உலக நாடுகளுக்கே இந்தியா டஃப் கொடுக்க போகுது... பெங்களூரு நிறுவனம் உருவாக்கிய டிரைவரே இல்லாமல் ஓடும் கார்!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் மைனஸ் ஜீரோ (Minus Zero). இது ஓர் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே தன்னுடைய முதல் தானியங்கி வாகனத்தை வெளியீடு செய்திருக்கின்றது. இசட்பாட் (zPod) எனும் எலெக்ட்ரிக் வாகனத்தையே அது வெளியீடு செய்திருக்கின்றது.
இந்த வாகனத்தை ஓட்ட தனியாக டிரைவர் தேவைப்படாது. முழுக்க முழுக்க தானாகவே ஓடும் திறன் கொண்ட 'செல்ஃப் டிரைவிங்' வாகனம் இது ஆகும். இதில் கூடுதல் சிறப்பாக, ஏஐ (Aritifical intelligence) தொழில்நுட்பத்தைக் கொண்டே இந்த வாகனத்தை நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது.

இந்த வாகனத்தின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் இது ஓர் இந்திய தயாரிப்பு ஆகும். இந்த வாகனத்தை மைனஸ் ஜீரோ நிறுவனம் உருவாக்கியதன் நோக்கம், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, சாலை விபத்துகளைக் குறைப்பதே ஆகும். மற்ற தானியங்கி வாகனங்களைப் போல் இல்லாமல் இந்த வாகனத்தை மிகவும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டதாக மைனஸ் ஜீரோ உருவாக்கி இருக்கின்றது.
பொதுவாக லிடார் தொழில்நுட்பமே தன்னாட்சி வாகனங்களில் பயன்படுத்தப்படும். ஆனால், இந்த சென்சார்களுக்கு பதிலாக மைனஸ் ஜீரோவின் இசட்பாட்-இல் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட கேமிராக்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவை மனித மூலையைவிட மிக சிறப்பாக இயங்கக் கூடியவை. சிறு தவறைகூட அது செய்யாது என நிறுவனம் உறுதி அளிக்கின்றது.

ஒட்டுமொத்தமாக ஆறு கேமிராக்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. வாகனத்தின் முன் பக்கத்தில் நான்கு கேமிராக்களும், பின் பக்கத்தில் இரண்டு கேமிராக்களும் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இவை சாலையைத் தொடர்ந்து கண்கானிக்கும். இதன் அடிப்படையிலேயே வாகனத்தை அது கட்டுப்படுத்தும். சாலையில் குறுக்கே ஏதேனும் வாகனம் வந்தால் இந்த கேமிராக்கள் வாயிலாகக் கண்டறியப்பட்டு வேகத்தைக் குறைத்தல், பிரேக் பிடித்தல் மற்றும் திசையை மாற்றி இயக்குதல் உள்ளிட்டவற்றை தன்னிச்சையாக இசட்பாட் செய்யும்.
மைனஸ் ஜீரோ நிறுவனம் தன்னுடைய இந்த தன்னாட்சி தொழில்நுட்பத்தை பிற வாகனங்களிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்து இருக்கின்றது. மின்சாரம், ஐசிஐ என எந்த வாகனமாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், அந்த வாகனம் தன்னாட்சி தொழில்நுட்பத்தை தாங்கிக் கொள்ளும் திறன் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

அவ்வாறு இருக்கும் வாகனங்களால் மைனஸ் ஜீரோவின் இந்த லேட்டஸ்ட் டெக்னாலஜியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனை 'ட்ரூ அடானமி கான்செப்ட்' எனும் பெயரில் இசட்-பாட் கான்செப்ட் உடன் சேர்த்து நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இசட்பாட் வாகனத்தில் நான்கு பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.
வழக்கமான வாகனங்களில் காணப்படுவதைப் போன்ற மேனுவல் கன்ட்ரோல்கள் இந்த காரில் இருக்காது. ஸ்டியரிங் வீல், பிரேக், ஆக்சலரேஷன் மற்றும் கிளட்ச் என எந்த முக்கிய அம்சங்களும் இதில் இருக்காது. அவற்றிற்கு திரை ஒன்றே வழங்கப்பட்டு இருக்கும். இதன் வாயிலாகவே கட்டளைகளை வாகனத்திற்கு வழங்க வேண்டும். இதன்படியே வாகனம் இயங்கச் செய்யும்.
இந்த வாகனத்தை பிரத்யேகமாக உள்-வளாக பயன்பாட்டை மையக் கருத்தாகக் கொண்டு நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. அதாவது, ரயில்களில் இயக்கப்படும் பேட்டரி வாகனங்கள் மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பயன்படுத்தப்படும் பேட்டரி வாகனங்களை போல பயன்படும் ஓர் வாகனமாகவே இதனை உருவாக்கி இருக்கின்றது.
அதேவேளையில், இப்போதைய நிலவரப்படி இந்த வாகனத்தை உருவாக்கும் எண்ணம் இல்லை என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், இன்னும் ஒரு சில வருடங்களுக்கு மைனஸ் ஜூரோவின் இசட்பாட் எதிர்காலத்தின் கனவு வாகனமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வாகனம் பயன்பாட்டிற்கு வரும் எனில் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு கடுமையான போட்டியை வழங்கும் வகையில் இந்த இந்திய தயாரிப்பு இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக நாடுகள் சிலவற்றில் மட்டுமே இந்த மாதிரியான தன்னாட்டு வாகனங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றின் வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்திருக்கின்றது. இந்த வாகனத்தை ஐஐடி, உயிரியல் பூங்கா போன்ற மிகப் பெரிய வளாகங்களைக் கொண்ட கேம்பஸ்களில் டிரைவலே இல்லாமல் இயங்கும் வாகனமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications









