இந்த டாடா நானோ எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜில் 150 கிமீ பயணிக்கும்.. சிட்டியின் நெரிசலான சாலைக்கு ஏற்ற இ-கார்!
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓர் நிறுவனம் டாடா நானோ எலெக்ட்ரிக் காரை உருவாக்கி அசத்தி இருக்கின்றது. இந்த மின்சார வாகனம் ஓர் ஃபுல் சார்ஜில் 150 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
அடித்தட்டு மக்களுக்கும் கார் எனும் திட்டத்தின்கீழ் ரத்தன் டாடாவின் கனவு வாகனமாக இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதே டாடா நானோ. இந்த காருக்கு மிகப் பெரிய இந்தியாவில் உள்ளது. ஒரு லட்ச ரூபாய் என்கிற மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு வந்த முதல் கார் மாடல் இதுவே ஆகும். உலகின் மிக மிக மலிவு விலை கார் மாடலும் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

150 கிமீட்டர் பயணிக்கலாம்
இந்த கார் தற்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை. அதேவேளையில், இதைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் இப்போதும் பலர் இருக்கின்றனர். முக்கிய நகரங்களின் சாலையில் இந்த காரின் நடமாட்டத்தை நம்மால் காண முடிகின்றது. இந்த நிலையிலேயே, கோயம்பத்தூரை மையமாகக் கொண்டு இயங்கும் ஜெயம் ஆட்டோமோட்டிவ் எனும் நிறுவனம், நானோவை மின்சார காராக மாற்றி இருப்பதாகவும், அந்த வாகனம் ஓர் முழு சார்ஜில் 150 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ஜை வழங்கும் என்கிற ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயம் நியோ
மின்சார காராக மாறியிருக்கும் டாடா நானோ காருக்கு அந்நிறுவனம் ஜெயம் நியோ என்கிற பெயரை வைத்திருக்கின்றது. பெயரை மாத்தலைங்க, நிறைய விஷயத்தை இந்த காருல மாடிஃபிகேஷன் நிறுவனமான ஜெயம் ஆட்டோமோட்டிவ் செய்திருக்கின்றது. மிக முக்கியமாக பெட்ரோல் மோட்டார்கள் இருந்த இடத்தில் மின்சார வாகனத்திற்கு தேவையான பாகங்கள் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதேபோல், பெட்ரோல் டேங்கிற்கு பதிலாக பேட்டரி பேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

நிறைய மாற்றம் செஞ்சிருக்காங்க
இதுதவிர சில பகுதிகளில் பாடி பேனல்கள் அகற்றப்பட்டு இருக்கின்றன. எலெக்ட்ரிக் வாகன மாடிஃபிகேஷனுக்காக இந்த செயல்களை எல்லாம் ஜெயம் ஆட்டோமோட்டிவ் செய்து உள்ளது. ஆனால், இதன் டைமென்ஷன் மற்றும் இன்டீரியரில் எந்த மாற்றத்தையும் நிறுவனம் செய்யவில்லை. எனவே, சாலையில் இதன் தோற்றம் டாடா நானோ கார் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலேயே இருக்கின்றது. காரின் உட்பகுதியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.
பெரிய திரை
அந்தவகையில், புதிதாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. நியோவாக மாறியிருக்கும் நானோவிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட க்ளஸ்டர் இதுவாகும். இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகள் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் மின்சார வாகனம் இப்போது பலமடங்கு பிரபலமடைந்து காணப்படுகின்றது. ஆனால், இந்த நியோ உருவாக்க திட்டமானது இதற்கு முன்னதாகவே போடப்பட்டதாகக் காட்சியளிக்கின்றது.

நிறைய ஆர்டர் வந்திட்டே இருக்கு
மத்திய, மாநில அரசுகளின் மானிய திட்டம் அப்போது வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழலில் தொடங்கப்பட்ட மின்வாகன மாற்றம் செய்யும் பணியே தற்போது வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதுவரை 400- 500 வாகனங்கள் வரை மின்சார வாகனங்களாக மாற்றுவதற்காக நிறுவனத்திற்கு ஆர்டர் கிடைத்திருப்பதாக கூறப்படுகின்றது. அவ்வாறு கிடைக்கப்பெற்ற ஆர்டரின் பேரிலேயே டாடா நானோ தற்போது மின்சார வாகனமாக மாற்றப்பட்டு இருக்கின்றது.
80 கிமீ வேகத்தில் பயணிக்கும்
இந்த வாகனம் மணிக்கு 80 கிமீ முதல் 85 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. நகர்புற சாலைகளுக்கு ஏற்ற வாகனமாக இதனை ஜெயம் நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே நடுத்தரமான வேக திறன் கொண்ட மோட்டார் இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. 15 Kw மோட்டார் இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது அதிகபட்சமாக 23 பிஎச்பி பவரையும், 45 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
200 கிமீ வரை பயணிக்கலாம்
இந்த காரில் ஓர் முழு சார்ஜில் 200 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை நகர்புற சாலையில் வைத்து பயன்படுத்தும்போது 150 கிமீ வரை மட்டுமே ரேஞ்ஜ் தரும். இந்தியாவில் டாடா நானோ கார் மின்சார காராக மாற்றப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுபோல் நானோ மின்சார காராக மாற்றப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, வேறு உருவம் கொண்ட மின்சார வாகனமாகவும் அது மாற்றப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








