இன்னும் கொஞ்ச நாள் தான்!! டாடாவில் இருந்து வரிசையா எலக்ட்ரிக் கார்கள் வர போகுது!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான இது 2024ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்குள் புதியதாக 4 எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், டாடா பிராண்டில் இருந்து களமிறக்கப்பட உள்ள புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் என்னென்ன என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.
கார்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்வதில் கடந்த 20 வருடங்களாக ஈடுப்பட்டுவரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகனங்கள் மார்க்கெட்டில் கடந்த சில வருடங்களில் அடைந்திருக்கும் உயரம் மிகப் பெரியது. கஸ்டமர்ஸின் டிரெண்டிற்கு ஏற்ப எஸ்யூவி கார்கள் மட்டுமின்றி, எலக்ட்ரிக் கார்களும் சமீப வருடங்களில் டாடா பிராண்டில் இருந்து வெளிவந்துள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் நெக்ஸான் இவி பிரைம், நெக்ஸான் இவி மேக்ஸ், டியாகோ இவி மற்றும் டிகோர் இவி என 4 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் குறிப்பாக, டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. வழக்கமான எரிபொருள் என்ஜின் கார்களுக்கு மாற்றாக முதல்முறையாக எலக்ட்ரிக் காரை வாங்க நினைக்கும் பலரது தேர்வு நெக்ஸான் இவி ஆகவே உள்ளது.
இந்த நிலையை மேலும் தொடரும் முயற்சியாக மேலும் சில எலக்ட்ரிக் கார்களை சந்தையில் அறிமுகம் செய்ய டாடா நிறுவனம் தயாராகி வருகிறது. நம் நாட்டில் அளவில்-சிறிய கார்களை வாங்குவோரே அதிகம். மற்ற ரக கார்களை காட்டிலும் எஸ்யூவி ரக கார்களே மக்களை அதிகம் கவர்கின்றன. ஆதலால், காம்பெக்ட்-எஸ்யூவி உடலமைப்பில் எலக்ட்ரிக் காரை கொண்டுவர கடந்த சில வருடங்களாகவே டாடா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இதற்காக கர்வ் எஸ்யூவி கான்செப்ட்டையும் டாடா நிறுவனம் தயாராக வைத்துள்ளது. கர்வ் கான்செப்ட்டின் அடிப்படையில் எலக்ட்ரிக் கார் ஒன்று மட்டுமின்றி, எரிபொருள் என்ஜின் கார் ஒன்றையும் களமிறக்க டாடா மோட்டார்ஸ் முனைப்புடன் உள்ளது. கர்வ் கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்படும் டாடா எஸ்யூவி கார் ஆனது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா போன்ற பிரபலமான காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்வ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் உள்பட அடுத்த 2024ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் புதியதாக 4 எலக்ட்ரிக் கார் மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்த டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் முதலாவதாக, தற்போதைய நெக்ஸான் இவி-இன் அப்டேட் வெர்சன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை சமீபத்திய பங்குத்தாரர்கள் உடனான கலந்துரையாடலின் போது டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன் உறுதிப்படுத்தி உள்ளார்.

எங்களுக்கு தெரிந்தவரையில், அப்டேட் செய்யப்பட்ட புதிய டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரின் அறிமுகம் வருகிற தீபாவளி பண்டிகை காலத்தில் இருக்கலாம். நெக்ஸான் இவி மட்டுமின்றி, எரிபொருள் என்ஜின் உடன் இயக்கும் நெக்ஸான் காரும் விரைவில் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்டேட் செய்யப்பட உள்ளது. நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் காரை தொடர்ந்து பஞ்ச் இவி, ஹெரியர் இவி மற்றும் கர்வ் இவி எலக்ட்ரிக் கார்கள் 2024ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் அடுத்தடுத்ததாக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
இதில் பஞ்ச் இவி மற்றும் ஹெரியர் இவி எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இருக்கும் பஞ்ச் மற்றும் ஹெரியர் கார்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக இருக்கும். அதாவது, நெக்ஸான் - நெக்ஸான் இவி -இல் பயன்படுத்திய அதே ஃபார்முலாவையே இந்த எலக்ட்ரிக் கார்களிலும் டாடா பயன்படுத்தும். இதனால், டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் அறிமுகத்தையே பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். எதிர்காலத்தில் ஜாகுவார் நிறுவனத்துடனும் இணைந்து எலக்ட்ரிக் கார்களை உருவாக்க டாடா நிறுவனம் யோசித்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: 2030ஆம் ஆண்டிற்குள் சந்தையில் விற்பனை செய்யும் கார்களில் பாதியை எலக்ட்ரிக் கார்களாக மாற்றும் நோக்கத்துடன் டாடா மோட்டார்ஸ் செயல்பட்டு வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் கார்பன் மாசு உமிழ்வை குறைப்பதுதான் டாடா மோட்டார்ஸின் கொள்கையாக உள்ளது. அதேநேரம் டாடாவுக்கு போட்டியாக எலக்ட்ரிக் கார்களை களமிறக்கும் முயற்சியில் ஹூண்டாய், மஹிந்திரா போன்ற நிறுவனங்களும் ஈடுப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications









