இந்தியா ஏழை நாடு என்று யாருங்க சொன்னது!! பென்ஸ் கார்களை வாங்க மட்டும் இத்தனை பேர் இருக்காங்க!
மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனம் கடந்த 9 மாதங்களில் மட்டும் இந்தியாவில் சுமார் 12.7 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளதாக ஓர் அசர வைக்கும் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. வாங்க அதனை பற்றி விரிவாக இனி பார்க்கலாம்.
உலகளவில் பிரபலமான மற்றும் பழமையான சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் மெர்சிடிஸ்-பென்ஸ் ஆகும். குறிப்பாக, உலகின் முக்கிய ஆட்டோமொபைல் சந்தைகளுள் ஒன்றாக விளங்கும் இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்-பென்ஸ் கடந்த பல வருடங்களாக முன்னிலை வகிக்கிறது. இதற்கடுத்தே பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற மற்ற சொகுசு கார் நிறுவனங்கள் உள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துக்கு இந்தியாவில் கடந்த சில மாதங்களாக விற்பனை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக மெர்சிடிஸின் இ-கிளாஸ் ஜிஎல்சி மற்றும் ஜிஎல்இ கார்களை சொல்ல வேண்டும். இதனை வெளிப்படுத்தும் வகையில், சமீப காலத்தில் இந்தியாவில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்களை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பார்த்தால், இந்த 2023ஆம் வருடத்தில், அதாவது கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் இந்த 9 மாத காலத்தில் சுமார் 12,766 சொகுசு கார்களை இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இத்தனை கார்களை குறுகிய காலத்தில் விற்பனை செய்ததில் சந்தோஷமாக இருக்கும் மெர்சிடிஸ், கடந்த 2022ஆம் ஆண்டை விட இந்த ஆண்டில் 11% வளர்ச்சியை சந்தித்துள்ளதாக பெருமையாக கூறுகிறது. மெர்சிடிஸ் ஏஎம்ஜி மற்றும் இக்யூஎஸ் எலக்ட்ரிக் கார்கள் போன்ற உயர் தரத்திலான கார்களையும் மக்கள் அதிகளவில் வாங்குவதாக மெர்சிடிஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2023ஆம் வருடத்தின் 3ஆம் காலாண்டில் (ஜூலை - செப்டம்பர்), கார்களை உற்பத்தி செய்வதற்கான பாகங்களை பெறுவதில் சில பிரச்சனைகள் இருந்த போதிலும், தங்களது தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த 3 மாதங்களில் அதிக தேவை இருந்ததாக மெர்சிடிஸ் நிறுவனம் தெரிவிக்கிக்கிறது.

மெர்சிடிஸ் கார்களில் எஸ்-கிளாஸ், ஜி.எல்.எஸ், ஜி.எல்.எஸ் மேபக், எஸ்-கிளாஸ் மேபக், இ.க்யூ.எஸ் மற்றும் ஏஎம்ஜி உள்ளிட்டவை மொத்த விற்பனையில் 25% பங்களித்துள்ளன. இதுகுறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான சந்தோஷ் ஐய்யர் கருத்து தெரிவிக்கையில், "மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களுக்கான வலுவான விருப்பம் எங்கள் ஜனவரி -செப்டம்பர் விற்பனை வேகத்தை உயர்த்தியுள்ளது.
எவ்வாறாயினும், முழு சந்தை சாத்தியக் கூறுகளின்படி குறிப்பாக ஜிஎல்சி போன்ற புதிய தயாரிப்புகளை எங்களால் உற்பத்தி செய்ய முடியவில்லை. தற்போதைய விநியோக சங்கிலி சவால்கள் இருந்த போதிலும், வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நாங்கள் எல்லா முயற்சிகளையும் செய்கிறோம்" என கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுதான், இந்தியாவின் நம்பர் ஒன் லக்சரி கார் பிராண்ட் மெர்சிடிஸ் பென்ஸ். சொகுசு கார்களை வாங்குவோரில் பலரது தேர்வு முதலாவதாக மெர்சிடிஸை நோக்கியே உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், மெர்சிடிஸின் சேவை பராமரிப்புகளை இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பெற முடிகிறது என்பதை சொல்லலாம்.


Click it and Unblock the Notifications









