வெளி உலகத்துக்கே தெரியாம ஒத்த ஆளா 230 அரிய கார்களை சேர்த்து வைத்த முதியவர்! எல்லாமே இப்ப ஏலத்துக்கு வந்தாச்சு!
"நம்ம ஊரு அம்பானி, அதானி எல்லாம் இவருக்கு முன்னாடி ஒன்னுமே இல்லை" இவ்வாறு கூறும் அளவிற்கு ஓர் மிகப் பெரிய வாகன காதலர் (வெறியர்) இந்த உலகில் இருக்கின்றார். பல ஆண்டு காலமாக அவர் வெளி உலகிற்கு தெரியாமலேயே நூற்றுக் கணக்கில் கார்களைச் சேகரித்து வந்திருக்கின்றார். இந்த மர்மமான கார் காதலர் பற்றிய சுவாரஷ்ய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். விரிவான பதிவிற்குள் போகலாம், வாங்க.
நெதர்லாந்தைச் சேர்ந்தவர் பால்மன். இந்த நபர்தான் வெளி உலகிற்கே தெரியாமல் 200க்கும் அதிகமான கார்களை பாதுகாத்து வந்தவர். அனைத்தும் விண்டேஜ் ரக கார்கள் ஆகும். கார்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர், தன்னுடைய சிறு வயது முதலே கார்களை சேகரிக்கத் தொடங்கிவிட்டார்.

மேலும், தான் சேகரித்த அனைத்து கார்களைம் குடவுன்களில் வைத்து மறைத்து வைத்திருக்கின்றார். குறிப்பாக, யாருக்கும் தெரியாமல் அவை அனைத்தையும் அவர் மறைத்து வைத்திருக்கின்றார். இதற்காக அவர் மிகப் பெரிய குடவுனை பயன்படுத்தி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. பயன்படுத்தப்படாத தேவாலயம் மற்றும் காலியான குடவுன்களிலேயே தன்னுடைய கார்களை அவர் பாதுகாத்து வந்திருக்கின்றார்.
வெளி உலகிற்கு தெரிந்தால் கார்களைத் திருடிச் சென்றுவிடுவார்கள் என்கிற எண்ணத்திலேயே அவற்றை மறைத்து மறைத்து அவர் பத்திரப்படுத்தி வந்திருக்கின்றார். மேலும், தான் இத்தனை கார்களை வைத்திருக்கின்றேன் என்பது யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அவரே அந்த கார்கள் அனைத்தையும் பராமரித்து வந்திருக்கின்றார்.

பராமரிப்பு என்றால் புத்தும் புதுசுபோல வைத்திருப்பதற்கான பராமரிப்பு அல்ல. அவ்வப்போது ஸ்டார்ட் செய்து இயக்கி மட்டுமே பார்த்திருக்கின்றார். வாகனத்தின் இயக்கத்தில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இதை அவர் தொடர்ச்சியாக செய்து வந்திருக்கின்றார். மற்றபடி பெரியளவில் அந்த கார்கள் பராமரிக்கப்படவில்லை.
இதன் காரணமாக அனைத்து கார்களும் தூசி படிந்த நிலையிலேயே தென்படுகின்றன. அதேவேளையில் அனைத்தும் இயங்கும் நிலையில் இருக்கின்றன. என்னதான் இந்த கார்கள் அனைத்தும் தூசி படிந்து அழுக்கான நிலையில் தென்பட்டாலும், ஒவ்வொறு காரும் அரிய வகை பொக்கிஷம் ஆகும். ஆமாங்க, பால்மென் வைத்திருக்கும் பழைய கார்களில் பெரும்பாலானவை மிக மிக அரிய வகை விண்டேஜ் ரக கார்களாக உள்ளன.

ஒன்றின் மதிப்பே ஆயிரக் கணக்கான யூரோக்களுக்கு சமம் என கூறப்படுகின்றது. அத்தனை கார்களையும் தற்போது பால்மன் ஏலத்தின் வாயிலாக விற்பனைச் செய்ய முன் வந்திருக்கின்றார். வயது மூப்பின் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு பால்மென் ஆளாகி இருப்பதாகக் கூறப்படுகின்றது. மேலும், அவருக்கு வாரிசும் இல்லை.
எனவே தன்னுடைய அனைத்து கார்களையும் விற்பனைச் செய்ய அவர் முன் வந்திருக்கின்றார். இதற்காக பிரபல கார் ஏலம் விடும் நிறுவனத்தின் உதவியை அவர் நாடி இருக்கின்றார். ஆல்ஃபா ரோமியோ (Alfa Romeo), லேன்சியா (Lancia), மஸராட்டி (Maserati), ஃபெராரி (Ferrari), ஃபேஸல் வேகா (Facel Vega), அஸ்டன் மார்டின் (Aston Martin) மற்றும் ஜாகுவார் (Jaguar) என எக்கசக்க பிராண்டுகளின் அரிய வகை கார்கள் பால்மென் கை வசம் உள்ளன.

இந்த அனைத்து கார்களின் மதிப்பு பல லட்சம் யூரோக்கள் இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக அவரிடத்தில் ஒற்றை லேன்சியா ஆரெலியா வி 24 ஸ்பைடர் அமெரிக்கா கார் மதிப்பு மட்டும் 2.5 மில்லியன் யூரோக்கள் இருக்கும் என கூறப்படுகின்றது.
உலகளவில் விற்பனைச் செய்ய வெறும் 240 யூனிட்டுகள் மட்டுமே இந்த கார் மாடல் தயாரிக்கப்பட்டன. இவற்றில் 57 யூனிட்டுகள் மட்டும் வலது கை ஸ்டியரிங் வசதிக் கொண்டது. இதில் ஒன்றே தற்போது பால்மென் இடத்தில் இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல அரிய வகை கார்கள் விலை மதிப்பிட முடியாத விண்டேஜ் கார்கள் பால்மென் இடத்தில் இருக்கின்றன.

இத்தனை கார்களையும் ஜூன் 7க்குள் ஏலத்தில் விட ஏல நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணிகளில் நிறுவனம் ஏற்கனவே தீவிரமாகத் களமிறங்கிவிட்டது. அதாவது பால்மென்னுக்கு சொந்தமான அரிய வகை கார்களுக்கான ஏலம் ஏற்கனவே இணையம் வாயிலாகத் தொடங்கிவிட்டது. விரைவில் அனைத்தும் விற்று தீரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அரிய மற்றும் விண்டேஜ் ரக வாகனங்களுக்கு உலகளவில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஒரே ஒரு நபரிடத்தில் 230 விண்டேஜ் வாகனங்கள் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது. இந்த தகவல் வாகன ஆர்வலர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









