நம் இந்திய மாணவர்களுக்குள் இப்படியொரு திறமையா... ஸ்கோடா நிறுவனத்தை நிச்சயம் பாராட்டியே ஆகனும்ங்க!!
ஸ்கோடா ராபிட் செடான் (Skoda Rapid Sedan) காரை நமது இந்திய மாணவ, மாணவிகள் அட்டகாசமான கேப்ரியோலெட் தோற்றத்திற்கு மாற்றியுள்ளனர். இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் இதுகுறித்த படங்களையும், இந்த ராபிட் கேப்ரியோலெட் காரை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் கூட்டணியில் உள்ளதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் தான் செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் செயல்படுகிறது. இந்தியாவில் இந்த இரு நிறுவனங்களின் கூட்டணியில் சமீபத்தில் அஸுபி என்ற பெயரில் ஓர் கார் பிராஜெக்ட் செயல்படுத்தப்பட்டது.

ஸ்கோடா அகாடமியை சேர்ந்த 31 இந்திய மாணவ, மாணவிகள் இந்த கார் திட்டத்தில் பங்கேற்றனர். இந்த திட்டத்தில் மாணவர்கள் தங்களது இயந்திர நுட்பவியல், மின் நுட்பவியல் மற்றும் கண்ட்ரோல் சிஸ்டங்கள் பற்றிய அறிவை பயன்படுத்தியது மட்டுமின்றி, கணினி சம்பந்தமான தங்களது கற்றல் திறன்களையும் பயன்படுத்தி ஸ்கோடா ராபிட் கார் ஒன்றை ங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியுள்ளனர்.
இவ்வாறான திட்டத்தை ஃபோக்ஸ்வேகன் குழுமம் வெளிநாடுகளில் ஏற்கனவே நடத்தியுள்ளது. குறிப்பாக, செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா அகாடமி மாணவர்கள் கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து அஸுபி கார் பிராஜெக்ட்டில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்தியாவில் இதுவே முதல்முறை ஆகும். அஸுபி கார் பிராஜெக்ட்டின் 9ஆம் ஆண்டிற்கான செயல் திட்டங்கள் இந்திய மாணவர்களையும் உட்படுத்தி நடத்தப்பட்டுள்ளன.
இதில் நம் நாட்டு மாணவர்கள் ஸ்கோடா ராபிட் செடான் காரை கேப்ரியோலெட் தோற்றத்திற்கு மாற்றியுள்ளனர். அஸுபி பிராகெஜ்ட் முழுக்க முழுக்க அகாடமியில் பயிற்சி பெறும் மாணவ மாணவிகள் தங்களது கற்றல் திறனையும், தங்களது திறமைகளையும் வெளிக்காட்டுவதற்காகவே நடத்தப்படுகிறது. இந்த பிராஜெக்ட்டில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்களது பிராஜெக்ட் நிராகரிக்கப்படுமோ என்ற பயமும், மன குழப்பும் இன்றி செயல்பட முடியும்.

ஏனெனில் இது ஓர் கார் பிராஜெக்ட் அன்றி, போட்டியோ அல்லது பந்தயமோ கிடையாது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்த அஸுபி திட்டமானது இந்திய அரசின் 'திறமை இந்தியா முயற்சி' திட்டத்தின் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது. சரி... ஸ்கோடா அகாடமியை சேர்ந்த இந்திய மாணவர்கள் உருவாக்கியுள்ள ராபிட் கேப்ரியோலெட் காருக்கு வருவோம். எந்தவொரு காரையும் இவ்வாறு மேற்கூரையை அகற்றி வடிவமைப்பது என்பது சவாலான விஷயமாகும்.
இதற்கு நிச்சயமாக கார்களை பற்றிய அறிவியலும், இவ்வாறு மாற்றுவதற்கு தேவையான திறன்கள் மற்றும் திட்டமிடலும் அவசியமாகும். காரின் மேற்கூரையை நீக்கி இருப்பது மட்டுமின்றி, காரின் முன்பக்க பொனெட்டிலும் சில பல மாற்றங்களை மாணவர்கள் செய்துள்ளனர். குறிப்பாக, காரின் பொனெட்டில் எல்இடி விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. காரின் வெளிப்பக்கம் ராயல் நீல நிறத்தில் இருக்க, இருக்கைகள் சிவப்பு நிறத்தில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எந்தவொரு நாட்டிற்கும் இளம் தலைமுறையினர் தான் எதிர்காலம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆதலால் அவர்களது திறமைகளை வெளிக்காட்ட இவ்வாறான திட்டங்களை செயல்படுத்துவது அவசியம் ஆகும். இத்தனை வருடங்களாக வெளிநாடுகளில் மட்டுமே அஸுபி கார் திட்டத்தை செயல்படுத்தி வந்த ஸ்கோடா நிறுவனம் அதனை தற்போது இந்தியாவிலும் செயல்படுத்தி இருப்பது உண்மையில் பாராட்டத்தக்க விஷயமாகும்.


Click it and Unblock the Notifications








