கியா அளவுக்கு வளர முடியல!! பொறுத்தது போதும்... பொங்கி எழ போகும் எம்ஜி மோட்டார்!
எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் இந்தியாவில் அடுத்த 2 வருடங்களில் கிட்டத்தட்ட 7 புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எம்ஜி இந்திய மார்க்கெட்டிற்கு கொண்டுவர உள்ள இந்த 7 புதிய கார்கள் என்னென்ன என்பதை இனி பார்க்கலாம்.
பிரிட்டிஷ் கார் நிறுவனமாக இருப்பினும், சீன ஆட்டோமொபைல் நிறுவனத்தின் கீழ் செயல்படும் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவின் ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்துடன் சமீபத்தில் கூட்டணியில் இணைந்ததை கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த கூட்டணியை தொடர்ந்து, தங்களது அடுத்த திட்டங்கள் என்னென்ன என்பதை அதன் டீலர்களுக்கு எம்ஜி மோட்டார் விளக்கியுள்ளது.

இதன்படி பார்க்கும்போது, வரும் ஆண்டுகளில் பிளக்-இன் ஹைப்ரீட் கார்களிலும், பேட்டரி கார்களிலும் கூடுதல் கவனம் செலுத்த போகிறது. அதேநேரம், தற்போது விற்பனையில் இருக்கும் பெட்ரோல்/ டீசல் கார்களையும் அவ்வப்போது அப்கிரேட் செய்யவும் எம்ஜி திட்டமிட்டுள்ளது. அதாவது, தற்போதைய கார்களையும் முடிந்த வரையில் விற்பனை செய்ய எம்ஜி விரும்புகிறது.
இதில் முதலாவதாக, எம்ஜி க்ளோஸ்டர் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் பிரீமியம் தரத்திலான எஸ்யூவி கார் வருகிற 2024இல் அப்டேட் செய்யப்பட உள்ளது. இருப்பினும், முற்றிலும் புத்தம் புதியதாக ஒரு பெட்ரோல்/ டீசல் காரை இனி இந்தியாவில் அறிமுகம் செய்ய போவதில்லை என எம்ஜி திட்டவட்டமாக உள்ளதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2023 ஆட்டோ எக்ஸ்போவில், எம்ஜி நிறுவனம் இ.எச்.எஸ், மிஃபா9, எம்ஜி4, எம்ஜி5 என வெளிநாட்டில் விற்பனை செய்யும் சில எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரீட் கார்களை இந்தியாவில் காட்சிப்படுத்தி இருந்தது. இதில் இ.எச்.எஸ் மட்டும் ப்ளக்-இன் ஹைப்ரீட் கார் ஆகும். மிஃபா9 ஆனது பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் எம்பிவி கார் ஆகும்.
எம்ஜி4 மற்றும் எம்ஜி5 இரண்டும் எலக்ட்ரிக் கார்கள் தான். ஆனால், தோற்றத்தில் இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கும். அதாவது, எம்ஜி4 ஆனது ஹேட்ச்பேக் உடலமைப்பிலும், எம்ஜி5 எஸ்டேட் உடலமைப்பிலும் இருக்கும். ஹேட்ச்பேக், எஸ்டேட் இரண்டு உடலமைப்பிற்கும் பெரியதாக வித்தியாசம் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.

எம்ஜி மோட்டாரை சீனாவை சேர்ந்த ஒரு குழுமம் கண்ட்ரோல் செய்வதாக கூறினோம் அல்லவா. அந்த சீன குழுமத்தின் பெயர் SAIC. பலத்த போட்டி மிகுந்த சீன கார்கள் சந்தையில் முன்னணியில் இருக்கும் SAIC இந்தியாவில் வலுவாக கால்பதிக்க நீண்ட வருடங்களாகவே முயற்சித்து வருகிறது. 2019இல் எம்ஜி மோட்டார் இந்திய சந்தையில் நுழைந்ததும், அந்த முயற்சியின் விளைவாகவே ஆகும்.
ஆனால் இன்னமும் தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இந்திய மார்க்கெட்டில் வெற்றியை பெறவில்லை என SAIC குழுமத்தின் மூத்த அதிகாரி ஒருவர் சமீபத்தில் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். மேற்கூறப்பட்ட கார்களை அடுத்த 2 ஆண்டுகளில் அறிமுகம் செய்வது மட்டுமின்றி, எம்ஜி மோட்டார் நிறுவனம் அதன் வாடிக்கையாளர் தொடுமையங்களின் எண்ணிக்கையை 270 நகரங்களில் 400ஆக அதிகரிக்கவும் தயாராகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2019இல் ஒரே சமயத்தில் இந்திய சந்தையில் நுழைந்த போதிலும், தென்கொரிய கார் நிறுவனமான கியா அளவிற்கு எம்ஜி மோட்டார் வளர்ச்சியையும், புகழையும் நம் நாட்டில் காணவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனையடுத்தே, இந்தியாவின் பிரபலமான ஜே.எஸ்.டபிள்யூ உடன் எம்ஜி கூட்டணி சேர்ந்துள்ளது. பார்ப்போம் இனியாவது எம்ஜி-க்கு எதாவது நல்லது நடக்குமா என்று...


Click it and Unblock the Notifications









