இந்த நாட்டுல போலீஸ்காரராகவே கொடுத்து வச்சிருக்கணும் போல! இந்த காரையும் காவல்துறை பயன்பாட்டுல இணைச்சுட்டாங்களா!
உலகமே பார்த்து வியந்து போகும் அளவிற்கு துபாய் காவல்துறை இருக்கின்றது. குறிப்பாக துபாய் காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள்தான் நம்மில் பலரை அவர்களை பார்த்து பொறாமை அடைய செய்யும் வகையில் இருக்கின்றது. எப்படியாச்சும் உருண்டு புரண்டாச்சும் அந்த நாட்டுல போலீஸ் வேலையை வாங்கிடலாமா என நினைக்கச் செய்யும் அளவிற்கு அந்த நாட்டு காவல்துறையில் சூப்பர் சூப்பரான கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி வி8, பிரபுஸ், லைகன் ஹைபர் ஸ்போர்ட், ஜி ஹைத், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி மற்றும் ஜெனசிஸ் ஜிவி 80 என பல அரிய வகை சொகுசு கார்கள் துபாய் காவல்துறையின் பயன்பாட்டில் இருக்கின்றன. இதுதவிர, அஸ்டன் மார்ட்டின், கடில்லாக், புகாட்டி உள்ளிட்ட நிறுவனங்களின் விலை உயர்ந்த ஆடம்பர கார்களையும் துபாய் காவல்துறை பயன்படுத்தி வருகின்றது.

இந்த நிலையிலேயே தற்போது மேலும் ஓர் சொகுசு கார் துபாய் காவல்துறையில் இணைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் 580 (Mercedes Benz EQS 580) சொகுசு காரே துபாய் காவல்துறையில் தற்போது புதிதாக இணைக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த தகவல் கார் காதலர்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. இது ஓர் ஆடம்பர வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் காராகும். சுமார் ஐந்து பேர் வரை இந்த எலெக்ட்ரிக் காரில் அமர்ந்து பயணிக்க முடியும். மேலும், இந்த எலெக்ட்ரிக் காரின் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்டவை.

இதற்காக 516 குதிரை திறனை வெளியேற்றக் கூடிய இரட்டை எஞ்ஜின் செட்-அப்பே காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரால் வெறும் 4.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதுதவிர ஓர் முழு சார்ஜில் 717 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி பேக்கே மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் 580 எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்தியாவிலும் இந்த சொகுசு எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதமே இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ. 1.59 கோடிக்கும் அதிகமான விலையிலேயே இந்த கார் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய உச்சபட்ச விலையில் விற்கப்படும் ஆடம்பர எலெக்ட்ரிக் காரே தற்போது துபாய் காவல்துறையில் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பென்ஸ் இக்யூஎஸ் 580 எலெக்ட்ரிக் காரில் 107.8 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 857 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
மேலும், வெறும் 15 நிமிடங்கள் ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் 300 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். இதுதவிர, சொகுசு வசதிகள் மற்றும் நவீன கால அம்சங்கள் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கும் ஓர் சொகுசு எலெக்ட்ரிக் காராக இதுக் காட்சியளிக்கின்றது.
இந்த மின்சார காரின் டேஷ்போர்டில் ஹைபர் திரை ஒன்று வழங்கப்பட்டு இருக்கின்றது. மூன்று விதமான திரைகளைக் கொண்டதே இந்த ஹைபர் திரை ஆகும். 3டி மேப் போன்ற பல்வேறு வசதிகளை அதில் பெற்றுக் கொள்ள முடியும். இத்துடன், ஹெட்-அப் திரை, மசாஜ் செய்யும் வசதிக் கொண்ட இருக்கைகள், பர்மெஸ்டர் 3டி ஆடியோ, ஏர் ஃபில்டர், பின் இருக்கையாளர்கள் பொழுதை போக்குவதற்கான 'டேப்'போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன் பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், , 9 ஏர் பேக்குகள் லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், அவசரகால தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் போன்ற அம்சங்களே மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் காவல்துறையில் மாருதி சுஸுகி ஜிப்ஸி, மஹிந்திரா பொலிரோ மற்றும் பொலிரோ நியோ, டொயோட்டா இன்னோவா போன்ற கார் மாடல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. காவல்துறையின் மிக உயரிய பொருப்பில் இருப்பவர்களுக்குகூட டொயோட்டா இன்னோவாவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications
