இப்படியும் ஏமாத்துவாங்களா! கவனமா இருங்க.. புதுச கேட்டா பழச தலையில் கட்டிய கியா கார் டீலர்! இறுதியா என்ன ஆச்சு?
புதிய வெர்ஷன் காரை புக் செய்த வாடிக்கையாளருக்கு கியா கார் விற்பனையகம் ஒன்று பழைய வெர்ஷனை டெலிவரி செய்து ஏமாற்று வேலையில் ஈடுபட்டு இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
வாடிக்கையாளர்களை ஏமாத்துறதுக்கு என தனி கோர்ஸ் முடிச்சிருப்பாங்க போல என கூறும் அளவிற்கு மிகவும் புதுமையான மற்றும் நேர்த்தியான வழிகளில் இந்த கார் விற்பனையாளர்கள் கஸ்டமர்களை ஏற்றிக் கொண்டிருக்கின்றனர். எந்தெந்த வழிகளில் எல்லாம் ஏமாற்ற முடியுமோ, அந்த வழிகள் அனைத்தையும் கற்று மிக சிறப்பாக ஏமாற்று வேலைகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

பொதுவாக, ஓர் கார் விற்பனையாளர் அதிக லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக அக்ஸசெரீஸ்கள், கூடுதல் மதிப்புக் கூட்ட சேவைகள் சிலவற்றை வாடிக்கையாளர்களின் தலையில் கட்டுவதுண்டு. ஆனால், இங்கோ ஓர் கார் விற்பனையாளர்கள் பழைய வெர்ஷன் காரை புதிது என கூறி வாடிக்கையாளரின் தலையில் கட்டி இருக்கின்றார்.
இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் ஹூப்ளியிலேயே அரங்கேறி இருக்கின்றது. இதேபகுதியில் 'நாகசாந்தி கியா' எனும் பெயரில் கியா கார் விற்பனையகம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த டீலர் ஷோரூமே தற்போது பழைய வெர்ஷன் காரை வாடிக்கையாளருக்கு விற்று சர்ச்சையில் சிக்கி இருக்கின்றது.

நாகராஜ் பட்டில் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு, மே 28 ஆம் தேதி அன்று இந்த ஷோரூமில் ஓர் கியா காரை புதிய வெர்ஷன் என நினைத்து வாங்கி இருக்கின்றார். இதனை அவர் வாங்கியபோதுகூட அது பழையது என அவருக்கு தெரியவில்லை.
சில நாட்கள் பயன்பாட்டிற்கு பின்னரே அவருக்கு அது தான் தேர்வு செய்து புதிய வெர்ஷன் அல்ல என்பது தெரிய வந்திருக்கின்றது. நாகராஜ் பட்டில், கியா செல்டோஸ் எச்டிகே பிளஸ் ஜி (Kia Seltoz HTK+G Smart Stream) எனும் வேரியண்டை புக் செய்திருக்கின்றார். இது பேஸ்லிஃப்ட் பிளஸ் மஃப்ளர் பம்பர் கொண்ட 1.5 லிட்டர் தேர்வாகும்.

2020 ஜூன் 2 அன்றே இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அவர் புக் செய்ததோ மே 28 இல். விற்பனைக்கு வரும் முன்னரே அவர் புக் செய்துவிட்டார். மேலும், அது அறிமுகமாகும் வரை காத்திருந்திருக்கின்றார். இந்த நிலையிலேயே, நாகசாந்தி கியா கார் விற்பனையகம் நகராஜிற்கு செல்டோஸ் எச்டிகே பிளஸ் 1.5 லிட்டர் தேர்வை டெலிவரி கொடுத்திருக்கின்றது.
இது அப்டேட் செய்யப்படாத பழைய வெர்ஷன் ஆகும். இந்த தகவல் ஒரு மாதத்திற்கு பின்னரே அவருக்கு தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், இதுகுறித்து டீலர் ஷோரூமிடம் முறையிட்டிருக்கின்றார். பலமுறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்ட பின்னரும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய நாகராஜ், இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிடுவதே சரி என நினைத்தார்.

இதன் அடிப்படையில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் பழைய வெர்ஷன் கார் டெலிவரி கொடுத்தது தொடர்பாக ஓர் மனுவை அவர் சமர்பித்தார். இந்த மனுவின் மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இதன் மீதான இறுதி தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஆவணங்கள் அனைத்தையும் நீதிமன்றம் ஆராய்ந்ததில் மனுதாரருக்கு கியா கார் விற்பனையகம், புக் செய்த செல்டோஸ் தேர்வை டெலிவரிக் கொடுக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கின்றது. மேலும், வாடிக்கையாளருக்கு பழைய வெர்ஷன் காரை டெலிவரி கொடுத்தது மட்டுமின்றி, அவரை நீண்ட நாட்கள் அலைகழித்து மன வேதனைக்கும் ஆளாக்கியதையும் உணர்ந்தது.
இவை அனைத்தையும் காரணம் காட்டி கியா கார் விற்பனையகம் மீது கடுமையான நடவடிக்கையை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் எடுத்து உள்ளது. வாடிக்கையாளர் காருக்காக செலுத்திய ரூ. 14.85 லட்சத்தை 8 சதவீத வட்டி உடன் திருப்பிக் கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
கார் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் 2 ஜூலை 2020 இல் இருந்து கணக்கு செய்யப்பட்டு இந்த தொகையை வழங்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. இதுதவிர, வாடிக்கையாளரை அலைகழித்த குற்றத்திற்காக ரூ. 1 லட்சமும், இதர செலவுகளுக்கான கட்டணமாக ரூ. 10 ஆயிரமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய வெர்ஷனை ஏமாற்றி விற்பனைச் செய்ததற்கு கார் விற்பனையாளருக்கு கிடைத்த மிக சரியான பாடமாக இது பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









