எர்டிகா, இன்னோவா எல்லாம் ஒரமா போ! டாடா மீண்டும் தனது சுமோ காரை வெளியிட திட்டம்?
டாடா நிறுவனம் எர்டிகா மற்றும் இன்னோவா ஆகிய கார்களுக்கு போட்டியாக புதிதாக எம்பிவி கார் ஒன்றை தயாரித்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனம் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக கார்களை தயாரித்து விற்பனை செய்து வந்தாலும், சமீபத்தில் நிறுவனம் வெளியிட்ட கார்கள் எல்லாம் மார்கெட்டில் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது. குறிப்பாக நிறுவனத்தின் கார்கள் எல்லாம் தரமான பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக இருப்பதால் விற்பனை தாறுமாறாக ஏறி வருகிறது.

தற்போது நிறுவனம் விற்பனை செய்து வரும் எல்லா கார்களும் மார்க்கெட்டில் மிகப்பெரிய ஹிட்டான கார்களாக இருக்கின்றன. எஸ்யூவி செக்மெண்டில் டாடா நிறுவனம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் டாட்டா நிறுவனத்திடம் இரண்டு செக்மெண்டில் தற்போது கார்களே இல்லை என்ற நிலை இருக்கிறது. ஒன்று செடான் செக்மென்ட் மற்றொன்று எம்பிவி செக்மென்ட்.
இதில் செடான் செக்மெண்டில் இந்தியா முழுவதும் விற்பனையாகி வரும் கார்களின் விற்பனை எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் டாடா நிறுவனம் அடுத்து புதிதாக எந்த காரையும் வெளியிடாது என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எம்பிவி செக்மென்ட் இந்தியாவில் தொடர்ந்து குடும்ப பயணங்களை விரும்பும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இதனால் இந்த செக்மெண்டில் டாடா நிறுவனம் புதிதாக காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

இது குறித்து ஏற்கனவே டாடா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா உறுதி செய்துள்ளார். நமக்கு கிடைத்த தகவலின் படி டாடா நிறுவனம் தனது அவ்னியா கான்செப்ட் காரை ஒரு எம் பி வி காராக இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. வரும் 2025 ஆம் ஆண்டு இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே டாடா நிறுவனத்திடம் சுமோ, அரியா போன்ற பெயர்களில் கார்கள் விற்பனையாகி வந்தன. அவையெல்லாம் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் டாடா நிறுவனம் மீண்டும் தனது புதிய எம்பிவிகளுக்கு இந்த காரின் பெயரை வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இதையெல்லாம் விட்டுத் தள்ளி விட்டு புதிதாக ஒரு பெயரை யோசித்து இந்த காருக்கு வைக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

டாடா நிறுவனத்தின் இந்த எம்பிவி கார் குறித்து சைலேஸ் சந்திரா அதிகமான தகவல் எதையும் தெரிவிக்கவில்லை. இதற்கான பணியில் டாட்டா இறங்கி உள்ளது என்ற தகவல் மட்டுமே தெரிவித்துள்ளார். இருந்தாலும் நமக்கு கிடைத்த தகவலின் படி டாடா நிறுவனம் இந்த காரை ஒமேகா ஆர்க் பிளாட்ஃபார்மில் தான் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த காருக்காக புதிய பிளாட்ஃபார்மை கூட டாட்டா நிறுவனம் உருவாக்க வாய்ப்பு உள்ளது.
இந்த காரின் அம்சங்கள் இன்ஜின் குறித்து எல்லாம் விவாதிக்க இது கார் தயாரிப்பு மிகவும் துவக்க நிலையில் இருப்பதால் சாத்தியமில்லாமல் இருக்கிறது. இருந்தாலும் இந்த காரில் 1.5லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் தான் கர்வ் காரின் பெட்ரோல் இன்ஜின் வெர்ஷனில் இடம்பெறப் போகும் இன்ஜினாக இருக்கிறது. இதே இன்ஜினை கொண்டு tata நிறுவனம் தனது எம்பிவி காரையும் அறிமுகப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.

டாடாவின் இந்த புதிய எம்பிவி கார் விற்பனைக்கு வந்தால் தற்போது மார்க்கெட்டில் உள்ள மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஆகிய இரு கார்களுக்கும் பெரும் போட்டியாக இந்த கார் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மூன்று வரிசை சீட்டர் கொண்ட காராக இருப்பதால் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற காராக இருக்கும். அதிக இட வசதிகள் மற்றும் பிராக்டிகாலிட்டி அம்சங்களுடன் இந்த கார் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனத்தின் சுமோ காருக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இந்த கார் நிறுத்தப்பட்டாலும் இன்று வரை இந்த காரை மக்கள் யாரும் மறக்கவில்லை. இந்நிலையில் டாடா நிறுவனம் தனது புதிய எம்பிவி காருக்கு சுமோ என பெயர் வைத்தால் அந்த பெயருக்காகவே இந்த காரின் விற்பனை சிறப்பாக இருக்கலாம். இந்த பெயரை வைக்கிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Click it and Unblock the Notifications









