கருப்பு கலருல ஜொலிக்குது.. கொஞ்சம் நாளைக்கு மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.. ரெனால்ட்டின் தந்திரம்!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ரெனால்ட் (Renault), இந்தியாவில் விற்பனைச் செய்துக் கொண்டிருக்கும் தன்னுடைய அனைத்து கார் மாடல்களையும் முழு கருப்பு நிறத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இவை சிறப்பு பதிப்புகளாக விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றன. ஆகையால், குறைவான நாட்களுக்கு மட்டுமே அந்த கார்கள் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றன.
ரெனால்ட் நிறுவனம் இப்போதைய நிலவரப்படி க்விட், கைகர் மற்றும் ட்ரைபர் ஆகிய மூன்று கார் மாடல்களை மட்டுமே இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றையே சிறப்பு பதிப்புகளாக அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்தியாவில் அடுத்தடுத்து விழாக் காலம் வர இருப்பதை முன்னிட்டே நிறுவனம் சிறப்பு பதிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

அர்பன் நைட் எடிசன் (Urban Night edition) எனும் பெயரிலேயே அவை விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. எத்தனை நாட்களுக்கு இவை விற்பனையில் இருக்கும்?, எத்தனை யூனிட்டுகள் வரை விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றன என்பது பற்றிய விபரங்களை ரெனால்ட் நிறுவனம் துள்ளியமாக வெளியிடவில்லை.
இருப்பினும், இந்த வருடம் முடிவு வரை ரெனால்ட் நிறுவனத்தின் அர்பன் நைட் எடிசன் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழக்கமான பதிப்பிற்கும், இந்த சிறப்பு பதிப்பிற்கும் இடையில் அப்படி என்ன மாதிரியான வித்தியாசம் வழங்கப்பட்டு இருக்கின்றது என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பி இருக்கும்.

அலங்காரம் விஷயத்தை தவிர வேறு எந்த சிறப்பு விஷயத்தையும் புதிய அர்பன் நைட் எடிசனில் இந்த நிறுவனம் சேர்க்கவில்லை. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் சிறப்பு பதிப்பில் அழகை அதிமாக்கும் வேலைகளை மட்டுமே ரெனால்ட் செய்திருக்கின்றது. அந்தவகையில், ஸ்டார் டஸ்ட் சில்வர் பம்பர் முன் மற்றும் பின் பக்கங்களில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, ஹெட்லேம்ப் பேசல் மற்றும் பம்பரில் கார்னிஷ் செய்யப்பட்டு இருக்கின்றது. மேலும், பியானோ கருப்பு நிற ஓஆர்பிஎம்கள், பின் பக்க ட்ரங்கில் குரோம் லைன்கள், ரூஃபில் சில்வர் இன்செர்ட்டுகள், படில் லேம்ப் மற்றும் இலுமினேட் ஆக கூடிய ஸ்கஃப் பிளேட் ஆகியவையே இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், சில சிறப்பம்சங்களும் புதிதாக இந்த கார்களில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. 9.66 அங்குல ஸ்மார்ட் வியூ மானிட்டர் மற்றும் ஆம்பியன்ட் லைட்டுகள் ஆகியவை அர்பன் நைட் எடிசன் பதிப்புகளில் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கின்றது. ஸ்மார்ட் வியூ மானிட்டரே பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடியாக காருக்குள் செயல்படும்.
இதன் கோணத்தை தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ள முடியும். இத்துடன், இரட்டை கேமிரா செட்-அப் இந்த கார்களில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், ஒயர்லெஸ் சார்ஜிங் வசதியும் சிறப்பு பதிப்பில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்ற சிறப்பு அலங்கார மற்றும் தொழில்நுட்ப வசதிகளில் மட்டுமே வழக்கமான பதிப்புகளிடம் இருந்து சிறப்பு பதிப்பு மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது.

இந்த மாற்றங்கள் காரணமாக அவற்றின் விலையும் சற்று காஸ்ட்லியாக இருக்கின்றன. ஆனால், அதை மிக அதிகம் என்று கூறிவிட முடியாது. க்விட் ரூ.5.67 லட்சம் என்கிற விலையிலும், ட்ரபைர் ரூ.8.22 லட்சம் என்கிற விலையிலும், கைகர் ரூ.8.80 லட்சம் என்கிற விலையிலுமிருந்து விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்தும் சிறப்பு பதிப்புகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். வழக்கமான பதிப்புகளைக் காட்டிலும் ரூ.6,999 இல் இருந்து ரூ.14,999 வரையில் அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கருப்பு நிறத்திற்கு பலர் அடிமையாக இருக்கின்றனர். எனவேதான் வாகன உற்பத்தி நிறுவனங்கள் சிறப்பு பதிப்பு என வரும்போது அவற்றை பெரும்பாலும் கருப்பு நிறத்திலேயே விற்பனைக்குக் கொண்டு வருகின்றன. இந்த நிறத்தில் வந்திருக்கும் ரெனால்ட் அர்பன் நைட் எடிசன்களுக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்றே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.


Click it and Unblock the Notifications









