ஜிம்னியை போல பறக்கும் கார்களையும் விற்பனைக்கு கொண்டு வரபோகிறது சுஸுகி.. இததான் இந்த உலகமே எதிர்பார்த்துச்சு!
இந்தியாவில் இந்திய நிறுவனமான மாருதி (Maruti)-யும், ஜப்பான் நிறுவனமான சுஸுகி (Suzuki)-யும் இணைந்து கார் உற்பத்தி மற்றும் விற்பனை பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதேபோல், உலக நாடுகள் சிலவற்றிலும் கூட்டணியாக அல்லது தனி நிறுவனமாக இருந்து சுஸுகி நிறுவனம் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையிலேயே இந்த ஜப்பான் நிறுவனம் புதிதாக பறக்கும் கார் உற்பத்தியை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக நிறுவனம் இவிடிஓஎல் (Electric Vertical Takeoff and Landing)-ஐ உருவாக்கும் ஸ்கை டிரைவ் (SkyDrive) நிறுவனத்துடன் சுஸுகி மோட்டார் கார்பரேஷன் கூட்டணி அமைத்திருக்கின்றது.

இந்த நிறுவனம் மின்சாரத்தில் செங்குத்தாக டேக்-ஆப் மற்றும் லேண்டாகும் விமானங்களை தயாரிப்பதில் பெயர்போன நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனத்துடனேயே சுஸுகி கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே ஸ்கைடிரைவ் நிறுவனம் பறக்கும் கார் உற்பத்தி பணியில் களமிறங்கியது.
இந்த பணியில் களமிறங்கிய ஓராண்டிற்குள்ளாகவே, அதாவது, 2019 ஆம் ஆண்டிலேயே தனது முதல் பறக்கும் காரை தயாரித்து, அதனை சோதனையோட்டத்திற்கு உட்படுத்தி உலக நாடுகளையே ஸ்கைடிரைவ் அதிர செய்தது. மேலும், பறக்கும் கார் உற்பத்தியில் இந்த அளவு வேகமா என பலரை வாயை பிளக்கச் செய்தது.

நிறுவனம் வெகு விரைவில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தன்னுடைய பறக்கும் கார்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது. இதற்கான முயற்சிகளிலும் நிறுவனம் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதற்காக இரு நாட்டின் விமான போக்குவரத்து துறைகளுடன் அது இணைந்து வேலை செய்து வருகின்றது.
இந்த நிலையிலேயே முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான சுஸுகி உடனான கூட்டணியை ஸ்கைடிரைவ் மேற்கொண்டிருக்கின்றது. சுஸுகி ஏற்கனவே உலக நாடுகள் பலவற்றில் தன்னுடைய கால் தடத்தைப் பதித்துள்ளது. மேலும், இந்தியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளில் அது விற்பனையில் கெத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

மேலும், அதன் வலையமைப்பும் மிக ஸ்ட்ராங்காக உள்ளது. இந்த மாதிரியான ஓர் நிறுவனத்துடன் ஸ்கை டிரைவ் இணைந்திருப்பது அதன் தயாரிப்புக்கும் மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, இந்த இணைவின் கீழ் சுஸுகி அதன் மனித வளத்தை ஸ்கைடிரைவ் நிறுவனத்துடன் பகிர்ந்துக் கொள்ள இருக்கின்றது.
இதுதவிர, உற்பத்தியிலும் தன்னுடைய முக்கிய பங்களிப்பை சுஸுகி, ஸ்கைடிரைவிற்கு வழங்க இருக்கின்றது. ஸ்கைடிரைவ் மற்றும் சுஸுகியின் இணைவில் தயாராகும் பறக்கும் காரை அடுத்த ஆண்டின் தொடக்கத்திலேயே எதிர்பார்க்கலாம் என கூறப்படுகின்றது. இந்த தகவலை இரு நிறுவனங்களின் அதிகாரிகளும் கூட உறுதி செய்திருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன உலகில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக விரைவில் பறக்கும் கார்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. இந்தியாவிலும் இந்த பறக்கும் கார்கள் டாக்சியாக பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. ஆகையால், ஒட்டுமொத்த உலகின் கண் பார்வையும் பறக்கும் கார்களை நோக்கியதாக இருக்கின்றது. இந்த நிலையிலேயே சுஸுகி நிறுவனம் பறக்கும் கார் தயாரிப்பை கையில் எடுத்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications
