மண்ணில் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சொகுசு கார்.. இந்த கார யாருங்க இப்படி பண்ணது?..
சொகுசு கார் பிரியர்களின் மனம் கவர்ந்த ஆடம்பர கார் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் (Mercedes Benz E Class) இருக்கின்றது. இந்த காரை கரடு, முரடான கற்கள் மற்றும் மணலில் புதைந்த நிலையில் வாகன ஆர்வலர்கள் சிலர் கண்டெடுத்திருக்கின்றனர்.
மேலும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர்கள் இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். இந்த படமே இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. சொகுசு காரின் இந்த நிலைக்கு யார் காரணம்?, எப்படி இந்த இடத்திற்கு அந்த கார் வந்தது? இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் புகழ்பெற்ற சொகுசு கார் மாடல்களில் ஒன்றாக இ கிளாஸ் (E Class) இருக்கின்றது. சற்று குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் பென்ஸ் சொகுசு கார் மாடல் இது என்பதால் இதற்கும் வரவேற்பும் சற்று சூப்பராக இருக்கின்றது.
இதன் ஆரம்ப விலையே ரூ. 75 லட்சம் ஆகும். இது உங்களுக்கு மலிவு விலையா என கேட்கத் தோன்றலாம். பல கோடிகளை கார்களுக்கு கொட்டி சொகுசு பயணத்தை மோற்கொள்வோருக்கு குறைவான விலை காராக இது காட்சியளிக்கின்றது. இத்தகைய காரையே ஆற்றின் மையப் பகுதியில் கற்கள் மற்றும் மண்ணில் புதைந்த நிலையில் சிலர் கண்டெடுத்திருக்கின்றனர்.

இமாச்சல பிரதேசத்திலேயே பென்ஸ் இ கிளாஸ் காருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. இது வேண்டும் என்றே கை விடப்பட்ட கார் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. சமீபத்தில் இமாச்சலத்தில் மாநிலத்தையே புரட்டிப் போடும் வகையில் மேக வெடிப்பு ஏற்பட்டது. அதாவது, மழை கொட்டோ கொட்டென கொட்டி தீர்த்தது.
திடீரென கன மழை பொழிந்ததில் சாலையெங்கும் வெள்ளக் காடாக மாறியது. மேலும், வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதில் அங்கிருந்த வீடுகள் பல ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் மட்டுமல்ல வாகனங்கள் பலவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அவ்வாறு வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்ட சொகுசு காரே தற்போது ஆற்றுக்கு நடுவே மண்ணில் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றது.

கார் கண்டெடுக்கப்பட்ட துள்ளியமான இட விபரம் தெரியவில்லை. இருப்பினும், அந்த சொகுசு செடான் ரக கார் வெள்ள நீரால் கடுமையாக சேதமடைந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. பாதுகாப்பற்ற நிலையில் நிறுத்தப்பட்டிருந்ததே இந்த காருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட காரணமாக இருக்கும் என யூகிக்க முடிகின்றது.
மழை நேரத்தில் சாலையோரம் அல்லது ஆபத்தான நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்திருக்கலாம், இந்த நிலையிலேயே அது அடித்து வரப்பட்டிருக்கும் என்றும் யூகிக்க முடிகின்றது. இதுபோன்று ஆபத்தான சூழல் இருக்கின்றன காரணத்தினால் கன மழைக்கு முன்னரே உங்கள் காரை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.
ஆனால், இதை பலர் செவி கொடுத்துக் கூட கேட்பதில்லை. இந்த மாதிரியான ஓர் நபரின் சொகுசு காரே தற்போது ஆற்றங்கரை ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று சிக்கலில் சிக்காமல் இருக்க வேண்டும் எனில் பாதுகாப்பான பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டும். குறிப்பாக, மழை வெள்ளத்திற்கு முன்னர் வெள்ளத்தால் பாதிக்கப்படாத இடத்தை தேடிபிடித்து அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்துவதே மிக சிறந்தது.
இவ்வாறு கணிசமான நடவடிக்கைகளை எடுப்பதனால் மட்டுமே வாகனங்களை காட்டாற்று வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க முடியும். தற்போது, ஆற்றின் நடுவில் சிக்கி இருக்கும் சொகுசு கார் யாருக்கு சொந்தமானது என்பது தெரியவில்லை. விரைவில் அந்த வாகனம் கிரேன் உதவி உடன் மீட்கப்பட இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மழையோ, வெயிலோ எதுவாக இருந்தாலும் இந்தியாவை ஒரு கை பார்த்துவிடும். இதனால்தான் மழைக்காலம், வெயில் காலம் எது வந்தாலும், அதற்கு முன்னதாக உங்களின் வாகனத்திற்கு தேவையான பராமரிப்புகளை எல்லாம் செய்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. வெயில் காலத்தின்போது ஏசி போன்றவற்றையும், மழை காலத்திற்கு முன்னர் பேட்டரி, பிரேக் மற்றும் டயர் போன்றவற்றையும் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications
