முதல் முறையாக வாகனங்களை அழிக்கும் ஆலையை திறந்த டாடா.. இங்கேதான் எல்லா வாகனத்தையும் சுக்குநூறா நொறுக்க போறாங்க!
இந்தியா வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இனி வாகன உற்பத்தியில் மட்டுல்ல, வாகனங்களை அழிக்கும் (ஸ்கிராப் செய்யும்) பணியிலும் தனது கவனத்தைச் செலுத்த இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக வாகனங்களை அழிப்பதற்கான மிகப் பெரிய கூடத்தை இந்தியாவில் அது திறந்திருக்கின்றது.
ரி.வி.ரி (Re.Wi.Re) என்ற பெயரில் இந்த மையத்தை நிறுவனம் தொடங்கி இருக்கின்றது. இந்தியாவின் முதல் பதிவு செய்யப்பட்ட வாகன அழிப்பு மையம் இது ஆகும். இந்தியாவிற்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக பழைய வாகன பயன்பாடு அமைந்துள்ளது. அதிக வயது கொண்ட வாகனங்கள் அதிகளவு மாசை வெளியேற்றக் கூடியதாக இருக்கின்றன.

இதன் விளைவாக காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதன் காரணமாக அரசு பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து வெளியேற்றுவதில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. டெல்லி போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரங்களில் பழைய வாகனங்களுக்கு எதிராக போர் தொடுக்கின்ற வகையிலான நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மாதிரியான சூழலிலேயே டாடா மோட்டார்ஸ் அதன் வாகன அழிப்பு ஆலையை திறந்து வைத்திருக்கின்றது. இதுவே நிறுவனம் திறக்கும் முதல் வாகன அழிப்பு ஆலையாகும். இங்கு வைத்தே பழைய வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்பட உள்ளன. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரிலேயே வாகன அழிப்பு கூடம் அமைந்து இருக்கின்றது.

இந்த கூடத்தில் வைத்து ஆண்டுக்கு 15 ஆயிரம் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய முடியும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கின்றது. உலக தரம் வாய்ந்த வாகன அழிப்புகூடமாக இது தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியே இந்த ஆலையை திறந்து வைத்தார்.
இதுபோன்று இன்னும் பல வாகன அழிப்பு ஆலைகளை நாட்டில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பதாக அவர் கூறினார். இக்கூடத்தை டாடா மோட்டார்ஸ் வேறொரு நிறுவனத்துடனான கூட்டணியின் வாயிலாகவே இயக்க இருக்கின்றது. கங்காநகர் வாஹன் உத்யோக் பிரைவேட் லிமிடெட் உடனே அது கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது.

இங்கு பயணிகள் வாகனங்கள் மட்டுமின்றி வர்த்தக பயன்பாட்டு வாகனங்களும் அழிக்கப்பட இருக்கின்றன. வாகனத்தை ஸ்கிராப் செய்வதற்கு ஆகும் செலவு பற்றிய விபரம் அறிவிக்கப்படவில்லை. இந்த மையம் முழுக்க முழுக்க பேப்பர் இல்லா டிஜிட்டல் வகையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டயர், பேட்டரி, ஃப்யூவல், ஆயில்கள் மற்றும் கேஸ்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக பிரித்தெடுக்கும் வகையில் இந்த மையம் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
ஆகையால், ஆலையால் எந்த பாதிப்பும் யாருக்கும் நேராது என கூறப்படுகின்றது. மேலும், இதனால் சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. டாடா மோட்டார்ஸ் மட்டுமே வாகனங்களை அழிக்கும் ஆலையை உருவாக்கவில்லை. மாருதி சுஸுகி போன்ற முன்னணி வாகன உற்பத்தியாளர்களும் ஸ்கிராப் மையங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
விரைவில் அந்தந்த நிறுவனங்களின் ஸ்கிராப் ஆலைகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் காற்று மாசுபாட்டைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் இதுவும் ஒன்று ஆகும். தனி நபர் வாகனங்கள் மட்டுமின்றி அனைத்து அரசு துறைகளில் பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகனங்களும் ஸ்கிராப் செய்யப்பட இருக்கின்றன. பழைய வாகனங்கள் அகற்றப்பட்டு புதிதாக மின்சாரம் மற்றும் சிஎன்ஜியால் இயங்கும் வாகனங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
பெங்களூரு, தலைநகர் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே மின்சார பேருந்துகள் பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, மக்களையும் மின் வாகன பயன்பாட்டிற்கு ஈர்க்கும் விதமாக சிறப்பு திட்டங்களை அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில், அண்மையில் தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி சலுகை அறிவிக்கப்பட்டது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








