டெலிவரி எடுத்த கொஞ்ச நேரத்தில் பிரேக் டவுன் ஆன புத்தம் புதிய கார்! அவங்களோட தயாரிப்பா இது! மானமே போச்சு!
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெருமையை டாடா மோட்டார்ஸ் (Tata Motors), தன் கைவசம் வைத்துள்ளது. டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் டாடா டிகோர் இவி (Tata Tigor EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்கள்தான் இதற்கு காரணம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தற்போது ஒட்டுமொத்தமாக 1 லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து பிரம்மாண்டமான சாதனையை படைத்துள்ளது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் விதமாக, வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் தரமானதாகவும், அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் இருப்பதால்தான், வாடிக்கையாளர்கள் அமோக ஆதரவை வாரி வழங்கி வருகின்றனர். ஆனால் குஜராத் மாநிலத்தில் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் பரிதாபகரமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆம், டெலிவரி எடுக்கப்பட்ட வெறும் 10 மணி நேரத்திற்கு உள்ளாகவே டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார் பிரேக் டவுன் ஆகியுள்ளது. இதன் காரணமாக தனக்கு புதிய காரை வழங்க வேண்டும் அல்லது பணத்தை முழுமையாக திருப்பி வழங்க வேண்டும் என அந்த வாடிக்கையாளர் சமூக வலை தளமான ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் கடந்த ஜூலை 14ம் தேதி மதியம் 1.30 மணியளவில் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை டெலிவரி எடுத்துள்ளார். அப்போது காரில் அனைத்தும் நன்றாக இருப்பதை போல்தான் இருந்தது. எனவே அந்த வாடிக்கையாளர் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை உற்சாகமாக டெலிவரி எடுத்து கொண்டார்.
ஆனால் இரவு 11 மணியளவில் கார் திடீரென பிரேக் டவுன் ஆகி சாலையில் நின்று விட்டது. அப்போது அவர் வெறும் ஒட்டுமொத்தமாக வெறும் 15-20 கிலோ மீட்டர்கள் மட்டுமே காரை ஓட்டியிருந்தார். கார் பிரேக் டவுன் ஆகி நின்றது தொடர்பான வீடியோ (Video) மற்றும் புகைப்படங்களை (Pictures) அவர் ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில் ஒரு புகைப்படத்தில் பிரச்னைக்குரிய டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை நம்மால் காண முடிகிறது. அதில் 'Critical Alert' என்ற மெசேஜ் காட்டப்படுவதை நாம் பார்க்கலாம். அத்துடன் சர்வீஸ் சென்டரை தொடர்பு கொள்ளவும் என்ற செய்தியையும் அது கூறுகிறது.
எனவே அந்த வாடிக்கையாளர் உடனடியாக சர்வீஸ் சென்டரை தொடர்பு கொண்டுள்ளார். இதன்பேரில் பிரேக் டவுன் ஆகி நின்ற டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு வருவதற்கு அவர்கள் வேறு ஒரு வாகனத்தை அனுப்பி வைத்தனர். இதன்பின் கார் கூடிய விரைவில் பரிசோதனை செய்யப்படும் என மறுநாள் காலை சர்வீஸ் சென்டரில் இருந்து வாடிக்கையாளருக்கு தகவல் கிடைத்தது.
அடுத்த ஒரு சில மணி நேரத்தில் சர்வீஸ் சென்டரில் இருந்து, அந்த வாடிக்கையாளரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது PSA என்ற பாகத்தை மாற்றியதன் மூலம் பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டதாக கூறியுள்ளனர். ஆனால் புத்தம் புதிய காரில் பிரச்னை ஏற்பட்டதால், வாடிக்கையாளருக்கு இது திருப்தியை ஏற்படுத்தவில்லை.
டெலிவரி எடுத்த 10 மணி நேரத்தில் பிரச்னை உருவானதால், அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். எனவே மீண்டும் காரை டெலிவரி பெற்று கொள்வதற்கு அவர் மறுத்து விட்டார். இது குறித்து காரை விற்பனை செய்த டீலர்ஷிப்பிற்கும், வாடிக்கையாளருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கூடுதல் சலுகைகளை வழங்குவதாக டீலர்ஷிப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதை எல்லாம் ஏற்றுக்கொள்ள வாடிக்கையாளர் மறுத்து விட்டார். இதன்பின் நாளடைவில் டீலர்ஷிப்பில் இருந்து வாடிக்கையாளருக்கு செல்போன் அழைப்புகள் வருவது அடியோடு நின்று போனது. கிட்டத்தட்ட டீலர்ஷிப் நிர்வாகம் இந்த பிரச்னையை மறந்து விட்டது என்பதுதான் இதற்கு அர்த்தம். எனவே வேறு வழி இல்லாமல், ட்விட்டரில் தனக்கு நடந்த விஷயங்களை எல்லாம் அவர் கொட்டி தீர்த்து விட்டார்.
அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் ட்விட்டரில் இந்த விஷயங்களை பதிவிட்டு சுமார் ஒரு வார காலம் ஆகி விட்டது. எனவே இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடந்தது? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த தகவல் எங்களுக்கு கிடைக்கும்பட்சத்தில், கண்டிப்பாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல லட்ச ரூபாய் கொடுத்து புத்தம் புதிய காரை வாங்கிய உடனேயே பிரச்னை என்றால் கண்டிப்பாக யாருக்காக இருந்தாலும் கஷ்டமாக இருக்கும். இந்த பிரச்னையில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் பல்வேறு கனவுகளுடன், காரை டெலிவரி எடுத்திருப்பார். எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த பிரச்னையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








