மீண்டும் மீண்டுமா.. பிஎஸ்7க்கு மாறபோகும் இந்திய வாகன உலகம்! பிஎஸ்6 கட்டம் இரண்டே இப்போதான் அமலுக்கு வந்துச்சு!
இந்தியாவில் காற்று மாசு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. அதேசமயத்தில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிக வேகத்தில் வளர்ச்சி அடைந்துக் கொண்டிருக்கின்றது. இதனால் தலை வலி கூடுதலாகும் நிலையே நாட்டில் தென்படுகின்றது. இதன் விளைவாக அரசு தரப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் இந்த விஷயத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, வாகனங்கள் வெளியேற்றும் மாசின் அளவைக் குறைக்கும் விதமான பணியில் அது அதிக தீவிரம் காட்டி வருகின்றது. இந்த நிலையிலேயே மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, அனைத்து வாகன உற்பத்தியாளர்களையும் அடுத்த தலைமுறை பிஎஸ்-7 தர வாகனங்களை உற்பத்தி செய்யுமாறு கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் வாகன தரநிலைகள் (CMVR TSC) தொடர்பான உயர்நிலை தொழில்நுட்ப குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போதே, இந்தியாவில் உள்ள வாகன உற்பத்தியாளர்கள் பிஎஸ்7 விதிமுறைக்கான வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சியில் களமிறங்குமாறு அவர் கூறினார்.
இப்போதே இந்த பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கின்றார். குறிப்பாக, வாகன உற்பத்தியாளர்கள் தாங்களாகவே இந்த முயற்சியை நோக்கி நகர வேண்டும் என்றும், இதற்காக அரசின் அறிவிப்பிற்காக காத்திருக்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். இத்துடன், இந்திய வாகன துறையும் ஐரோப்பிய விதிகளுக்கு இணங்க இருத்தல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிஎஸ்6-ஐத் தொடர்ந்து மிக சமீபத்திலேயே பிஎஸ் 6 இரண்டாம் கட்டம் விதிகள் நாட்டில் அமல்படுத்தப்பட்டன. இதற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பே வாகன உற்பத்தி நிறுவனங்கள் மாற தொடங்கின. இந்த நிலையில், அடுத்தகட்ட மாசு உமிழ்வு விதிக்கு மாறுவதை நோக்கி வாகன உற்பத்தியாளர்களை இப்போதே உந்தும் விதமாக அமைச்சர் கூறி இருக்கின்றார்.
இந்த விஷயத்தில் அரசு கட்டாயப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்க வேண்டாம் என கூறியிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு வாகன உற்பத்தி நிறுவனங்களாகவே முன் வந்து புதிய பிஎஸ்7 உற்பத்தியை இப்போதே தொடங்குமாறும் அவர் அறிவுறுத்தியிருக்கின்றார். அமைச்சரின் இந்த அறிவுறுத்தல் வாகன உற்பத்தி நிறுவனங்களை சற்றே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

சமீபத்தில் ஐரோப்பியன் ஆணையம் யூரோ-7 மாசு உமிழ்வு விதிமுறைகளை 2025 ஜூலைக்குள் அமல்படுத்தத் தொடங்கும் என அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி சில நாட்களே ஆகின்றன. இந்த நிலையிலேயே மத்திய அமைச்சரிடம் இருந்தும் பிஎஸ் 7 நோக்கி நகர வேண்டும் என்பதற்கான வார்த்தைகள் வெளி வந்திருக்கின்றன.
வெகு விரைவில் இந்த வார்த்தைகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அரசு இந்த புதிய விதியை நாட்டில் அமல்படுத்தும் எனில் 2027க்குள் அதற்கான அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். புதிய லாரிகள் மற்றும் பேருந்துகள் என அனைத்து வாகனங்களிலும் இந்த புதிய விதி கட்டாயப்படுத்தப்படும்.
இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆகையால், இந்த மாறுதல் அவசியமானதாகப் பார்க்கப்படுகின்றது. இருப்பினும், வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அமைச்சரின் இந்த அறிவிப்பு பேரிடியை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இப்போதே பிஎஸ்6 கட்டம் இரண்டு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட சோர்வில் இருந்தே நிறுவனங்கள் வெளிவராத நிலையில் புதிய பீதி தற்போது கிளம்பி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு நாட்டில் வெயில் பொளந்துக் கட்டுவதாக அனைவரும் புலம்பிக் கொண்டிருக்கின்றோம். அதிகளவில் மரங்களை வெட்டியது, அதிகப்படியான ஏசி பன்பாடு மற்றும் வாகன பயன்பாட்டின் காரணத்தினாலேயே இந்த நிலையை தற்போது ஒட்டுமொத்த உலகமும் சந்தித்து வருகின்றது.
இதற்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் என்கிற நோக்கிலேயே புதிய மாசு உமிழ்வு விதி மற்றும் மின்சார வாகன பயன்பாடு ஆகியவற்றை நோக்கி இந்த உலகம் நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. அதற்கேற்ப நமது இந்தியாவும் ஓடத் தொடங்கி இருக்கின்றது. வாகனங்களால் ஏற்படும் மாசு வெளிப்பாட்டைக் குறைப்பதில் அதிக அக்கறையுடன் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications









