புதிய வரலாறு படைக்கிறார் மு.க.ஸ்டாலின்! எப்படி இதை சாதிச்சார்னு தெரியாம மண்டை காயும் மற்ற மாநிலங்கள்!
ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி (Ola Electric Mobility) மற்றும் தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) ஆகியவற்றுக்கு இடையே தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. எலெக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தி மற்றும் 20 ஜிகாவாட் (GW - Gigawatt) பேட்டரி உற்பத்தி திறனுடைய ஆலையை தோற்றுவிப்பது ஆகிய காரணங்களுக்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக 7,614 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது. இதன் மூலம் 3,111 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அதிகாரப்பூர்வமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 2023 எலெக்ட்ரிக் வாகன கொள்கை (2023 Electric Vehicle Policy) கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வெளியிடப்பட்டது. இதன்மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

தீ... இது தளபதி!
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகளின் முன்னிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் (M.K.Stalin) இந்த புதிய கொள்கையை வெளியிட்டார். இந்த சூழலில்தான் ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பின்வருமாறு: எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துறையில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
அத்துடன் 1.50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மேலும் வலுவான எலெக்ட்ரிக் வாகன சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு விரும்புகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் சாலை வரியில் இருந்து 100 சதவீதம் விலக்கு உள்ளிட்ட சலுகைகளின் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை தமிழ்நாடு அரசு ஊக்குவிப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடிகளை கொட்றாங்க!
தமிழ்நாட்டில் தற்போது ஆட்டோமொபைல் நிறுவனங்களின் முதலீடு குவிந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். சென்னையில் உள்ள ஆலையில் 5,300 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளதாக கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு ரெனால்ட்-நிஸான் (Renault-Nissan) நிறுவனம் அறிவித்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த புதிய முதலீட்டின் மூலம் 2 எலெக்ட்ரிக் கார்கள் உள்பட 6 புதிய கார்களை உற்பத்தி செய்யவுள்ளதாக ரெனால்ட்-நிஸான் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரெனால்ட்-நிஸான் நிறுவனத்தின் இந்த புதிய முதலீட்டின் மூலமும் தமிழ்நாட்டில் ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன. இது தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியுடன், பெருமையையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது.
ஆட்ட நாயகன் தமிழ்நாடு!
இந்தியாவிலேயே ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. அந்த பெருமையை தக்க வைத்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. குறிப்பாக எதிர்காலத்தை மனதில் வைத்து ஏராளமான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும் தமிழ்நாடு தொடர்ந்து வீரநடை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், அவற்றின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக அவற்றின் உற்பத்தியும் அதிகரிக்கப்படவுள்ளது. எனவேதான் முன்னணி நிறுவனங்கள் பலவும் பெரும் தொகையை முதலீடு செய்கின்றன. இந்தியாவின் பயணிகள் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors), ஓலா எலெக்ட்ரிக் உள்பட பல்வேறு நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








