நல்ல கார் ஆச்சே! இனிமேல் பாக்கவே முடியாதா? திடீர்னு விற்பனை நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சி!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த கார்களில் ஒன்று ஸ்கோடா சூப்பர்ப் (Skoda Superb). இது செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போது ஸ்கோடா சூப்பர்ப் காரின் விற்பனை அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து சூப்பர்ப் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமீபத்தில் பிஎஸ்6 பேஸ் 2 (BS6 Phase 2) விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்த விதிமுறைகளுக்கு ஏற்ப ஸ்கோடா சூப்பர்ப் அப்டேட் செய்யப்படவில்லை. இதன் காரணமாகவே இந்திய சந்தையில் ஸ்கோடா சூப்பர்ப் காரின் விற்பனை அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்கோடா சூப்பர்ப் காருடன், ஸ்கோடா ஆக்டேவியா (Skoda Octavia) காரின் விற்பனையும் நிறுத்தப்பட்டு விட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் அந்த காரும், பிஎஸ்6 பேஸ் 2 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்படவில்லை. ஸ்கோடா சூப்பர்ப் மற்றும் ஸ்கோடா ஆக்டேவியா ஆகிய 2 செடான் கார்களுமே தற்போது ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் இணையதளத்தில் இல்லை. எனவே தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனம் ஒரே ஒரு செடான் காரை மட்டுமே விற்பனை செய்கிறது.
அது ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) ஆகும். இதுதவிர ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) ஆகிய கார்களையும் ஸ்கோடா நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனை செய்து கொண்டுள்ளது. இதில், ஸ்கோடா குஷாக் காரானது, மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும்.

அதே நேரத்தில் ஸ்கோடா கோடியாக் காரானது, பிரீமியம் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதற்கிடையே ஸ்கோடா நிறுவனம் சூப்பர்ப் காரை தற்போது விற்பனையில் இருந்து விலக்கியிருந்தாலும் கூட, அதனை அப்டேட் செய்து மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர தயாராகி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
அனேகமாக புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார், வரும் டிசம்பர் மாதத்திற்குள் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து 2024ம் ஆண்டின் தொடக்கத்தில், புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரின் விலை (Price) அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரில், பிஎஸ்6 பேஸ் 2 விதிமுறைகளுக்கு இணக்கமான இன்ஜின் வழங்கப்படவுள்ளது. அத்துடன் பழைய மாடலை காட்டிலும், புதிய மாடலில் ஏராளமான வசதிகளும் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே புதிய ஸ்கோடா சூப்பர்ப், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா சூப்பர்ப், மிகவும் வெற்றிகரமான கார்களில் ஒன்றாகும். அப்படிப்பட்ட ஒரு காரின் விற்பனை தற்போது நிறுத்தப்பட்டிருப்பது, அதன் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் கூடிய விரைவில் ஸ்கோடா சூப்பர்ப் காரின் புதிய மாடல் விற்பனைக்கு வந்து விடும் என்பது உற்சாகமான செய்திதான்.


Click it and Unblock the Notifications








