வெளியானது அடுத்த அதிரடி அறிவிப்பு... புத்தாண்டுல இருந்து ஒருத்தரும் புது வண்டி வாங்க முடியாதாட்ட இருக்கு!
இந்திய சந்தையில் புதிய கார்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது போதாத காலம். ஏனெனில் வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து பெரும்பாலான முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களும் விலைகளை அதிரடியாக உயர்த்தவுள்ளன. இந்த வரிசையில் தற்போது ஸ்கோடா (Skoda) நிறுவனமும் இணைந்துள்ளது.
ஆம், இந்தியாவில் ஸ்கோடா நிறுவன கார்களின் விலையும் 2 சதவீதம் வரை அதிரடியாக உயரவுள்ளது. குறிப்பிட்ட கார்கள் என்றில்லாமல், இது ஸ்கோடா நிறுவனத்தின் அனைத்து கார்களுக்கும் பொருந்தும். ஆனால் வேரியண்ட்களை பொறுத்து, விலை உயர்வு மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த விலை உயர்வு வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. தற்போதைய நிலையில் ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் மொத்தம் 3 கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia), ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) ஆகியவை ஆகும்.
இதில் ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகியவைதான் மிகவும் அதிகமாக விற்பனையாகும் கார்களாக இருக்கின்றன. இதில் ஸ்கோடா குஷாக் காரானது, மிட் சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். மறுபக்கம் ஸ்கோடா ஸ்லாவியா காரானது, செடான் ரகத்தை சேர்ந்தது ஆகும்.

இதில் ஸ்கோடா குஷாக் காரின் ஆரம்ப விலை (Price) தற்போதைய நிலையில் 10.89 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையானது 20 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
மறுபக்கம் ஸ்கோடா ஸ்லாவியா காரின் ஆரம்ப விலையும் 10.89 லட்ச ரூபாயாகதான் உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையானது 19.12 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவையும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய 2 கார்களுமே, இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் 2.0 திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டவையாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்கோடா நிறுவனத்தின் இந்த விலை உயர்வானது, வாடிக்கையாளர்களை நிச்சயமாக பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஸ்கோடா மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதில், இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனமும் அடங்கும்.
கார் நிறுவனங்களை தொடர்ந்து, இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் கூடிய விரைவில் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே புத்தாண்டில், புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் சற்று கூடுதல் விலை கொடுக்க தயாராகி கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








