இன்னும் 9 நாள்ல லாரி, பஸ், ஆட்டோ வாங்குனா தான் லாபம்! ஏப்1க்கு பிறகு விலை எக்குத் தப்பா ஏறப்போகுது!
இந்தியாவில் பிஎஸ் 6 மாசுக் கட்டுப்பாட்டின் 2ம் கட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி ஏப்.1ம் தேதிக்குப் பிறகு இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்களில் இன்ஜினிலிருந்து எவ்வளவு மாசு வெளியேறுகிறது என்பதை ரியல் டைமில் கண்காணிக்கும் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மாசு வெளியேறினால் அந்த கருவி கண்டு பிடித்துவிடும். அப்படி அந்த கருவி கண்டுபிடித்தால் அது நேரடியாக டிரைவருக்கு அதிக மாசு வெளியேறுவதை எச்சரிக்கும். உடனடியாக வாகன உரிமையாளர் வாகனத்தை சர்வீஸ்க்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது.

இந்த மாற்றம் காரணமாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் இன்ஜினில் மாற்றம் கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. இந்த கருவியினால் உற்பத்தி செலவு அதிகமாகிறது. இதன் காரணமாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் வாகனத்தின் விலையை தாறுமாறாக ஏற்றப்போவதாக நமக்குத் தெரியவந்தது.
இந்நிலையில் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த கட்டுப்பாடுகளுடன் அடங்கிய இன்ஜினை பொருத்தி காரை அப்டேட் செய்து அறிமுகப்படுத்தும் போதே இந்த விலையேற்றம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு விட்டனர். கார்களுக்கு எல்லாம் ரூ10 ஆயிரம் முதல் ரூ50 ஆயிரம் வரை விலையேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டாடா நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய கமர்ஷியல் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனமும் இந்த பிஎஸ் 6-ன் 2ம் கட்ட கட்டுப்பாட்டிற்கு ஏற்றார் போல இன்ஜினை மாற்ற வேண்டியது உள்ளதால் விலையேற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் விற்பனை செய்யும் வாகனங்களின் விலையை 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த விலையேற்றம் வரும் ஏப்1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து டாடா நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் "டாடா நிறுவனம் தனது வாகனங்களை பிஎஸ் 6 மாசுக் கட்டுப்பாட்டின் 2ம் கட்ட விதிகளுக்கு ஏற்றவாறு மாற்றும் பணியில் இருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கிளீனான, பசுமையான, அதிக தொழிற்நுட்பங்கள் நிறைந்த வாகனங்களை எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில் இதைத் தயாரிக்கும் செலவு அதிகமாவதால் விலையேற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களின் விலையும் ஏற்றப்படவுள்ளது." எனக் குறிப்பிட்டிருந்தது. விலையேற்றம் என்பதைப் பொருத்தவரை 5 சதவீதம் இருக்கும் எனவும் வாகனத்திற்கு வாகனம் விலையேற்றம் மாறுபடும் என்றும் தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் ஏப்.1ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தீவிரமாக அவர்கள் தயாரிப்புகளை அந்த கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும் டீலர்களிடம் உள்ள ஸ்டாக்கையும் குறைத்து வருகின்றனர்.
சில நிறுவனங்கள் முன்னதாக திட்டமிட்டுக் கடந்த பிப்ரவரி மாதமே இந்த கட்டுப்பாட்டிற்குத் தகுந்த வாகனங்களைத் தயாரித்து விற்பனைக்கு அனுப்பத் துவங்கிவிட்டனர். சில மார்ச் மாதம் செய்கின்றனர். வெகு சில நிறுவனங்களே ஏப் மாதத்தில் தான் இதைச் செய்யக் காத்திருக்கின்றனர். இந்த கட்டுப்பாட்டிற்குள் இல்லாத வாகனங்களைத் தள்ளுபடி விலையில் எல்லாம் விற்பனை செய்தனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








