இப்படி அப்பளம்போல் நொறுங்கி கிடப்பது உலகின் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காருனா நம்ப முடிகின்றதா.. என்ன நடந்தது?
இந்தியாவில் இதுவரையில் நடைபெற்ற மிக மோசமான சொகுசு கார் விபத்து சம்பவங்கள் அனைத்தையும் ஒன்னுமில்லாமல் ஆக்குகின்ற வகையில் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று மிக மிக மோசமான விபத்தைச் சந்தித்து இருக்கின்றது. இந்த விபத்தில் விலை உயர்ந்த அந்த சொகுசு கார் உரு தெரியாமல் முற்றிலுமாக சிதைந்து போயுள்ளது. இந்த மோசமான விபத்து நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் காணலாம், வாங்க.
பெரும் செல்வந்தர்கள் சிலருக்கே எட்டாக் கனியாக இருக்கக் கூடிய தயாரிப்பாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்கள் இருக்கின்றன. இதற்கு அந்நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் மிக மிக அதிக விலையைக் கொண்டிருப்பதே முக்கியமான காரணமாக இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் சொகுசு கார்கள் ஆடம்பர வசதிக்கு மட்டுமல்ல அதீத வேகத்தில் செல்வதற்கும் பெயர்போனவையாக இருக்கின்றன.

இதனால்தான் இந்த காருக்கு முகேஷ் அம்பானி போன்ற செல்வம் கொழித்த பணக்காரர்கள் மத்தியில் மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. அதிக வேகத்தில் செல்ல முடியும், அதேவேளையில், சொகுசு ரைடு அனுபவத்தையும் இதில் பெற்றுக் கொள்ள முடியும் என்பதே இதற்கான முக்கியமான காரணமாகும்.
இந்த மாதிரியான சூழலிலேயே அதீத வேகத்தில் பயணித்த காரணத்தினால் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று விபத்தில் சிக்கி இருப்பதும், இந்த விபத்தில் முற்றிலுமாக அக்கார் உருக்குலைந்து போயிருப்பதாகவும் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் இந்தியாவிலேயே அரங்கேறி இருக்கின்றது கூடுதல் ஷாக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே-யின் குர்கான்-தௌசா பிரிவிலேயே இந்த விபத்து அரங்கேறி இருக்கின்றது. முன்னதாக டீசலை ஏற்றி வந்த லாரி மீதே தவறு இருந்ததாகக் கருதப்பட்டது. இதனாலேயே ரோல்ஸ் ராய்ஸ் கார் விபத்தில் சிக்கியது என்றும் கூறப்பட்டது. ஆனால், இப்போது நடந்தது என்ன என்பதை தெளிவுப்படுத்தும் விதமாக விபத்துகுறித்த அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.
லாரியை ஓட்டி சென்றவர்கள் மீது எந்த தவறும் இல்லை, அவர்கள் அனைத்து போக்குவரத்து விதிகளையும் கடைபிடித்த வண்ணம் பயணித்தனர் என்பதை அந்த வீடியோ தெளிவாகக் காண்பிக்கின்றது. மேலும், ரோல்ஸ் ராய்ஸ் மீதே அனைத்து தவறுகள் இருப்பதையும் அந்த வீடியோ காட்டுகின்றது. மிக அதீத வேகத்தில் அந்த கார் சீறி பாய்ந்து வந்திருக்கின்றது.

இதுவே மோசமான விபத்து ஏற்படுவற்கு காரணமாக அமைந்திருக்கின்றது. அது விபத்தைச் சந்திக்கும் முன்னர் மணிக்கு 200 கிமீட்டருக்கும் வேகத்தில் பயணித்திருப்பது சிசிடிவி வீடியோ வாயிலாகக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இத்தகைய அதீத வேகத்தின் காரணத்தினாலேயே அந்த கார் உரு தெரியாமல் தற்போது அழிந்துபோயிருக்கின்றது.
மேலும், அப்பாவிகளான லாரி ஓட்டுநர் மற்றும் அதன் க்ளீனர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கின்றனர். நல்ல வேலையாக லாரியில் இருந்து டீசல் வெளியேறவில்லை என கூறப்படுகின்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. இருப்பினும், இந்த விபத்தின்போது ரோல்ஸ் ராய்ஸ் காரில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கின்றது.
இது உடனே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. ஆனால், அதற்குள்ளாக காரின் குறிப்பிட்ட பாகங்கள் தீயிற்கு இரையாகி இருக்கின்றன. மேலும், நல்ல வேளையாக விபத்து நடைபெற்ற உடனேயே சம்பவ இடத்திற்கு வந்த ரோல்ஸ் ராய்ஸ் காரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், அந்த காரில் இருந்த அனைவரையும் மீட்டெடுத்தனர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் லாரியின் க்ளீனர் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கின்றனர். இந்த நிகழ்வு லாரி ஓட்டுநர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக மூன்று பேர் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரில் வந்தததாகக் கூறப்படுகின்றது. இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் பேரணியாக 20 கார்களுடன் இணைந்து வந்திருக்கின்றது.
இந்த நிலையிலேயே திடீரென பேரணியில் இருந்து விலகி அதீத வேகத்தில் சீறி பாய்ந்திருக்கின்றது. பேரணியை விட்டு விலகிய அடுத்த 12 நிமிடங்களில் 40 கிமீ தூரத்தை அந்த கார் கடந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே மணிக்கு சுமார் 200 கிமீ வேகத்தில் வந்து டீசல் ஏற்றிச் சென்ற லாரியின் பின் பகுதியில் மோதி இருக்கின்றது.
பின் பக்கத்தில் மோதிய நிலையிலேயே லாரி டிரைவர் மற்றும் அதன் க்ளீனரை இந்த விபத்து காவு வாங்கி இருக்கின்றது. அதேவேளையில், ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு காயங்கள் மட்டுமே ஏற்பட்டு இருக்கின்றது. இந்த அளவிற்கு அதீத பாதுகாப்பை வழங்கக் கூடிய வாகனமாகவே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன.
தற்போது விபத்தில் சிக்கி இருப்பது என்ன மாடல் என்பதைக்கூட கண்டறிய முடியாத அளவிற்கு அது மிக மோசமாக உருக்குலைந்து போயிருக்கின்றது. குறிப்பாக, முகப்ப பகுதி முற்றிலுமாக சிதைந்து போயிருக்கின்றது. இதை வைத்து பார்க்கையில் இந்த காரில் பயணிக்கும்போது எமனே வந்தாலும், அவருக்கு டாடா காட்டி அனுப்பி வைத்துவிடலாம் என்பது தெளிவாக தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்த மாதிரியான விபத்தாக இருந்தாலும் தன்னுடைய பயணிகளுக்கு மிக தரமான பாதுகாப்பை ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வழங்கும் என்பதையே இந்த நிகழ்வு நமக்கு தெரியப்படுத்தி இருக்கின்றது. இதுபோன்ற பாதுகாப்பை மலிவு விலை காரான நெக்ஸான், பஞ்ச் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 உள்ளிட்ட கார்களும் வழங்கும். ஆனால், வேகமான பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதே எங்களின் கருத்தாகும்.


Click it and Unblock the Notifications
