கி 85 சதவீத (இ85)-த்திற்கு இடைப்பட்ட எத்தனால் - பெட்ரோல் கலக்கப்பட்ட எரிபொருளிலும் இயங்கும் காரை வெளியீடு செய்துள்ளது.

புதிய டெக்னாலஜி
நிறுவனத்தின் இந்த செயல் மாருதி வெகு விரைவில் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் காரை விற்பனைக்குக் கொண்டு வரலாம் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த காருக்காக மாருதி சுஸுகி நிறுவனம் புதிய ஃப்யூவல் சிஸ்டம் டெக்னாலஜியை உருவாக்கி இருக்கின்றது. இது எத்தனால் சதவீதத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப எஞ்ஜினின் எரிபொருள் எரிப்பு திறனை அதிகரிக்கச் செய்ய உதவும். இதன் வாயிலாகவே இந்த வேகனால் ஃப்ளெக்ஸி ஃப்யூவல் வாகனமாக மாற முடிந்திருக்கின்றது.
இந்த திறனுக்காக எஞ்ஜின் மேனேஜ்மென்ட் சிஸ்டம், அப்கிரேடட் ஃப்யூவல் பம்ப் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்டர் உள்ளிட்ட அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. மாருதி சுஸுகி உருவாக்கி இருக்கும் இந்த மாதிரியான காரை இன்னும் பல நிறுவனங்கள் உருவாக்கத் தொடங்கி இருக்கின்றது. இந்தியாவில் வெகு விரைவில் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்கள் கட்டாயமாக்கப்பட இருக்கின்றன.
பிற நிறுவனங்களும் ஆர்வம்
ஆகையால், வாகன உற்பத்தியாளர்கள் ஃப்ளெக்ஸி ஃப்யூவலில் இயங்கும் வாகனங்களை உருவாக்குவதில் அதிகம் தீவிரம் காட்டுகின்றனர். இந்த வாகனங்களின் வாயிலாக நாட்டின் கச்சா எண்ணெய் தேவையை குறைக்க முடியும். இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறையும். மேலும், பெட்ரோலுக்காக பிற நாடுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழலையும் தவிர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications








