எப்படி இருந்த பாகிஸ்தான் இப்போ எப்படி ஆகியிருக்கு பாத்தீங்களா? இவ்ளோ மோசமான நிலைமைக்கு போகும்னு எதிர்பாக்கல!
பாகிஸ்தான் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து கொண்டிருக்கின்றது. கடந்த சில மாதங்களாகவே அந்நாட்டின் பொருளாதராம் கவலைக்கிடமானதாக காட்சியளிக்கின்றது. இந்தியா போன்ற உலக நாடுகளின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகப் பார்க்கப்படும் வாகன உலகம் (AutoMobiles)கூட அந்நாட்டில் தற்போது அழிவின் விளிம்பிற்கே சென்றிருக்கின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் அமைந்திருக்கின்றது. இந்த மாதத்தில் புதிய வாகனங்களின் விற்பனை மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டு இருக்கின்றன. 2 ஆயிரத்து 844 யூனிட்டுகள் புதிய வாகனங்கள் மட்டுமே பாகிஸ்தானில் விற்பனையாகி இருக்கின்றன.

இதே பாகிஸ்தானில் சென்ற 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 18,626 யூனிட்டுகள் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே நடப்பாண்டில் நிலவும் கடும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக மிகப் பெரிய விற்பனைச் சரிவை பாகிஸ்தான் வாகன உலகம் சந்தித்து இருக்கின்றது.
இந்தியாவில் மிதிவண்டிகள் விற்பனையாவதைவிட மோசமான நிலையில் பாகிஸ்தானில் புதிய மோட்டார் வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. 2022 ஏப்ரலைக் காட்டிலும் 84 சதவீதம் விற்பனை வீழ்ச்சியை பாகிஸ்தான் 2023 ஏப்ரலில் சந்தித்து இருக்கின்றது. உலகின் மூன்றாவது மிகப் பெரிய வாகன சந்தையாக இந்தியா விளங்குகின்றது.

2023 ஏப்ரல் மாதத்தில் மட்டுமே நாட்டில் 3 லட்சத்து 31 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய வாகனங்கள் நம் நாட்டில் விற்பனையாகி இருக்கின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் புதிய வாகனங்கள் விற்பனையாகின்ற காரணத்தினாலேயே இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இந்திய ஆட்டோமொபைல் துறை பார்க்கப்படுகின்றது.
தற்போதைய வீழ்ச்சி நிலையே தொடர்ச்சியாக பாகிஸ்தான் நாட்டில் நீடிக்கும் எனில், அங்குள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் மூட்டை முடிச்சை எல்லாம் கட்டிக் கொண்டு அந்நாட்டை விட்டே வெளியேறும் சூழலே உருவாகும் என அஞ்சப்படுகின்றது. இத்தகைய அபாய நிலையிலேயே பாகிஸ்தான் ஆட்டோமொபைல்துறை இருக்கின்றது.
பாகிஸ்தான் வாகன உலகின் தொடர் விற்பனை வீழ்ச்சி அந்நாட்டின் பொருளாதாரத்தின் நிலைமை மேலும் கவலைக்கிடமாகப் போவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து பலதரப்பட்ட பொருட்களின் விலை மலையளவில் உயர்ந்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, எரிபொருளின் விலை தங்கத்திற்கு இணையாக உயர்ந்து உள்ளது.
மேலும், வாகனங்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பண வீக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் தாங்களாகவே தங்களின் ஆடம்பர செலவுகளைக் குறைக்கத் தொடங்கி இருக்கின்றனர். இதன் விளைவு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு கடும் விற்பனை வீழ்ச்சியை பாகிஸ்தான் ஆட்டோமொபைல்ஸ் துறை சந்தித்து இருக்கின்றது.
குறிப்பாக, கடந்த காலங்களில் மிக அமோக அளவில் விற்பனையாகிக் கொண்டிருந்த 1000 சிசி வாகனங்களின் விற்பனைகூட 2023 ஏப்ரலில் படுத்தே விட்டது. 276 யூனிட்டுகள் மட்டுமே 1000 சிசி பிரிவில் உள்ள வாகனங்கள் விற்பனையாக இருப்பதாக பாகிஸ்தான் வாகன உற்பத்தியாளர்கள் சங்கள் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாகிஸ்தானின் குறிப்பிட்ட சில நகரங்களில் பூஜ்ஜியம் யூனிட் விற்பனை என்கிற அளவுக்கு மோசமான நிலையிலேயே அந்நாட்டு வாகனத் துறை உள்ளது. இந்த நிலை எப்போது மாறும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. குறிப்பாக, அந்நாட்டு வாகன உற்பத்தியாளர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இது இருக்கிறது.


Click it and Unblock the Notifications








