மாருதி, ஹூண்டாய் நிறுவனங்களின் சோழியை முடிக்க போகும் டாடா! இந்த விஷயத்தை கேள்விபட்டதும் ஆடி போயிருப்பாங்க!
2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விற்பனையில் 13.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் 40,043 கார்களை விற்பனை செய்துள்ளது.
அத்துடன் இந்தியாவில் இருந்து 364 கார்களை ஏற்றுமதியும் செய்துள்ளது. இதன் மூலம் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 40,407 கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) வெறும் 35,462 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. அதாவது கிட்டத்தட்ட 5 ஆயிரம் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது. இது 13.9 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த எண்ணிக்கையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்த மற்றும் ஏற்றுமதி செய்த எலெக்ட்ரிக் கார்களும் (Electric Cars) அடங்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 3,868 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 2,355 எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் 64.2 சதவீத வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது.
எலெக்ட்ரிக் கார் விற்பனையிலும் வளர்ச்சி, ஒட்டுமொத்த கார் விற்பனையிலும் வளர்ச்சி என கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது. 2022ம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், 2023ம் ஆண்டை பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையுடன் தொடங்குவதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் டியாகோ எலெக்ட்ரிக் காரை (Tata Tiago EV) விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
விலை மிகவும் குறைவு என்பதால், டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. எனினும் முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு, நடப்பு ஜனவரி மாதத்தில் டியாகோ எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு விடும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனவே வரும் மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனையும், ஒட்டுமொத்த கார் விற்பனையும் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகளை தொடங்கவுள்ள அதே நேரத்தில், ஹாரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) ஆகிய 2 கார்களின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதுதவிர பன்ச் (Punch) மற்றும் அல்ட்ராஸ் (Altroz) ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களையும் நடப்பு 2023ம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே நடப்பு 2023ம் ஆண்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிகவும் வெற்றிகரமான ஆண்டுகளில் ஒன்றாக அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த எழுச்சி, மிகவும் முக்கியமான போட்டியாளர்களான மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் ஹூண்டாய் (Hyundai) போன்ற நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் போட்டியை சமாளிக்க மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இதற்கிடையே குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் செயல்பட்டு வந்த ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முழுமையாக கையகப்படுத்தியுள்ளது. எனவே வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி அதிகரிக்கவுள்ளது. இதன் காரணமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை அதிகரிக்கும் என்பதுடன், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு வெகு விரைவில் கார்கள் டெலிவரி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. டாடா வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications