கொடி பறக்குதா! இங்கிலாந்தில் டாடா செய்ய போகும் காரியம்! ஒவ்வொரு இந்தியனும் இதுக்காக பெருமைப்படணும்!
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம்தான் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறது. சுமார் 80-85 சதவீத சந்தை பங்கை (Market Share) டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கையில் வைத்திருப்பது உண்மையிலேயே நமக்கு பிரம்மிப்பை ஏற்படுத்த கூடிய ஒரு விஷயம் ஆகும்.
டாடா டியாகோ இவி (Tata Tiago EV), டாடா டிகோர் இவி (Tata Tigor EV) மற்றும் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்து கொண்டுள்ளது. இவை ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைப்பதுடன், நடைமுறை பயன்பாடுகளுக்கு ஏற்றவையாக இருக்கின்றன.

எனவே இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர். இந்த சூழலில் எலெக்ட்ரிக் வாகன பேட்டரிகளுக்கான மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்றை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமைக்கவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது இந்தியாவில் அல்ல. இங்கிலாந்தில்!
இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், அடுத்த வாரம் இங்கிலாந்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை (Rishi Sunak) அவர்கள் சந்திக்கவுள்ளனர். இதன் முடிவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேட்டரி ஆலை குறித்து பெரிய அளவில் எந்த தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை. எனினும் இங்கிலாந்தில் இதன் மூலம் 9 ஆயிரம் - 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதலில் ஸ்பெயினில் இந்த பேட்டரி ஆலையை அமைப்பது குறித்து யோசித்து கொண்டிருந்ததாக தெரிகிறது.
ஆனால் இந்த பேட்டரி ஆலை தங்கள் நாட்டில் அமைய வேண்டும் என விரும்பிய இங்கிலாந்து அரசாங்கம், பல்வேறு சலுகைகளை வழங்குவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. எனவேதான் இங்கிலாந்தில் பேட்டரி ஆலையை அமைக்கும் முடிவை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தின் சோமர்செட் பகுதியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பேட்டரி தொழிற்சாலை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் மிகவும் வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி கொண்டிருக்கும் நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இங்கிலாந்திற்கு மிகப்பெரிய அளவிலான எலெக்ட்ரிக் வாகன பேட்டரி ஆலை உடனடியாக தேவைப்படுகிறது. இதை நன்றாக உணர்ந்துள்ள காரணத்தால்தான் இங்கிலாந்து அரசாங்கம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை அங்கு முதலீடு செய்ய வைக்க அதீத ஆர்வம் காட்டுகிறது. அனேகமாக இது இங்கிலாந்தின் ஆட்டோமொபைல் துறை வரலாற்றில், மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








