இந்த அம்சங்கள்கூட இல்லைனா அது காரே இல்லைங்க... வெறும் தகர டப்பாக்களைதான் வாங்குறீங்கனு அர்த்தம்!
இந்த உலகில் விற்பனையில் இருக்கும் அனைத்து கார்களும் வெறும் தகர டப்பாக்களே. அதில், சேர்க்கப்படும் சில அம்சங்களே அந்த கார்களை முழுமையானதாக மாற்றுகின்றன. அதாவது, பயணிக்க உகந்ததாகவும், பாதுகாப்பான வாகனமாகவும் மாற்றுகின்றன. என்னதான் பன்முக பாதுகாப்பு அம்சங்கள் ஓர் காரில் சேர்க்கப்பட்டாலும், குறிப்பிட்ட சில அம்சங்கள் சேர்க்கப்பட்ட பின்னரே அது முழுமையான பாதுகாப்பான வாகனமாக மாறுகின்றது.
அத்தகைய டாப் 5 பாதுகாப்பு அம்சங்களின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்துகளின்போது பயணிகளுக்கு அதிகம் பாதுகாப்பை வழங்கும் வாகன பாதுகாப்பு அம்சங்களின் பட்டியலையும், அவற்றின் வேலைப்பாடு பற்றிய விபரத்தையுமே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

சீட்பெல்ட்: பல காலமாக வாகனங்களில் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டு வரும் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். எத்தனை பாதுகாப்பு கருவிகள் கார்களில் வழங்கப்பட்டாலும் இதற்கு இணையானதாக வேறு எந்த கருவியாலும் பாதுகாப்பை வழங்க முடியாது என்பதை நாம் இங்கு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
இதன் காரணத்தினால் தற்போது விற்பனைக்கு வரும் நவீன கால கார்களில், மும்முனை ரக சீட் பெல்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த அம்சம் கடுமையான விபத்தின்போது இருக்கையிலேயே பயணியை தக்க வைத்து கொள்ள உதவும். இதனால் மிகப் பெரிய காயங்களில் இருந்து பயணிகளால் தப்பித்துக் கொள்ள முடியும்.

எனவேதான் இந்த பாதுகாப்பு அம்சத்தை அனைவரும் கட்டாயம் அணிந்து பயணிக்க வேண்டும் என போக்குவரத்து விதிகள் நமக்கு கூறுகின்றன. டிரைவர் மற்றும் முன் பக்க பயணி மட்டுமின்றி அனைத்து பயணிகளும் சீட் பெல்டை அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதை அணியாதவர்கள்மீது காவல்துறையினர் அபராதம் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்: ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மிக முக்கியமான பாதுகாப்பு கருவிகளில் ஒன்றாக காட்சியளிக்கின்றது. இந்த பிரேக்கிங் சிஸ்டம் கொண்டிருக்கும் கார்கள் வழு வழுப்பான சாலைகளில்கூட மிக சிறந்த நிறுத்தம் அனுபவத்தை வழங்கும். மேலும், அதீத வேகத்தைகூட நொடி பொழுதில் கன்ட்ரோல் செய்ய இது உதவும். எனவே இந்த கருவி அனைத்து அதிக சிசி திறன் கொண்ட கார்களில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

ஏர் பேக்குகள்: கடந்த காலங்களில் ஏர் பேக்குகள் முன்னிருக்கையாளர்களை மையப்படுத்தி மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால், இப்போது பின்னிருக்கையாளர்களுக்கும் ஏர் பேக்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதிதாக கர்டைன் ரக ஏர் பேக்குகள் வழங்கப்படுகின்றன. பயணிகளுக்கு முழுமையாக பாதுகாப்பை வழங்கும் முயற்சியாக இவ்வாறு பன்முக ஏர்பேக்குகளை கார்களில் வழங்கப்படுகின்றன. இது எதிர்பாரா விபத்துகளின்போது மார்பு, தலை என பல முக்கிய உறுப்புகளுக்கு அதீத பாதுகாப்பை வழங்கும்.

எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்: அனைத்து கார்களிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான பாதுகாப்பு கருவியாக இஎஸ்சி இருக்கின்றது. இந்த பாதுகாப்பு கருவி கார்கள் வழுக்கிக் கொண்டு செல்வதில் இருந்து பாதுகாக்கும். எனவேதான் இதனை வாகன உலகம் மிக முக்கியமான பாதுகாப்பு கருவியாக பார்க்கப்படுகின்றது. டிராக்சனை கன்ட்ரோலையும் இழக்கும்போதும், ஒவ்வொரு முறையும் பிரேக்கை நாம் பிடிக்கும்போது இது இயங்கும்.

லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம்: வாகனம் சாலையைத் தாண்டி செல்லாமல் நேர் கோட்டில் பயணிக்க இந்த அம்சம் உதவுகின்றது. ஒருவேளை டிரைவர் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும்போதே தூங்கிவிட்டால், அந்த லேனுக்குள்ளேயே கார் தானாக இயங்க இந்த அம்சம் உதவியாக இருக்கின்றது. இந்த செயலுக்கு பின்னால் கழுகு பார்வை திறன் கொண்ட கேமிராவும், சென்சார்களும் முக்கிய பங்காற்றுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த இந்த அம்சங்கள் மட்டுமில்லைங்க, ரோல் ஓவர் மிடிகேஷன் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவையும் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன. இந்த அம்சங்கள் இல்லாத கார்கள் எவ்வளவு விலை கொடுத்து வாங்கப்பட்டாலும், அது தகர டப்பா மட்டுமே ஆகும். விபத்தில் எந்த பாதுகாப்பையும் அந்த கார்கள் வழங்காது.


Click it and Unblock the Notifications









