Tata Motors-ஐ இந்த விஷயத்தில் யாராலும் நெருங்க கூட முடியல... மார்ச்சில் எத்தனை கார்களை விற்றுள்ளது தெரியுமா?
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை முழுமையாக இனி பார்க்கலாம்.
இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டாக மாருதி சுஸுகி இருக்க, அதற்கடுத்த 2வது இடத்திற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. ஆனால் சமீப மாதங்களாக இந்த போட்டியில் டாடா நிறுவனம் சற்று பின்வாங்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இது கடந்த 2023 மார்ச் மாத விற்பனையிலும் வெளிப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் 50,600 கார்களை விற்பனை செய்திருக்க, டாடா மோட்டார்ஸால் 44,044 கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்துள்ளது. இருப்பினும் இந்த விற்பனை எண்ணிக்கை ஆனது டாடா மோட்டார்ஸின் கடந்த 2022 மார்ச் மாத விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் 1,578 யூனிட்கள் அதிகமாகும். அதாவது, 2022 மார்ச் மாதத்தை காட்டிலும் கடந்த 2023 மார்ச்சில் டாடா மோட்டார்ஸ் 1,500க்கும் அதிகமான கார்களை கூடுதலாக விற்பனை செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸின் 2022 மார்ச் மாத உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை 42,466 ஆகும். இந்த நிறுவனத்தால் கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 44,044 கார்களில் 6,509 எலக்ட்ரிக் கார்களும் அடங்குகின்றன. இந்திய சந்தையில் எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் தீவிரம் காட்டும் கார் பிராண்ட்களுள் டாடா முதன்மையானதாக விளங்குகிறது. ஏனெனில் இந்திய போக்குவரத்தின் எதிர்காலம் எலக்ட்ரிக்கை நம்பியே இருக்கும் என்பதை டாடா நிறுவனம் நன்கு புரிந்து கொண்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்துடன் 2022-23 நிதியாண்டு நிறைவடைந்தது. கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் (2023 ஜனவரி - மார்ச்) மொத்தம் 1.35 லட்ச எரிபொருள் என்ஜின் கார்களையும், 16,000 எலக்ட்ரிக் கார்களையும் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. இதில் குறிப்பாக, டாடா எலக்ட்ரிக் கார்களின் விற்பனை ஒவ்வொரு வருடமும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
3 மாதங்களில் 16,000 கார்கள் விற்பனை என்றால், 2023இல் ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 5,000க்கும் அதிகமாக எலக்ட்ரிக் கார்களை டாடா விற்பனை செய்து வந்துள்ளது. டாடா மோட்டார்ஸின் எலக்ட்ரிக் கார்கள் என்று பார்த்தால் தற்சமயம் டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி மற்றும் நெக்ஸான் இவி பிரைம் உள்ளிட்டவை உள்ளன. தற்போதைக்கு இந்தியாவில் இத்தனை எலக்ட்ரிக் கார்களை வேறெந்த கார் நிறுவனமும் விற்பனை செய்வது இல்லை.

எலக்ட்ரிக் கார்களை போன்று, எஸ்யூவி ரக உடலமைப்பை கொண்ட கார்களே தற்சமயம் சந்தையில் டிரெண்டிங்காக உள்ளன. அதாவது, நிமிர்ந்த உடலமைப்பை கொண்ட கம்பீரமான எஸ்யூவி கார்களை வாங்கவே நமது இந்தியர்கள் விரும்புகின்றனர். டாடா பிராண்டில் நெக்ஸான், பஞ்ச், ஹெரியர் மற்றும் சஃபாரி என 4 எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் நெக்ஸானை தொடர்ந்து, வரும் ஆண்டுகளில் பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி காரும் எலக்ட்ரிக் வெர்சனை பெற உள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
கடந்த 2022ஆம் ஆண்டின் மத்தியில் ஒரு சில மாத விற்பனையில் ஹூண்டாயை டாடா முந்தியது. ஆனால் அதன்பின் சூதாரித்து கொண்ட ஹூண்டாயை டாடாவால் முந்த முடியவில்லை. இது கடந்த மார்ச் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. ஆனால் இதற்கெல்லாம் டாடா மோட்டார்ஸ் வருந்தாது என்றே நினைக்கிறோம். ஏனெனில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் மற்ற நிறுவனங்கள் அனைத்திற்கும் சிம்ம சொப்பனமாக டாடா விளங்குகிறது.


Click it and Unblock the Notifications









