இந்த நிறுவனம் இவ்ளோ சீப்பா நடந்துக்கும்னு யாருமே எதிர்பார்க்கல... பேருக்குதான் பெரிய பிராண்ட்..
செகண்ட் ஹேண்ட் கார்களை விற்பனை செய்பவர்கள், தங்களிடம் இருக்கும் கார்களை விற்க வாடிக்கையாளர்களிடம் பொய்களை கட்டவிழ்த்து விடுவார்கள். இதை நம்பி அவர்களும் அந்த காரை வாங்கி சென்றுவிடுவர். சில நாட்கள் சென்ற பின்னரே, தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அவர் உணர்வார். இது தெரிய வந்தாலும் எந்த பலனும் கிடைக்காது.
திரும்பி சென்று கேட்டால், அந்த பாதிப்பிற்கான காரணத்தை அந்த வாடிக்கையாளரின் தலைமீதே போட்டு விடுவார் அந்த செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையாளர். இதுபோன்று நாட்டில் ஏமாந்தவர்கள் பலர் இருக்கின்றனர். இதற்காக பழைய வாகனங்களை விற்பவர்கள் மட்டுமே ஏமாற்றுவார்கள் என தப்புக் கணக்கு போட்டுவிட வேண்டாம்.

ஏனென்றால், எப்படியாவது காரை விற்றுவிட என்ற நோக்கில் சில புதிய கார் விற்பனையாளர்களும் நாட்டில் இருக்கதான் செய்கின்றனர். புதிய வாகனங்களை எப்படியாவது தலையில் கட்டிவிட வேண்டும் என்பதற்காக பல்வேறு பில்டப்புகளை அவர்கள் காட்டுவார்கள். குறிப்பாக, அதிக லாபத்திற்காக அவர்கள் கட்டவிழ்க்கும் கட்டுக்கதைகளை கேட்டால் நமக்கு தலை சுத்தலே வந்துவிடும்.
இந்த மாதிரியான சூழலிலேயே பெருத்த லாபத்திற்காக பொய் கூறி வாகனத்தை விற்பனைச் செய்த ஓர் முன்னணி நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தக்க பாடம் புகட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2013 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு காரை 2014இல் தயாரித்ததாக பொய் கூறி பழைய காரை வாடிக்கையாளரின் தலையில் நிறுவனம் கட்டி இருக்கின்றது.

இந்த விவகாரத்திலேயே வாடிக்கையாளர்களுக்கு சாதகமான தீர்ப்பை குர்கான் தேசிய நுகர்வோர் தகராறு நிவர்த்தி ஆணையம் (National Consumer Disputes Redressal Commission) வழங்கி இருக்கின்றது. ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளருக்கு நிவாரணமாக ரூ. 18 லட்சத்தை வழங்க நிறுவனம் உத்தரவிட்டு இருக்கின்றது. ஹரியானா மாநிலம், குர்கானைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் மிட்டல்.
இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு புத்தம் புதிய போர்ஷே கேயன்னே சொகுசு காரை ரூ. 80 லட்சம் கொடுத்து வாங்கி இருக்கின்றார். அவர் வசிக்கும் அதே பகுதியில் உள்ள போர்ஷே கார் விற்பனையாளர் ஒருவர் வாயிலாகவே கேயன்னே வாங்கப்பட்டு இருக்கின்றது.
காரை வாங்கும்போது அவரிடம் அந்த கார் 2014ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட வாகனம் என கூறி விற்கப்பட்டு இருக்கின்றது. இதை நம்பி அவரும் காரை வாங்கி சென்றிருக்கின்றார். 2014 ஆம் ஆண்டில் அந்த காரின் விலை என்னவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததோ, அதை அப்படியே செலுத்தி அவர் வாங்கி இருக்கின்றார்.
இந்த நிலையிலேயே கடந்த 2016 ஆண்டில் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை பிரவீன் மிட்டல் உணர்ந்திருக்கின்றார். தன்னுடைய போர்ஷே கேயன்னே 2013 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்கிற உண்மை அவருக்கு தெரிய வந்திருக்கின்றது. இதைத்தொடர்ந்து, அக்காரை விற்பனைச் செய்த ஷோரூம் நிர்வாகத்திடம் முறையிட்டதாகக் கூறப்படுகின்றது.
ஆனால், அவர்கள் தரப்பில் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையிலேயே மாவட்ட தேசிய நுகர்வோர் தகராறு நிவர்த்தி ஆணையத்தின் உதவியை அவர் நாடி இருக்கின்றார். இந்த நிலையிலேயே அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த ஆணையம், வாடிக்கையாளர் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்து, அவருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கி இருக்கின்றது.
போர்ஷே விற்பனையாளருக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. ரூ. 18 லட்சம் அபராதத்தை நுகர்வோருக்கு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உண்மையை மறைக்க போர்ஷே கார் விற்பனையாளர் ஷோரூம் பல்வேறு போலியான ஆவணங்களை தயாரித்திருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், இந்த விஷயத்தில் உண்மை தன்மை கண்டறிவது பெரும் சிக்கலாக மாறி இருக்கின்றது.
இருப்பினும், தீவிர ஆய்விற்கு பின்னர் சில போலி ஆவணங்கள் கண்டறியப்பட்டு அதன் அடிப்படையிலேயே தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது. ஒரு சில கார் விற்பனையாளர்கள் புதிய கார்களை விற்பனைச் செய்யும்போது அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக இது போன்ற மோசடியில் ஈடுபடுவதுண்டு.
ஆனால், இதுவரை சின்ன சின்ன நிறுவனங்களே இதுமாதிரியான மோசடியில் கடந்த காலங்களில் ஈடுபட்டு இருக்கின்றன. போர்ஷே மாதிரியான பெரும் நிறுவனங்களும் இத்தகைய செயலில் ஈடுபட ஆரம்பித்திருப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. போர்ஷே கார் விற்பனையாளர் மட்டுமே இதுபோன்று பொய்கூறி காரை விற்பனைச் செய்யும் முதல் சொகுசு கார் உற்பத்தியாளர் அல்ல.
கடந்த காலங்களில் ஆடி கார் விற்பனையாளர்கள் சிலரும் இதுபோன்று வாடிக்கையாளர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் செயலில் ஈடுபட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆண்டு மாறும்போது புதிய ஆண்டில் தயாரிக்கப்பட்ட வாகனங்களின் விலை சற்று அதிகமாக இருக்கும். எனவேதான், ஓர் புதிய ஆண்டு பிறந்த பின்னர் முந்தைய ஆண்டில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் சலுகையில் விற்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹரியானா சம்பவத்தில் அதிக லாபத்தை ஈட்ட வேண்டியே பொய்யான ஆவணங்களை திரட்டி பழைய மாடலை புதியது என கூறி கார் விற்பனையாளர்கள் விற்றிருக்கின்றனர். இதுபோன்று பல்வேறு சம்பவங்கள் தினம் தினம் நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், ஓர் வாகனத்தைச் செல்லும்போது அதிக கவனமாக இருத்தல் வேண்டும் என்பது எங்களின் அறிவுரையாகும்.


Click it and Unblock the Notifications








